Wednesday 29 November 2017

தமிழ் இலக்கியம் - ஒரு கால அட்டவணை

தமிழ் இலக்கிய கால அட்டவணை

ஸம்ஸ்கிருத இலக்கிய கால அட்டவணை
குறிப்பு
நீள சதுரம் - மன்னர் வம்சம்
பசுஞ் சதுரம் - புலவரும் அவர் இயற்றிய நூலும்
மஞ்சள் எழுத்து – மன்னர் பெயர்
பச்சை எழுத்து – மன்னர் இயற்றிய நூல்
நீல எழுத்து – புலவர் இயற்றிய நூல்
சாய்ந்த எழுத்து - பெருங்காப்பியம்

தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை சுருக்கமாக மேலோட்டமாக காண இங்கே ஒரு கால அட்டவணை அல்லது வரைபடம் சமர்ப்பிக்கிறேன். மன்னர்காலத்துக்கும் இலக்கியத்திற்கும் ஆழ்ந்த தொடர்புகளுள்ளன. சங்க காலத்தில் குயத்தியரும், பரதவரும், கூலவணிகரும், எழுதிய கவிதைகள் தொகுக்கப்பட்டாலும் தமிழ் மன்றங்கள் அரசவையிலேயே நிகழ்ந்தன போலும். புறத்திணை இலக்கியத்தில் மன்னர்களே முதற்கண் நாயகர்கள். சிலம்பிலும் சீவகசிந்தாமணியிலும் வணிகர் நாயகர்கள். இருபதாம் நூற்றாண்டில்தான் பாமரர்களின் கதைகளும் இலக்கியமானது என்று நினைக்கிறேன்; அவை இலக்கியமாக நிலைக்குமா என்று தெரியவில்லை.

வம்சாவளியால் தமிழக வரலாற்றை பகுக்கும் வழக்கிருக்க, அதன் வழியே கோயில் கட்டுமானத்தையும் சிற்ப ஓவிய பரிணாம மாற்றத்தையும் வரலாற்று ஆய்வாளர் பகுத்து வழங்குகின்றனர். இம்மரபில் சில தமிழ் இலக்கியங்களையும் ஒரு கால அட்டவணையில் பகுத்துள்ளேன்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நவம்பர் 26, 2017 அன்று நந்திக்கலம்பகத்தின் சில செய்யுள்களையும் அதன் பாடல்களையும் கிஷோர் மகாதேவன் விளக்கினார். இலக்கியத்தில் பெயர் பெரும் மன்னரகளை பற்றி கல்வெட்டுகளில் குறிப்புகள் சிலவே. கல்வெட்டில் வரும் மன்னவர் பலர் இலக்கியத்தில் காணப்பெறவில்லை. பாரதத்திலும் தமிழ்நாட்டிலும் இவ்வகை வரலாற்று முரண்கள் அதிகம். நந்திகலம்பகம் இதில் ஒரு முக்கிய விதிவிலக்கு. தெள்ளாற்றெறிந்த நந்தி என்ற மெய்கீர்த்தியுடைய மூன்றாம் நந்திவர்மன், இக்கலம்பகத்தின் நாயகன். மல்லையர்கோன் என்றும் மயிலைக்காவலன் என்றும் இதில் அழைக்கப்படுவதும் முன்னோடியில்லாதவை. மாமல்லபுரத்துக்கு தன் பெயரளித்த வாதாபி கொண்ட நரசிம்ம வர்மனோ, அவன் பெயரன் பரமேச்சுரனோ கடற்கரை கோயிலை எழுப்பிய ராஜசிம்மனோ தங்கள் மெய்கீர்த்திகளில் மல்லை நகரை குறிப்பிடவில்லை. மயிலை காவலன் என்று தன்னை இன்றைய சென்னையை அன்றே அரவணைத்தான் நந்தி.

இலக்கியச்சுவை ததும்பும் தமிழ் கவிதைத்தொகைகளில் ரசிகமணி டி.க.சிதம்பரநாத முதலியாரின் ஒரு கட்டுரையில் நந்திகலம்பகமும் உண்டு.

பட்டடக்கல் பிரவேசம் என்றுவந்து வாதாபி, ஐகோளே, பட்டடக்கல், மகாகூடா என நான்கு சாளுக்கிய ஊர்களுக்கு ஜனவரி 2016இல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை குழுவினர் கலை உலா சென்றோம். அதற்கு முன் வாராவார அறிமுக உரைகளில் ஒன்றாக “நகரேஷு காஞ்சி” என்று பாடிய புலவர் பாரவி இயற்றிய கிரார்தாஜுனீயம் பற்றி என்னுடைய ஓயாத நச்சுறுத்தலுக்கிணங்கி நகுபோலியன் பாலசுப்ரமணியம் அதன் சில பாடல்களை விளக்கி, அதன் இலக்கிய சுவையை பகிர்ந்தார். கிராதார்ஜுனீயம் ஸம்ஸ்கிருத ப்ருஹத்காவியம் என்று அழைக்கப்பெறும். அதாவது பெருங்காப்பியம். காளிதாசன், பாணன், பாசன், ஹர்ஷன், தண்டின், இவர்கள் இயற்றிய நூல்களெல்லாம் லகுகாவியங்கள்தான். அதாவது குறுங்காப்பியங்கள். ஸம்ஸ்கிருதத்தில் மூன்று பெருங்காப்பியங்களே – மாகன் இயற்றிய சிசுபாலவதமும், ஸ்ரீஹர்ஷன் இயற்றிய நைடத சரிதமும் மற்ற இரண்டாம். (சிற்றையம் – ஸ்ரீஹர்ஷன் தற்பவம் விதியால் திருவருடன் என்று மறுவுமோ?) மகேந்திர பல்லவனின் தந்தை சிம்மவிஷ்ணு ஆட்சிகாலத்தில் பாரவி காஞ்சிக்கு வந்தபோது, அந்நகரின் அழகில் சொக்கி “நகரேஷு காஞ்சி” எனறு பாடியதாக வரலாறு. ராஜசிம்மன் காலத்தில் புலவர் தண்டி தசகுமார சரிதம், அவந்திசுந்தரிகதை ஆகிய காவியங்களையும் காவியதரிசனம் என்னும் செய்யுளணி ஆய்வுநூலையும் இயற்றினார். இதை தழுவியே தண்டியலங்காரம் தோன்றியதாய் கருதலாம்; அதை எழுதியவர் அவரே தானா வேறு தண்டியா என்று தெரியவில்லை.

தமிழின் ஐம்பெருங்காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலைமும் இந்த வடமொழி காப்பியங்களை காலத்தில் முந்தியவை. தமிழ் என்ற மொழியையே கண்டுகொள்ளாத சம்ஸ்கிருத புலவர்கள், ரஷியாவின் ஸ்பட்னிக் ராக்கெட் வெற்றியால் பொறாமை பொங்க நிலவிற்கு ராக்கெட் விட்ட அமெரிக்கர்களை போல், இவ்விரண்டால் தூண்டப்பட்டு பெருங்காப்பியங்கள் எழுதினரோ?

பாரதத்தில் வரலாற்று நூல்களில் என்று தொன்றுதொட்டு தொடர்ந்து வந்த வழக்கம் ஏதுமில்லை. கடந்த இருநூறு ஆண்டுகளில் ஐரோப்பிய ஆய்வாளாரின் முயற்சிகளாலும் இன்றும் தொடரும் ஆராய்ச்சிகளாலும் தமிழகத்து வரலாறும் பாரத வரலாறும் தொகுக்கபெற்றன. ஞானசம்பந்தர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டிலுருந்து பதிமூன்றாம் நூற்றாண்டுவரை எந்த காலம் என்று மனோன்மணீயம் சுந்தரனார் ஒரு நூல் எழுதினார். அதன் பிறகே உ.வெ.சாமிநாத ஐயர் சங்கநூல்களை பதிப்பிக்க, அந்த அறுநூறு ஆண்டு வரலாறும் வெளிவந்தது.

புது கண்டுபிடிப்புகளால் மேற்கண்ட அரசியல் வரலாறும் இலக்கிய வரலாறும் மாறலாம். மாலவீகாக்னிமித்திரம் என்ற நூல் முதல் நூற்றாண்டில் ஆண்ட சுங்க மன்னன் அக்னிமித்திரனை நாயகனாக கொண்டதாம். அதை இயற்றிய காளிதாசனே சாகுந்தலத்தையும் ரகுவம்சத்தையும் குமாரசம்பவத்தையும் எழுதினானா? இல்லை குப்தர காலத்தில் வாழ்ந்த வேறு காளிதாசனா? அங்கும் குழப்பம்.

குறிப்பு. 2 மே, 2019 அன்று சம்ஸ்கிருத கால வரிசைப்படத்தில் ஒரு சிறு மாற்றம் செதுள்ளேன். ஐந்தாம் நூற்றாண்டில் காட்டிய சாகுந்தலம் எழுதிய காளிதாசரை முதலாம் நூற்றாண்டுக்கு மாற்றியுள்ளேன்; அதுவே சரியான காலம்.
  1. வரலாறு மூவர் மொழி
  2. தேவாரத்தில் பாரி
  3. மயிலாப்பூரில் பல்லவர் இசை 
  4. A Timeline of Sanskrit literature
  5. A timeline of Tamilnadu and Karnataka
  6. A timeline of Tamilnadu and Gujarat
  7. Was Tholkaappiyam inspired by Bharata's Naatya Shaastram?
  8. ஐகோளே கல்வெட்டில் பாரவியும் காளிதாசனும்

1 comment:

  1. ஐம்பெரும் காப்பியங்களில், சீவக சிந்தாமணிதான் முதல் நூல். சிலப்பதிகாரத்திற்கும் முந்தையது. பதிவில், அதன் காலம் தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete