Saturday 22 November 2014

பழைய சாதத்தில் தோசை - திருத்தங்கள்

சத்யோன்ன ரோட்டா

இந்திராம்மா நேற்று இரவு சத்யோன்ன ரோட்டா செய்தார். பழைய சாதத்தில் கொஞ்சம் புளிப்புக்கு மோரை கலந்து, கருவேப்பில்லை சேர்த்து, காரத்துக்கு கொஞ்சம் மிளகாயும் சேர்த்து, மிக்ஸியில் அரைத்துவிட்டு, கெட்டியாக இருக்க கொஞ்சம் அரிசிமாவையும் கலந்து, உருண்டை பிடித்து, தோசை கல்லில் தட்டி வார்த்து கொடுத்தார். சுவைக்கு கொஞம் நருக்கிய வெங்காயத்தை மாவில் கலக்கலாம். 

தொட்டுக்கொள்ள வெங்காய சட்னி, சாம்பார்.

திருத்தம் 1 சத்யோன்ன ரோட்டாவிற்கு மிக்ஸியில் அரைக்க தேவையில்லையாம்.

சத்யோன்ன ரோட்டா- கல்லிலும், அருகில் உருண்டை பிடித்த மாவும்

பெருகு தோசை

முன்பு பல முறை இந்திராம்மா செய்த பெருகு தோசையை பல முறை சுவைத்துள்ளேன். அதற்கு ஒரு பயத்தம் பருப்பு சாம்பார் செய்வார்கள். அருமை. “பெருகு” தெலுங்கு சொல் – தயிரை குறிக்கும். பழையா சாதத்தில் தயிர் கலந்து, கொஞ்சம் பருப்பும் பச்சரிசி (புழுங்கல் அரிசி கூடாது) சேர்த்து அரைத்து, தோசை மாவு போல் அரைத்து கொண்டு, ஓர் இரவு ஊரவைத்து, மறுநாள் தோசை மாவு போல் வார்த்து விடுவார். 

ஆனால் தோசை போல் திருப்பி போடக்கூடாது. ஆப்பம் போல் மூடி வைத்து தோசைக்கல்லிலேயே வார்க்கலாம்.

திருத்தம் 2 பருப்பை கலந்து என்று தப்பாக எழுதியிருந்தேன். அரைத்த பச்சரிசியை கலக்க வேண்டுமாம். 2 அளவு பச்சரிசிக்கு 1 அளவு பழைய சாதம் 1 அளவு தயிர். பச்சரிசியை தயிருடன் தனியாக அரைக்கவேண்டும், பழைய சாதத்தை தனியாக அரைக்கவேண்டும். உளுந்து வேலையை பச்சரிசி செய்யும்.

பெருகு தோசை மாவும் கல்லிலும்

இந்திராம்மா, தட்டில் பெருகு தோசை, சாம்பார்

நேற்று சத்யோன்ன ரோட்ட உண்டபின், தமிழ் இணையக்கழகத்தில் உரையாற்றியதற்கு பரிசாய் கிடைத்த புத்தகத்தை பிரித்தேன் – கல்கியின் ”சிவகாமியின் சபதம்”. கொஞ்சம் சந்தேகமாக என்னிடம் “ஐந்து பாகமாக இருக்குமே அதுவா?” என்று கேட்டார். “அது பொன்னியின் செல்வன்” என்றேன். “படிக்கிறீர்களா?” என்று கேட்டேன். “முன்னெல்லாம் சாப்பிடும் போது புத்தகம் படிச்சுக்கிட்டு தான் சாப்பிடுவோம். விட்டு பல வருஷம் ஆயிடுச்சு. எங்க திருவநந்தபுரம் அண்ணாரு மட்டும் தான் இன்னும் சாப்பிடும் போதும் புத்தகம் படிக்கிறாரு,” என்றார். வீட்டில் குமுதம் விகடன் கல்கி வகையரா வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டன. ஹிண்டு பேப்பர் நிறுத்தி சில வருடம், டைம்ஸ் ஆஃப் நிறுத்து மூன்று மாதம். இந்திராம்மா டிவி பார்க்கிறார். நான் இண்டர்நெட் பார்க்கிறேன்.

மற்ற சமையல் படைப்புகள்

1. சொதி சாப்பாடு
2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு
3. வாழைத்தண்டு தோசை
4. கம்பு அடை 

Wednesday 19 November 2014

சக்கரவள்ளிக்கிழங்கு நெய் உருண்டை

செய் முறை

1.    வேகவைத்த சக்கரவள்ளிக்கிழங்கை சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்
2.    அதில் உருக்கிய நெய்யோடு சேர்ந்து, சக்கரையும் திருவிய தேங்காயும் கலக்கவும். இது கைப்பக்குவம் தான். சுவைக்கேற்ப அளவு
3.    இந்த கலவையை உருண்டை பிடித்து ருசிக்க தெரிந்த ரசிகருக்கு மட்டும் வழங்கவும்.
4.    மூன்று நான்கு நாளுக்கு மேல் ஃப்ரிட்ஜில் தாங்காது. 

இதை போன வாரம் இந்திராம்மா செய்தார். நேற்று இரவு பில்ல குடுமுலு செய்திருந்தார்.

மற்ற சமையல் படைப்புகள்


1. சொதி சாப்பாடு
2. சுரைக்காய் தோசை, பில்லக் குடுமுலு
3. வாழைத்தண்டு தோசை
4. கம்பு அடை

Monday 10 November 2014

தும்பியின் ஏளனம்

நெய்தல் மலர்


வாரிதி விளிம்பின் வைகல் எழுமுன்
காரிருட் கங்குல் படகே செலுத்தி
நெடுவலை வீசி பரிதியோன் அள்ள
நெய்தல் பிரிந்த மீனவ நண்ப
நெய்தலும் பரிதியும் நன்னிலத்து உளதே
மீனொடு மீண்டு நுன்குடி புகுமுன்
தேனொடு மீள்வோம் யாமே மீனவன்

குறிப்பு

கேரள மாநிலத்து வயநாட்டில்  தாய்லாந்து என்னும் ஷியாம தேசத்து பட்டயா அமரி ஒஷன் சத்திரத்தில் (Hotel Amari Ocean Pattaya Thailand)கண்ட ஆம்பல் மலரின் இந்த புகை(எண்ணிம? digital) படத்தை முகநூலில்(ஃபேஸ்புக்) ஆழ்வார்ப்பேட்டைவாசி விகே ஸ்ரீநிவாசன் பகிர்ந்திருந்தார். ஒரு கவிதை தோன்றியது. இந்த மலரின் பெயர் அறிய பழனியப்பன் வைரத்தின் கற்கநிற்க வலைப்பதிவை தேடினேன். ஆம்பலுக்கு நெய்தல் என்ற பெயரும் உள்ளதை கண்டதும் ஒரு சிலேடையும் எண்ணத்தில் உதித்தது. பள்ளிப்பருவத்தில் தமிழ்ப்பால், குறிப்பாக தமிழ்கவிதைப்பால், காதலும் ரசனையும் வளர்த்த மயிலாப்பூர் பிஎஸ் சீனியர் செகண்டரி தமிழ் ஆசிரியர் வசந்தகுமாரிக்கும், கல்லூரி நாட்களில் தங்கள் தமிழ் ரசனையால் என் தமிழ் ரசனையை வளர்த்த திருவில்லிப்புத்தூர் கலசலிங்கம் பொறியியல் கல்லூரி சக மாணவருக்கும், சங்ககால கவிதையின் நுட்பத்தையும் இயக்கத்திறனையும் உவமையையும் விளக்கிய ஜெயமோகனுக்கும், இக்கவிதை சமர்ப்பணம்.

படத்தை பயனிக்க அனுமதி தந்த விகே ஸ்ரீநிவாசனுக்கும், கவிதையை மிகவும் ரசித்த கீதா சுதர்ஷனத்துக்கும் நன்றி.

திருத்தம்
கேரளத்து வயநாட்டில் பல நெய்தல் மலர்களை சத்திரத்தில் கண்டினும் களித்தினும் க்ளிக்கினும், இந்த நெய்தல் மலர் தாய்லாந்து விடுதியில் கண்டதென நண்பர் விகே ஸ்ரீநிவாசன் தெரிவித்தார். ஷியாமதேசத்தை பற்றி இப்படி எதிர்பாராமல் வாய்ப்பு அமைந்தது!

மற்ற கவிதைகள்
1. என் அப்பாவுக்கு பிடித்த கவிதை
2. சொல்லணிக் கொன்றை
3. செல்வத்துள் செல்வம்
4. மல்லை சிற்பியர் வாழ்த்து
5. வராஹமிஹிரரின் அகத்தியர் துதி

Monday 3 November 2014

ஒரு ஸ்லோகம், ஒரு சிலேடை, ஒரு எண், ஒரு நாள், ஒரு நூல்

பதினாறாம் நூற்றாண்டில் கேரளத்தில் வாழ்ந்த நீலகண்ட சோமசத்வன் என்ற ஜோதிடர், தந்த்ர ஸங்க்ரஹம் என்ற விண்ணியல் நூலை எழுதினார். சென்னை பல்கலைகழக பேராசிரியர் எம்.எஸ்.ஸ்ரீராமும் மும்பை ஐஐடி கணித பேராசிரியர் கி. ராமசுப்ரமணியமும் இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சிறப்பான உரையுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முதன் ஸ்லோகம் இது.

ஹே விஷ்ணோ நிஹிதம் க்ருத்ஸ்னம் ஜகத் த்வய்யேவ காரணே |
ஜ்யோதிஷாம் ஜ்யோதிஷே தஸ்மை நமோ நாராயணாய தே ||

हेविष्णो निहितं कृत्स्नं जगत् त्वय्येव कारणे 
ज्योतिषां ज्योतिषे तस्मै नमो नारायणाय ते 

இது விஷ்ணுவிற்கும் நாராயணனுக்கும் வணக்கம் சொல்லும் செய்யுள்.


“யாவும் படைத்த விஷ்ணுவே, ஜோதிடர்கள் உன்னால் ஒளிப்பெருகிறார்கள், நமோ நாராயணா உனக்கு”, என்று பொருள். இந்த ஜோதிடர் வாழ்ந்த நாட்டின் மன்னனின் பெயர் நேத்திரநாராயணன். விஷ்ணுவையும் மன்னனையும் சிலேடையாக வணங்குகிறார்.

ஸ்லோகத்தின் முதல் சீரில் (எட்டு எழுத்துக்களில்) ஒரு புதிரை ஒளித்தார் நீலகண்டர்.  “ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்” என்ற எழுத்துக்களை கடபயாதி என்ற எண் குறிப்பு முறையில் படித்தால், அவை ஒரு எண்ணை குறிக்கும். இந்த எண் 84508610. அக்காலத்தில் ஸம்ஸ்கிருதத்தில் எண்களை வலமிருந்து இடமாக குறிப்பார்கள். இந்த முறைப்படி நம் ஸ்லோகம் முதலில் வரும் பூஜ்யத்தை நீக்கி படித்தால் 1680548 என்ற எண்ணை குறிக்கும்.


ஒற்றுடன் எழுத்து ஹே விஷ் ணோ நி ஹி தம் க்ருத்ஸ் நம்
குறிக்கும் எழுத்து
குறிக்கும் எண் 8 4 5 0 8 6 1 0

க, ட,ப, ய ஆகிய எழுத்தில் தொடங்கும் உயிர்மெய் வரிசைகளை பத்து பத்தாக ஒன்று முதல் ஒன்பதும், கடைசி எழுத்தை பூஜ்யமாகவும் குறிக்கும் திட்டத்திற்கு கடபயாதி (க ட ப ய ஆதி!) என்று பெயர். ஸமஸ்கிருதத்தில் உயிர்மெய் எழுத்துக்களுக்கு வர்க எழுத்துக்கள் என்று பெயர். செய்யுள்களில் எண்களை எழுத இதுவும் ஒரு வகை திட்டம். கர்நாடக சங்கீத 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களின் முதல் இரண்டு எழுத்துக்களும் கடபயாதியில் உள்ளன; அம்முதல் இரண்டு எழுத்துக்கள் மேளகர்த்தா வரிசையில் அந்த ராகத்தின் எண்ணை குறிக்கும்! உதாரணமாக ஹரிகாம்போஜி 28 (ரி2, ஹ 8), லதாங்கி 63 (தா6, ல3).

கடபயாதி
क க ङ ங च ச झ _ ञ ஞ
ट ட ण ண त த ध _ न ந
प ப म ம
य க र ர ल ல व வ श ஷ ष ஷ स ஸ ह ஹ
1 2 3 4 5 6 7 8 9 0

இந்த கடபயாதி கணக்கின் படி 1680548 என்ற எண் அஹர்கணா என்ற நாள்கணக்கு முறையை குறிக்கிறது. அது என்ன நாள்கணக்கு? வருடம், மாதம், திதி, நட்சத்திரம் இதை எல்லாம் எண்களை குறிப்பது போல், இந்திய விண்ணியல் மரபில், கலியுகம் தொடங்கிய நாள் முதல் வருடம் மாதம் திதி பார்க்காமல் ஒவ்வொரு சூர்யோதையத்தையும் ஒரு நாளாக எண்ணும் ஒரு நெடுங்கணக்கு (அஹர்கண) உண்டு.


அஹ: என்ற ஸம்ஸ்க்ருத சொல்லுக்கு நாள் என்று அர்த்தம், கண என்றால் எண்ணிக்கை. அஹ: + கண புணர்ந்தால் அஹர்கண என்று சந்தியோடு புணரும். மகாபாரத போர் முடிந்த நாளே, கலியுகம் தொடங்கிய முதல் நாள் என்பது ஒரு மரபு. இதற்கு யுதிஷ்டிர ஷகம் என்றும் பெயருண்டு. நாம் பயன்படுத்தும் கிருஸ்த்துவ கேலண்டர் முறையில் மகாபாரதப் போர் கிமு 3102 ஆம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம் பதினேழாம் நாள் அஸ்தமித்து பதினெட்டாம் விடியும் நாளே கலியுக முதல் நாளென கொண்டு,  அன்றிலிருந்து கணக்கிட்டால் மேற்சொன்ன 1680548, கி.பி. 1500 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் நாளை அஹர்கண திட்டத்தில் குறிக்கும்.

தான் தந்த்ர ஸங்க்ரஹ (Tantra Sangraha) நூலை இயற்றிய நாளை, நீலகண்ட சோமசத்வன் இப்படி முதல் ஸ்லோகத்தின் எட்டு எழுத்தில் மறைத்துள்ளார் என்று, நூலின் மொழிப்பெயர்ப்பாளர்கள் விளக்குகின்றனர்.