Monday 30 October 2017

அசோகத்தூண் கண்டெடுத்த கதை

அசோகத்தூண் கண்டெடுத்த கதை
(வில்லியம் ஜோன்ஸ், ஜேம்ஸ் பிரின்செப் வாழ்த்து)
வில்லியம் ஜோன்ஸ்

ஜேம்ஸ் பிரின்ஸெப்

23.10.2016 அன்று, ஆர்.கே. கன்வென்ஷன் சென்டரில், நான் (ர. கோபு) ஆற்றிய உரையின் ஒரு பகுதியை, பாடலில் சொல்லியுள்ளார் சுதர்சனம். அவர் அனுமதி பெற்று இப்பாடல்களையும் பொழிப்புரையையும் பதிவிடுகிறேன். அதற்கும் பின் என்னுடைய விளக்கத்தை படிக்கலாம்.
அறுசீர் விருத்தம்
மா காய் காய் வஞ்சி விருத்தம் இரட்டித்தது
வண்டித் தடமமைத்த பணியாளர்
... வாகாய்ப் பிடித்தொருநீள் பெருங்குழவி
மண்ணைப் பொடித்தழுத்த உருட்டிவந்தார்;
... மேலைக் கடலிருந்து மேற்பார்வை
பண்ண வந்ததுரை பிரின்சப்பு
... ‘பெற்ற தெங்ஙனமிக் குழவி’யென்ன
‘உண்டிவ் விடத்தினிலே என்றுமெ’ன்றார்
... நுனியில் சிறுத்தடியில் பருக்குழவி!  (1)

மெத்தப் பெருநீளக் குழவியது
... மருங்குக் குமருங்காய் மல்லாந்து
மொத்தப் பரப்புக்கும் உருண்டதுபார்!
... மங்கும் விழித்திறத்தர் ஆனாலும்
சித்தப் பொறியாளன் பிரின்சப்பு
... சிதைந்த நுனிகண்டு சிந்தித்தான்
‘இத்தைப் பகுத்தீரோ?’ ‘இஃதெ’ன்றார்’
... இளைத்த நாற்சீயம் சிரித்ததங்கே (2)

நின்று நிமிர்த்தியதும் அத்தம்பம்
... நெஞ்சு விறைத்தபடி நின்றதுகொல்!
இன்று நம்நாட்டின் சின்னத்தூண்
... இற்று நிலமுருண்ட கதையிஃதாம்
பின்றை கன்னலுக்குப் புரட்டியதும்
... பீட சோகத்தூண் சோகத்தை
இன்றெ மக்குரைத்தார் சொல்லீசர்
... இவர்தம் பெற்றியினைச் சொலவுண்டோ (3)

(பீட சோகத்தூண் சோகத்தை - பீடு அசோகத்தூண் சோகத்தை)

இரும்புக் குச்சிகளை வளைத்ததுபோல்
... இருக்கும் எழுத்துக்கள் இத்தூணில்;
பரந்து கிடக்கின்ற பாரதத்தில்
... பலவே றிடம்தன்னில் கிடைத்ததென்றார்
தெரிந்த பண்டிதர்கள் இல்லாமல்
... தொலைந்து போனப்பி ரம்மியென்றார்
விரிந்த அறிவுடைநம் கோபுவென்பார்

... விரித்த வரலாற்றைக் கேட்டோமே! (4)

பொழிப்புரை
1. மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் செல்வதற்காகத் தடம் அமைத்துக் கொண்டிருந்த வேலைக்காரர்கள், ஒரு பெரிய நீளமான குழவிக்கல்லை வாட்டமாக வைத்து உருட்டிக்கொண்டு, நிரவிய மண்ணைப் பொடித்துக் கிட்டித்துக் கொண்டிருந்தார்கள்.
எப்படி இருந்த அசோக தூண்
இப்படி சாலை குழவி ஆனது?
அந்தோ!
மேற்குப் புறக் கடல் தாண்டி இச்சாலை அமைக்கும் பணியை மேற்பார்வை செய்யவந்த பிரின்சப்பு துரை (Sir James Prinsep) ‘இந்தக் குழவி எப்படிக் கிடைத்தது?’ என்று கேட்டார்.
பணியாளர்கள் ‘இந்த இடத்திலே ரொம்ப காலமாகக் கிடக்கிறது’ என்றார்கள்.
அந்தக் குழவி ஒரு நுனியில் குறுகியும், மற்றொரு நுனியில் பருத்தும் இருந்தது.

2. மிகவும் பெரிய குழவி அது. எவ்வளவு பெரிதென்றால், சாலையின் ஒரு புறத்தில் இருந்து, மறுபுறம் வரைக்கும், கரைக்குக் கரை மல்லாந்து கிடந்தது.
பிரின்சப்பு துரை, பார்வைக் குறை உடையவர்தான். ஆனாலும், சிறந்த பொறியாளர் (ஜித்தன்!) அந்தக் குழவியின் சிறுத்த நுனியும் சிதைந்து கிடந்தது. இது எப்படிக் குழவியாக இருக்கும் என்று அவர் சிந்தித்தார்.
‘இதை வெட்டினீர்களோ?’ என்று பணியாளர்களைக் கேட்டார். அவர்கள் ‘ஆமாம். இதோ வெட்டிய பகுதி’ என்று காண்பித்தார்கள்.
அங்கே, வெட்டுப்பட்ட , நான்கு சிங்க உருவங்கள் கொண்ட பகுதி சிரிப்பாய்ச் சிரித்துக்கொண்டு கிடந்தது.
துண்டாய் நிற்கும்
அசோகனின் சார்னாத் தூண் தலை

3. (அவர் உடனே அந்தக் குழவியை உயர்த்தச் சொன்னார்)
பணியாளர்கள், அந்தக் குழவியை, நிற்க வைத்து நிமிர்த்தியதும், அது ஒரு கம்பமாய், நெஞ்சை விறைத்துக் கொண்டு, நின்றதே பாருங்கள்!
இன்று நமது இந்திய நாட்டின் சின்னமான தூண்தான் அது! இப்படி, சிதிலமடைந்து, தரையில் உருண்டு கிடந்த கதி இதுதான்!
பின்னால், கரும்பில் சாறு பிழிய, நாம் புரட்டியதும் அதேபோல் இன்னொரு கம்பம் தான். இப்படி பீடு உடைய அசோகத்தூணின் சோகக்கதையை இன்று சொல்லீசர் (நான், முன்பொரு சமயம் Francis Whyte Ellis பற்றி கோபுவின் உரையைக் கேட்டுவிட்டு, அவரைச் சொல்லீசர் என்று ஒரு பாடலில் குறித்திருந்தேன்) எமக்குச் சொன்னார். அவரின் பெருமையை என்னால் சொல்லவும் முடியுமோ?

4. பிரின்சப்பு துரை இரும்புக் குச்சிகளை வளைத்தது போல் இருக்கும் எழுத்துக்கள் இத்தூணில் இருப்பதைக் கண்டார். இந்தப் பரந்த நிலப்பரப்பு கொண்ட பாரத தேசத்தில், பல இடங்களில், இந்த எழுத்துக்கள் காணக் கிடைத்தன.
படிக்கத் தெரிந்த பண்டிதர்கள் இல்லாமல், வழக்கத்தில் இருந்து தொலைந்து போன பிராம்மி எழுத்துக்கள்தான் இவை என்றார்
விசாலமான அறிவு உடைய, நம்முடைய கோபு, இப்படி வரலாற்றை விவரமாகச் சொன்னதை, நாம் கேட்டோம்.

கோபுவின் குறிப்பு
ஒரிசா தலைநகரம் புவனேசுவருக்கு தெற்கே உள்ள தௌலியில், மௌரிய மன்னன் சம்ராட் அசோகனின் கல்வெட்டும், மேற்கே உதயகிரி-கொண்டகிரி மலைகளில் காரவேலன் கல்வெட்டும் உள்ளன. அவை பிராகிருத மொழியில் பிராமி லிபியில் உள்ளன.

பாரத மக்களுக்கு வரலாற்று உணர்வும் ஆர்வமும் மிகக்குறைவு என்பது ஐரோப்பிய வரலாற்று வல்லுனர்களின் கருத்து. பிடிக்காத வரலாற்றை மறக்க முயல்வதும், வசதிக்கேற்ப திரிப்பதிலும் பாரத மக்களுள் சிலருக்கு ஆர்வம் அதிகம் என்பது என்னுடைய சந்தேகம். பாரதம் என்ன, பிறஹா மொழி பேசும் மக்களை தவிற, உலகின் அனைத்து மக்களுக்கும் இந்த பண்பு இருக்கலாம். 

1784ல் வங்காள ஆசிய கழகம் என்ற ஒரு ஆய்வு நிறுவனத்தை வில்லியம் ஜோன்ஸ் என்ற மாபெரும் மேதாவி, கவர்னர் ஜெனரல் வாரன் ஹேஸ்டிங்கிஸின் தலைமையில் நிறுவினார். இந்தியாவை பற்றி பிரமிப்பூட்டும் மாய கதைகளையே அறிந்திருந்த ஐரோப்பிய சமூகத்தை, வரலாற்று ஆய்வுகளாலும் மொழி ஆய்வுகளாலும் அசத்தினார் ஜோன்ஸ். 

சம்ஸ்கிருத, கிரேக்க, லத்தீன, பாரசீக மொழிகளுக்குள்ள தொடர்பை உணர்ந்து, அவற்றிர்க்கு ஒரு தாய்மொழி இருந்து காலத்தால் அழிந்துபோயிருக்கலாம் என்று 1784ல் முதலில் சான்றோடு முன்வைத்தவர் வில்லியம் ஜோன்ஸ். அவை இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்று பெயர் பெற்றன.

அவரை தொடர்ந்து பல மாமேதைகள் ஆய்விற்கும் அற்புதங்களை காணவும் பாரதம் வந்தனர். அவ்வரிசையில் வந்தவர் ஹென்றி கோலப்ரூக், ஹொரேஸ் வில்சன், எல்லிஸ், கால்டுவெல், மார்ஸ்டென். அவர்களுல் ஜேம்ஸ் பிரின்செப் என்பவரும் முக்கியமானவர். பரிதாபமாக, நோயால் நாற்பத்தியெட்டு வயதிலேயே மாண்டு போன ஜோன்ஸ் விட்டுச்சென்ற பணிகளையும் புதிர்களையும், பிரின்செப்பும் பலரும் தொடர்ந்தனர்; புதிர்களுக்கு விடை சமைத்தனர். 

குறிப்பாக இந்தியர்களின் வழக்கிலிருந்து அற்றுப்போன பிராமி லிபியை அபாரமான ஆய்வினால் புரிந்துகொண்டு, கண்டுபிடித்து, உலகுக்களித்து மங்காப்புகழை எய்தினார். இதனால் அறுநூறு ஆண்டு இந்திய வரலாறும், பல மறந்து போன வம்சங்களின் விவரங்களும் நமக்கு கிடைத்தன.
கார்ளா குகை தூணில் பிராமி லிபி
புனா நகரம் அருகே மகாராட்டிரம்
இத்தகைய மாபெரும் சாதனையாளர்களை பாரத சமுதாயம் மறந்திருப்பதும், நன்றி பாராட்டி புகழாதது நம் பேரிழுக்கு.
சென்ற வருடம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் வருடாந்திர கலை உலாவிற்கு ஒரிசாவை தேர்ந்தெடுத்தோம். உலாவுக்கு செல்லுமுன் வாரந்தோரும் ஒரிசா சம்பந்தபட்ட சொற்பொழிவுகள் நடந்தன. ஜோன்ஸ் பிரின்செப்பின் ஆய்வுகள் பற்றியும், பிராமி லிபியை பின்னவர் துப்பரிந்த கதையையும் நான் விளக்கினேன். (முன்னர் இதே தலைப்பில் பேசிய வீடியோ இங்கேகேட்க வந்த நண்பர் சுதர்சனம் அவர்கள் பணிகளை பாடலாக்கினர். இதோ அந்த பாடல்களும், பொழிப்புரையும். (இந்த மாமேதைகளாகிய நெல்லுக்கு பாய்ந்த சுதர்சனத்தின் தமிழ் நீர், புல்லான எனக்கும் ஓரிடத்தில் பாய்ந்துள்ளது)

சுதர்சனம் சிறப்பாக பாடுவார். மாமல்லபுரத்து பல்லவ கல்வெட்டை அவர் பாடியுள்ளார், இங்கே கேட்டு ரசிக்கலாம்
சமண ஜோதிடர் மகாவீரரின் கணித வாழ்த்தை இங்கே பாடியுள்ளார்.