Wednesday 22 August 2018

பண்டை நாகரிகங்களின் வானியலும் கணிதமும்



காலங்களில் வசந்தம்
கலைகளில் ஓவியம்
மாதங்களில் மார்கழி
அறிவியலில் வானியல்.

நாகரீகங்களின் மிக தொன்மையான அறிவியல் என்று வானியலை சொல்லலாம். ஆரியபடன், பாஸ்கராச்சாரியன், கலீலியோ, காப்பர்னிக்கஸ் என்று நாம் இன்று ஒரு சில வானியல் வல்லுனரை மட்டுமே அறிந்துள்ளோம். வானியல் என்ற வார்த்தையை கேட்டாலே முதலில் தோன்றுவது டெலெஸ்கோப் என்னும் தொலைநோக்கி. ஆனால், அந்த கருவியின் வயது ஐநூறு ஆண்டுகளே. வானியல் பல்லாயிர வருட தொன்மை திளைக்கும் கலை. 5400 ஆண்டுகளுக்கு முன் சுமேரியாவில் வானியல் சான்றுகள் கிடைத்துள்ளன. இதிகாசங்களாகிய இராமாயணம் மகாபாரதத்தை விட ஜோதிடம் என்னும் வானியல் தொன்மையானது. காப்பியங்களை விட பாரத மரபின் அறிவியல் தொன்மையானது என்று பெருமை படுகிறோமா?

வானியல் வல்லமை படைத்த அறிவியலை தந்து புதிய பாதைகளை சமைத்தது. ஆயினும் சுடர்மிகு அறிவுடை மேதைகளையும் தடுமாறி தவறான கருத்துக்களை பறைசாற்ற வைத்தது.

பாரதமும் கிரேக்கமும் இருக்கட்டும். தொன்மை நாகரீகங்களான சுமேரியா, எகிப்து, மாயா-அஸ்டெக், சீன, கிரேக்க நாடுகளில் பண்டைக்காலத்தில் வானியலை பற்றிய விஞ்ஞானிகளின் புரிதல் என்ன? அவர்கள் எவ்வாறு கணிதத்தை கையாண்டனர்? எவ்விதம் இவை அன்றாட வாழ்விற்கு பயன்பட்டன?
 
வாஷிங்டன் நகர அருங்காட்சியகம்
மாயா-அஸ்டெக் பஞ்சாங்க சிற்பம்
நம் இன்றைய அறிவியலுக்கும் அதற்கும் தொடர்புகள் உள்ளனவா? தொலைநூக்கி என்னும் கருவிக்கு முன் வான்வெளியை எப்படி புரிந்துகொண்டனர்? கிரணங்களை எப்படி கணித்தனர்? கிரேக்க நாட்டின் ஆர்க்கிமிடிஸ், பித்தகோராஸ், யூக்ளிட் போன்றே சுமேரியா, எகிப்து போன்ற பண்டை நாகரிகங்களிலும் கணித மேதைகள் இருந்தனரா? அவர்கள் அமைத்த கோட்பாடுகள் என்ன? கருவிகள் என்ன? ஆவணங்கள் என்ன

2010ல் இந்திய வானியலை அறிமுகம் செய்து தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் பேசச் சொன்னார் பேராசிரியர் சுவாமிநாதன். அப்போது பண்டை நாகரீகங்களின் வானியலை பற்றிய பல தகவல்கள் கிடைத்தன, அதையே ஒரு உரையாக ஆங்கிலத்தில் பேசினேன். நானும் நண்பர்கள் ராஜகோபாலன் வெங்கடராமன், மோகன் கிருஷ்ணமூர்த்தி தொடங்கிய வராஹமிஹிரா அறிவியல் மன்றத்தை ஒரு வருடமாகிவிட்டது. அன்று ரசாயனத்தை புனரமைத்த லவோஸ்சியர் பற்றி பேசினேன். இரண்டாம் ஆண்டின் முதல் உரையாக சனிக்கிழமை ஆகஸ்ட் 25, அன்று மாலை நான்கு மணிக்கு, இந்த வானியல் கணிதம் பற்றி தமிழில் பேசுவேன். கோட்டூர்புரம் தமிழ் இணைய கல்விக்கழகத்தில் ஆற்றவுள்ளேன்.


பாரதமே பூஜ்ஜியதை கண்டுபிடித்தது என்பது பரவலான நம்பிக்கை. இது உண்மையா? ஆரியபடன் தான் பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தான் என்றால் ராவணன் எப்படி பத்து தலைகளை எண்ணினான், நூறு மகன்களான கௌரவர்களை எப்படி காந்தாரி எண்ணினாள் என்றெல்லாம் இப்பொழுது குறும்புத்துணுக்கு சமூக ஊடகத்தில் பரவி வருகிறது. ஆரியபடனுக்கு ஆயிரம் ஆண்டு முன்பு வாழ்ந்த பைத்தகோராஸ் எப்படி பூஜ்ஜியமின்றி எண்ணினார் என்ற கேள்வி ஏனோ தொடர்வதில்லை.


இது போன்ற தகவல்கள் அறிமுகம் செய்வதே இவ்வுரையின் நோக்கம்.
ஜோதிடம் என்னும் சொல்லின் பழைய பொருள் ஜோதி என்ற நட்சத்திரங்களை புறிந்துகொள்ளும் கலை என்பதே. அந்த கலையால், சூர்யோதையம், சந்திரோதயம், கிரகணம், கோள்களின் பாதை, காலங்களின் உதயமும், எல்லாம் முன்கூட்டியே கணிக்க முடியும் என்று மக்கள் புரிந்த கொண்டபின், தெய்வங்களாய் வணங்கும் சூரிய சந்திரனின் நடத்தைகளையே கணிக்க வல்ல ஜோதிடர்களால் மனிதர்களின் பிறப்பு, மரணம், சுகம், செல்வம், திருமணம், வெற்றி, தோல்வி, பதவி, நோய் எல்லாம் கணிக்க முடியாதா என்ற ஆசை எழும்பியது. இதன் விளைவே ஜாதகம், நாடி ஜோசியம், கிளி ஜோசியம், யாவையும். இந்த உரையில் வானியல் என்னும் அறிவியலை மட்டுமே பேசவுள்ளேன், ஜோசியம் அல்ல.

எச்சரிக்கை இந்த உரையில் இந்தியாவின் தொன்மையான வானியலை பற்றி பேசமாட்டேன். அது தனி உரை, ஆர்வமிருந்தால் பின்னாள் பேசலாம். பல இடங்களில் ஏற்கனவே பேசியுள்ளேன். மே மாதம் பள்ளி மாணவர்களுக்கு ஐந்து நாள் வகுப்பு நடத்தினேன்.
  1. ஆரியபடன் 
  2. வராகமிஹிரரின் கிரகண சான்று
  3. மகாவீரரின் கணித வாழ்த்து
  4. நீலகண்ட சோமசத்துவரின் சிலேடை 
  5. வராகமிஹிரரின் அகத்தியர் துதி
  6. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள்
  7. சில விண்ணியல் கவிதைகள் – பொருள் விளக்கம்
  8. சைலகேது
  9. மாயா-அஸ்டெக்  புதுயுகம் 
நானும் ரௌடி தான்!