Tuesday 31 December 2013

டிசம்பர் 31 – செல்வத் திருநாள்

டிசம்பர் 31, 1879. வரலாற்றின் மிக முக்கிய நாள் என நான் கருதுகிறேன். என் கருத்தில் அது செல்வத் திருநாள். உங்கள் அனைவருக்கும் என் செல்வத் திருநாள் வாழ்த்துக்கள்.

அதென்ன வரலாற்றின் மிக முக்கிய நாள்? நாம் நாட்களை மதத்தோடும் நாட்டோடும் மட்டுமே நோக்குகிறோம். ஆகஸ்ட் 15, 1947 இந்தியாவின் சுதந்திர தினம், ஆகஸ்ட் 14 பாகிஸ்தானுக்கு; ஜூலை 4, 1776 அமெரிக்காவிற்கு சுதந்திர தினம். அக்டோபர் 25 [ருஷிய பஞ்சாங்கத்தில் நவம்பர் 7] 1917 ருஷிய புரட்சி தினம். மாவோவின் நெடும் பயண தொடக்கம், பெர்லின் சுவர் விழுந்த நாள், பிரஞ்சு புரட்சி நாள், கிழக்கு இந்தியா கம்பெனி ஜார்ஜ் கோட்டை கட்ட கிடைத்த நாள் ஆகஸ்ட் 22; அக்டோபர் 2, காந்தி பிறந்தநாள்; நவம்பர் 14 குழந்தைகள் தினம். இவை அந்தந்த தேசங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

மத ரீதியாக, டிசம்பர் 25 யேசு பிறந்தநாள்.  புத்த பூர்ணிமா, வர்த்தமான மஹாவீரர் ஜெயந்தி, விநாயக சதுர்த்தி, ராம நவமி, வைகுந்த ஏகாதேசி, தை பூசம், கந்த சஷ்டி - இவை எல்லாம் இந்திய பஞ்சாங்கத்தின் மரபு வழி வருவதால் கிறுஸ்துவ நாள்காட்டி நாளில் விழுவதில்லை. சீன புத்தாண்டு, பாரசீக புத்தாண்டு, இஸ்லாமிய விழா நாட்கள் இவையும் கிறுஸ்துவ பஞ்சாங்க வழி வருவதில்லை. மய நாகரீக யுகத்தொடக்கம் சமீப புதுமை. இவை அந்தந்த மதங்களுக்கே பொருந்தும்.

மகர சங்கராந்தி, தமிழ் வருட பிறப்பு, யுகாதி போன்ற வானியல் தொடர்புடைய நாட்களும் தொழிலாளர் தினம், காதலர் தினம், மாதர் தினம் இவற்றில் சேரா.

நிற்க. ஒரு சின்ன வரலாற்று புதிர். 1879-இல் யார் இந்திய வைஸ்ராய்? மதறாஸின் ஆளுநர்? இங்கிலாந்தில் பிரதமர், அரசர்? ஜப்பானில், சீனாவில், பர்மாவில், துருக்கியில், எகிப்தில், பாரசீகத்தில், ஜெர்மனியில், ருஷியாவில்? அமெரிக்க பிரஞ்சு ஜனாதிபதிகள் யார்? வரலாற்றில் முக்கியமான நாள் என்று நான் கருதினால் இவர்களில் யாரேனும் ஒருவர் ஏதாவது முக்கிய சாதனைகள் செய்திருக்க வேண்டுமே? ஒரு போர், ஒரு முக்கிய சட்டம், சீர்திருத்தம், தானம், திருமணம்…. வாசகர் பலருக்கு அன்றைய ஆட்சியாளரோ மதகுருக்களோ யார் என்று தெரிந்திருந்தால் கொஞ்சம் அதிசயம் தான்.

அப்படி என்ன தான் நடந்தது அன்று? இரு நாடுகளில் இரு வேறு சம்பவங்கள்: ஒன்று படாடோப அமர்க்களமாக, பத்திரிகையில் பரப்பரப்பு கிளப்பி, கண்டவரை மிரளச்செய்து இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி. மற்றது அவை இல்லாமல். ஆனால் அரசியல் மத சம்பவங்களை விட மிக பிரம்மாண்டமாக, வரலாற்று திருப்புமுனையாக, உலகில் பல நூறு கோடிகள் பயனுற, செல்வம் வெடித்து பெறுக, சமூகங்களின் புது யுகமாக.

தாமஸ் ஆல்வா எடிஸன்
முதல் சம்பவம்: தாமஸ் ஆல்வா எடிஸன், மென்லோ பார்க் என்னும் இடத்தில் நூற்றுக்கணக்கான மின் விளக்குகளை ஏற்றி மக்களுக்கு மின்சார யுகத்தை தொடக்கி வைத்தார். இதற்கு முன் தந்தி ஒன்றே மின்சாரத்தின் முக்கிய கருவியாக இருந்தது.

இரண்டாம் சம்பவம்: ஜெர்மனியில் கார்ள் பென்ஸ் பெட்ரொல் என்ஜினை ஒரு குதிரை வண்டியில் பொருத்தி, ஓட்டி, கார் யுகத்தை தொடங்கி போக்குவரத்து பெரும்புரட்சி ஆற்றினார். காரை இயக்கும் கார்புரெட்டர், கிளட்ச், கியர் ஷிஃப்ட், ஸ்பார்க் ப்ளக் ஆகிய முக்கிய துணைக்கருவிகளையும் இவர் படைத்தார். எமில் லெவஸார், காட்லீப் டைம்லர், வில்லியம் மேபக், ருடோல்ஃப் ஆக்கர்மன் ஆகியோரின் படைப்புகளும் கார்களின் பரிணாம வளர்ச்சிக்கு வழிவகுத்தது. ஆனால் கார் பாமர மனிதர்களும் வாங்கும் அளவு மலிவான பொருளாக மாற்றிய பெரும் புகழ் ஹென்ரி ஃபோர்ட்டுக்குச் சேரும்.

கார்ள் பென்ஸ் 
கார் யுகமும் மின்சார யுகமும் உலகின் செல்வப் பெருக்கு மிக முக்கிய காரணிகள். எடிசனுக்கு பின் நிக்கோலா டெஸ்லா, வெஸ்டிங்கவுஸ், சார்லஸ் பார்ஸன்ஸ் போன்றோர் மின்சார யுகத்தின் முக்கிய இயக்குனர்கள்.

டிசம்பர்31 : வரலாற்றின் முக்கிய நாளாக கொண்டாட வேண்டும். தேசிய மத எல்லைக்குள் இன்னாளை வைக்கமுடியாது. விசை திரு நாள் என்று நினைத்தலும், செல்வத் திருநாள் என்று நினைத்தலும் தகும்.


பென்ஸ் வெலோ - விற்பனைக்கு வந்த முதல் கார் 


5 comments:

  1. ரொம்ப அருமை கோபு.. சிறப்பான, புதிய யோசனை..
    தொடர்ந்து நாம் பயன்படுத்தி வரும் பொருட்களை கண்டு பிடித்தவர், நாள், இரண்டும் போடுங்கள்..
    100% அறிவியல் ஆய்வு பாணியிலேயே வாழ்ந்து, நம் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் காந்திக்கு (மகாத்மா அல்ல, காந்திஜியும் அல்ல ) பிடித்தது, நம்மையும் அது போல வாழந்து பார்த்து, பரிசோதிக்கச் சொன்னது இந்த அறிவியல் ஆய்வு, ஏற்றுக்கொள்ளும் மனம் தான்..
    தொடர்ந்து போடுங்கள்..
    எனக்குப் பிடித்த கெமிஸ்ட்ரி சமந்தப்பட்ட கண்டுபிடிப்பு, நாம் பயன்படுத்தும் அந்த கெமிகல் பற்றியும் போடுங்கள்..
    -மோகன்

    ReplyDelete
  2. ஆஹா... புதிய தகவல்களின் களஞ்சியம்

    ReplyDelete
  3. அருமையான பதிவு...

    ReplyDelete
  4. செல்வத் திருநாள். ... வாசிக்க மட்டுமல்ல... நிறைய யோசிக்கவும் வைத்திருக்கிறது. கடந்த காலங்களின் ஒரு நீண்ட நெடிய வளர்ச்சி பயணத்தின் நல்லதொறு தொகுப்பு. வாசித்ததில் நேசித்தது.

    ReplyDelete