Showing posts with label கீழ்வாலை. Show all posts
Showing posts with label கீழ்வாலை. Show all posts

Friday, 2 May 2014

பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு

கற்கால கல்வெட்டு கல்
கீழ்வாலை பாறை ஓவியங்களை பார்க்க போனால், அங்கு சில காட்சிகள் அடிப்படை வரலாற்றை புரட்டி போட்டன. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. முதலில் பார்த்த அதிர்ச்சி பண்டைக்கால கல்வெட்டு.


பாண்டுரங்கன் கல்வெட்டு
பிராமி, வட்டெழுத்து, கிரந்தம் எல்லாம் தாண்டி நவீன தமிழில் அறியா வம்சத்தின் தெரியா அரசன் பாண்டுரங்கன் தன் பெயரை செதுக்கியுள்ளான். கற்காலத்தில் மன்னராட்சி இருந்ததா, மக்கள் நாடோடிகளாய் குழுக்களாகவே வாழ்ந்தனர், என்ற கேள்வி எழுந்தது.

 பட்டபெயரா பிறவிப்பெயரா?
சற்றே  கவனுத்துடன் பார்த்தால், ஆட்சியாண்டு 36 இல், கலியுக வருடம் 1988 இல் அரசன் பாண்டுரங்கன் இந்த கல்வெட்டை செய்வித்தான் என்று யூகிக்கத்தோன்றியது. நான் ஆர்வலன் தான், கல்வெட்டு துறையில் பட்டப்படிப்பெல்லாம் இல்லை. வல்லுனர்கள் தான் இதை உறுதி செய்ய வேண்டும். பாண்டுரங்கன் என்பதை பாண்டு - ரங்கன் என்று பிறிக்கலாம். பாண்டியர் வம்சத்திற்கு முன்னோடியாகி பாண்டு என்ற சொல்லும் (Proto-Pandya) அரங்கம் அமைத்ததால் வினையாலமையும் பெயராக ரங்கன் என்றும், மன்னனின் பட்டப்பெயர் இருந்திருக்க வேண்டும். மேலே ஜெயராமன் என்ற பெயர் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளதால், அவனே அவனுக்கு பிறக்கும்போது வைத்த பெயரென்றும், அரியணை ஏறியபின் வந்த பட்டப்பெயரே பாண்டுரங்கன் என்றும் நம்பலாம். ராஜராஜன் என்பது பட்டபெயர் என்றும் அப்பெயர் கொண்ட சோழ மன்னனின் பிறவிப்பெயர் அருள்மொழி வர்மன் என்பதும் வாசகர்களுக்கு நினைவூட்ட கடமை பட்டிருக்கிறேன்.

கற்காலத்தில் எப்படி சமஸ்கிரத எழுத்தான “ஜெ” வந்தது என்றும், எண்களை எழுதும் பழக்கம் அப்பொழுது இருந்ததா என்றும், இரண்டு ஐயங்கள் எழலாம். கல்தோன்றி மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் என்பதும், வந்தாரை வாழவைக்கும் நாடு தமிழகம் என்றும் நினைவில் வைத்தால் முதல் ஐயம் தீரும். எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் என்பது ஆதிமுதல் தமிழரின் அறிவியல் தொலைநோக்கு பழமொழி  என்றும், கற்கால மனிதர்களுக்கு நிச்சயம் இரண்டு கண்கள் தான் இருந்தன என்பதும், இரண்டாம் ஐயத்தை ஒழிக்கும்.




அருகே சிர்காசி-ரவேல் கல்வெட்டு இருந்தது. இந்த சொற்கள் சங்ககாலத்திற்கு முன்பு உள்ள பெயர் மரபை குறிக்கும். அமைச்சர், அரசவை புலவர் பெயர்களாக இருக்கக்கூடும். உற்று நோக்கினால், ஒரு காம்பில் இரு இலைகள் பொறிக்கபட்டதை காணலாம். இது பாண்டு வமச அரச லச்சினையென்று சந்தேகமின்றி கூறலாம். அவர்களக்கு செடிகள் மேதுள்ள காதலும், இயற்கையோடு கற்கால மனிதன் எவ்வாறு ஒன்றி வாழ்ந்தான் என்றும் காலக்கடலைத் தாண்டி நமக்கு இச்சின்னம் அறிவுறுத்துகிறது.


ரவேல் லச்சினை கல்வெட்டு


Thursday, 1 May 2014

வெள்ளைக்காரரா?

மதுரைக்கு செல்லும் வழியில் விழுப்புரத்திற்கு அருகே உள்ள் சில இடங்களை பார்க்க ஆசை. இவற்றுள் கீழ்வாலை ஒன்று. செஞ்சி செல்லும் வழி. அங்கே பெருங்கற்கால பாறை ஓவியங்கள் உள்ளன. சென்னையிலிருந்து என் கார் எடுத்து நண்பர்கள் விசுவநாதன், கருணாகரனுடன் சென்றேன். மத்திய உணவு அருந்தாமல், வழியில் மரத்தடி கடையில் கேப்பை கூழும் அவித்த கடலையும் சாப்பிட்டோம். நெடுஞ்சாலையோரத்தில் ஒரு வீட்டு வாசலில் காரை நிறுத்தினோம். திரும்பி வந்தால் தரையில் பல மட்டைகள். ”என்ன இது?” சந்தேகமாக பார்த்தேன். ஒரு கறுநிறத்து மூதாட்டி, “தென்னை மட்டை தென்னை மட்டை,” என்றார். தென்னை மட்டை கொஞ்சம் பெரிசாக இருக்குமே என்ற சந்தேக பார்வையை தப்பாக புரிந்துகொண்டார்.

விசுவநாதன்:“தென்னை மட்டையை மூணா வெட்டி காய வைச்சிருக்காங்க.” தமிழில் தான். 

மூதாட்டிக்கு என் மேல் சந்தேகம். “வெள்ளைக்காரரா?” விசுவிடம் வினவினாள். அவர் பல்லிளித்தார். கருணா குலுங்கி சிறித்தார்.

ஒரு கூடை சன்லைட்க்கு மிகவும் நான் குறைச்சல். எந்திரன் ரஜினி, சின்னகௌண்டர் விஜய்காந்த், மூன்றாம் பிறை கமல் அவ்வளவு சிவப்போ வெளுப்போ இல்லை. பாறை ஓவியத்து பாறை நிறம். நான் இப்பெண்மணிக்கு ஜார்ஜ் புஷ் போன்று தெரிந்தது கொஞ்சம் 
விசித்திரமாய் இருந்தது.

விசு : “இல்ல இல்ல நம்ம் ஊர்தான்”.

மூதாட்டி “தமிழ் தெரியாதா?”

கருணாவின் குலுங்கல் அதிகரித்தது.

எனக்கு தெரிந்த தமிழில் கொஞ்சம் பேசி, என் ஆரியத்தன்மையை குறைத்து திராவிட குணத்தை கொடியேற்றினேன். மசியவில்லை மூதாட்டி. கூட்டணித்தலைவரை பார்த்த சுப்ரமண்ய சுவாமி போல், நரேந்திர மோதியை சந்தித்த சாகரிகா கோஷை போல், நவரசத்தில் நான்கைந்து ரசங்கள் அவர் குரலிலும் பாவத்திலும் துடித்தன.

லண்டன் மிடுக்குடன் காரில் ஏறினேன்.

அடுத்த நாள், விழுப்புரத்தில் கைலாசநாதர் கோவில் சென்று வெளியே வரும் போது, ஒரு பிச்சைக்கார மூதாட்டி பின் தொடர்ந்தாள். “சேட்டு, சேட்டு, ரெண்டு ரூபா குடு சேட்டு, நல்லா இருப்ப,” என்றார்.

“கிராமத்திலிருந்து ஊருக்கு வந்தா மரியாதை கெட்டுபோச்சு,” என்றார் கருணா. குலுங்காமல். மதுரை போகும் வழியில் தமிழனாக மாறிவிடுவேனோ என்ற ஏக்கத்துடன் வண்டி ஏறினேன்.

சில மாதங்களுக்கு முன் தென் நெல்லை அருகே திருப்பேரை கோவிலில், அர்ச்சகர் என்னுடன் மராட்டியில் பேசத் தொடங்கினார். கேரளத்தில் ஓரிருவர் எனக்கு தெரியாத ஹிந்தியில் பேச்செழுப்பினர். டெல்லி மிடுக்கு உண்டாகவில்லை.

டெக்ஸாஸில் நான் மெக்ஸிகனாக அவதரித்துள்ளேன். என்னிடம் யாராவது வந்து, மெக்ஸிக மக்கள் பேசும் இஸ்பானிய மொழியில், பேச்செழுப்புவார். ஆங்கிலத்தில் தடுமாரி பதிலுவேன். அவர்கள் என்னை லண்டன் ஆசாமி என்று சந்தேகப்பட்டதில்லை. மற்ற இந்திய நண்பர்களுக்கும் இந்த அனுபவம் உண்டு. ஒரு வெள்ளைக்கார மாணவி “நீ ஈராக்கா? ஈரானா?” என்று ஒரு முறை கேட்டாள். “இந்தியா,” என்றேன். பல முறை மன்னிப்பு கேட்டாள், இதில் என்ன மன்னிப்பு, தவறு ஒன்றும் இல்லை என்றேன். அவர் விளக்கினார்; ஒரு ஈரானியரை தப்பாக ஈரக்கியரோ என்று கேட்டதால் அவருக்கு தாங்கொணா கோவம் வந்துவிட்டதாம்.

வேறு ஒரு முறை. ஒரு சக மாணவன் வீட்டுக்கு சென்றேன். டெக்ஸாஸ் வெள்ளையன். பேச்சுக்கு நடுவே, “நீ ஹிந்துவா?” என்றான். ஆமாம், என்றேன். “முகமது உங்கள் கடவுளா?” என்றான். இல்லை, என்றேன். “உங்கள் கடவுள் பெயர் என்ன?” என்றான். “பல தெய்வங்கள் உள்ள மதம்,” என்று இழுத்தேன். இது தேராத கேஸ், என்று பரிதாபப்பட்டு விட்டுவிட்டான். 

ஓசாமா பின்லாடனை தேடி, கல்கத்தாவில் அமெரிக்க குண்டு விழாதது பெரும் அதிசயம்.

அரிசோனாவில் வேலை பார்த்த பொழுது, ஃபிலிப்பைன்ஸில் பிறந்து அமெரிக்க குடிமகனாகிய ஒருவர், அதே கம்பெனியில் வேலை பார்த்தார். “ஹிந்துக்கள் கற்களை வழிபடுவீராமே? நிஜமாகவா?” என்றார். “காகிதம், துணி, மாடு, மரம், கார், கம்ப்யூட்டர், புத்தகம், பேனா, செங்கல் எல்லாம் வழிபடுவோம்,” என்றேன். மெக்ஸிகன் மொழியில் பேச்செழுப்பாதது மிச்சம்.

ஒரு முறை, நீச்சல் வகுப்பு ஆசிரியை – என் வயது பெண் – “உன் பெயர் எது  “கோ”வா? “பு” வா?” என்றார். சீனதேசத்தில் பிறந்த மற்றொரு நீச்சல் ஆசரியர் நான் இரும்பு வேகத்தில் நீந்தும் பொழுது, உர்ச்சாக படுத்த, “கோ கோ கோபு” என்பார். இதனால் வந்த வினை.

“என் நிஜப்பெயர் தெய்வசிகாமணி திருஞானசம்பந்தம்,” என்று பதில் சொல்ல ஆசை. அந்த பல்கலைகழகத்தில் ஒரு மாணவருக்கு அந்த பெயர் – அவர் பெயரைக் கண்டால் அமெரிக்க பேராசிரியர்களுக்கு சிம்ம சொப்பனம்.

கீழ்வாலை மூதாட்டி பல நினைவுகளை மறதிக்குழியிலிருந்து தோண்டி எடுத்தார்.