Friday, 24 July 2026

கோவில்வெண்ணி - ஆராய்ந்து அருளேலோர்

வடகலை ரங்கநாதர் பெருமாள் கோவில், கோவில்வெண்ணி

கோவில்வெண்ணி ரங்கநாதர் ஆலயம்


வெண்ணி கரும்பீஷ்வரர் கோவில் கோபுரம்



கரும்பீஷ்வரர் கோவில்

அப்பாவின் அப்பா, தாத்தா கோபாலனும், அவர் சகோதரர்களும், அவர்களது தந்தை அழகியசிங்கமும் பிறந்த ஊர் கோவில்வெண்ணி. தாத்தா கோபாலன் பெரும்பான்மையாக கும்பகோணத்தில் வாழ்ந்து அப்போதைய ஆங்கிலேய அரசில் வேலை பார்த்து, அப்பாவும் உடன்பிறந்தோரும் வாழ்ந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் ஆயினும், தந்தை வழி பூர்விகம் என்று கோவில்வெண்ணி. அப்பாவின் அம்மா செங்கமலம் பிறந்தது திருவரங்கம். குடும்பத்தோடு ஒரு முறை கூட கும்பகோணம் சென்றதில்லை. 2005ல் அம்மா பிறந்த பூண்டி எனும் சிறு கிராமத்திற்கு முதல் முதல் இரண்டு சித்தி ஒரு பெரியம்மாவுடன் விஜயம்.

பூர்வீக தலங்களுக்கு பெற்ற தாய் தந்தையோடு ஒரு முறை கூட செல்லாத விசித்திர குடும்பம். நிற்க. அப்பாவுடன் 2004ல் கும்பகோணம் போக ரயில் டிக்கேட் எல்லாம் எடுத்த பின், ஒரு வாரமாக கும்பகோணம் புகழை பறைசாற்றிய அப்பா, கடைசி நாளில் கும்பகோணம் போக விரும்பவில்லை என்று சொல்லிவிட்டார். 2010ல் அப்பா இறைவனடி சேர்ந்தார். 1981ல் பரமபதம் அடைந்த அம்மாவை சந்தித்து என்ன பேசினார்களோ.
முதன் முறை 2010ல் தான் கும்பகோணம் சென்றேன். அப்பா படித்த நேட்டிவ் ஹை ஸ்கூல் பெரியப்பாக்கள் படித்த டவுன் ஹை ஸ்கூல், இளவயதில் அவர்கள் குளித்து மகிழ்ந்த காவேரி, மகாமக குளம், சாரங்கபாணி சக்கரபாணி ராமசாமி கோவில்கள், டிகிரி காபி, கடப்பா கொட்சு, இலை சாப்பாடு என்று பல் வேறு அனுபவங்கள்.
நாகேச்சுரம், புள்ளமங்கை, தாரசுரம், ராமசாமி கோவில்களின் கண்கொள்ள சிற்பங்களை முதன் முதல் பார்த்து பரவசித்த அனுபவுமும் கூட.
அப்பொழுதே கோவில்வெண்ணியும் போகவேண்டும் என்றும் ஆசை. அதற்கு பின் பல முறை கும்பகோணம் போயிருந்தாலும், ஏதோ காரணம் சாக்கு போகவில்லை. இந்த ஜூலை மாதம் ஆரம்பக்கட்டத்தில் நண்பர் விஸ்வநாதன் கவின் கலை கல்லூரி விழாவில் பேச அழைத்தபோது, கோவில்வெண்ணி மார்கத்திலுள்ள வலங்கைமான், ஆலங்குடி மட்டுமே பிரதான சித்தமாக இருந்தது. அருகில் தானே இருக்கு, கோவில்வெண்ணியும் போகலாமே என்று சக பயணிகளும் ஊக்கம் தர, முதன் முறை அங்கே சென்றோம்.
முதலில் சிவன் கோவிலை தான் சேர்ந்தோம். சக்கரை நோய் உள்ளவர்களுக்கு இங்கே நிவாரணம் என்ற நம்பிக்கையில் கூட்டம் பெருகி, மதியம் ஒரு மணி வரை கோவில் திறந்திருந்தது. அர்ச்சனை தட்டு வாங்கலாம் என்றால் தேங்காய் தீர்ந்து விட்டது என்று ஒரே கடை வைத்தவர் தெரிவித்தார்.
சன்னதியில் பல பேரிடம் பூஜைக்கு அர்ச்சனை தட்டு வாங்கிக் கொண்ட அர்ச்ச்கர் என்னை பார்த்து ஏதோ எண்ணம் மலர்ந்து அர்ச்சனை செய்யப் போரேளா என்று கேட்க, இல்லை தேங்காய் காலியாகிவிட்டதாம் என்று பதில் சொல்ல, அரண்டு போய்விட்டார். இருங்கோ, எங்கிட்டே ஒரு தேங்காய் இருக்கு என்று கூறி, அவரே எடுத்துக்கொடுத்தார்! அடடா! மிக நிதானமாக உள்ளம் உவக்க அர்ச்சனை நடந்த பின், உத்சவ மூர்த்திகளை பார்க்கும் போது சோமாஸ்கந்தர் என்னை பார்த்து லேசாக சிரிப்பது போல் ஒரு சிலுசிலுப்பு.
அடுத்த தெருவில் இருக்கும் பெருமாள் கோவில் மூடியிருக்குமோ என்று ஐயத்துடன், அரசியல் கட்சி சின்னங்கள் சுவர்களை அலங்கரித்த அக்ரஹார வீடுகளை தாண்டிபோனால், பட்டரை தவிற யாரும் இல்லாத ஏகாந்தம். மூலவர் வடகலை ரங்கநாதர்!
என்னது வடகலையா? ரங்கநாதரா? ஆனால் மூலவர் அனந்தசயனம் இல்லையே! ஸ்ரீதேவி பூதேவி சமேதமாக நின்ற கோலத்தில் காட்சி அளிக்க, அவருக்கு முன்னே அதே நின்ற கோலத்தில் திருமகள் நிலமகள் சூடிக்கொடுத்த சுடர்கொடியாள்.
பட்டர் ஸ்ரீநிவாசன் ஆர்த்தி சேவை நடத்திய பின் நீளமாக தல புராணத்தை விவரித்தார். கரிகாலச் சோழன் மாபெரும் வெற்றிகண்ட போர்களம், இந்த வெண்ணி. சங்கப் புலவர் வெண்ணிக்குயத்தியாரும் வாழ்ந்த ஊர். ஆடவல்லானுக்கு பல மாடக்கோவில்கள் கட்டி புகழும் புண்ணியமும் சூட்டிக்கொண்ட கோச்செங்கட் சோழன், எழுபது போர்களில் வென்ற பின் ஒரு போரில் தோல்வியடைய, அவன் கனவில் தோன்றிய திருமால் இந்த வெண்ணி தலத்தில் எனக்கு ஒரு கோவில் எழுப்பினால் உன் அடுத்த போரில் வெற்றி என்று வரமளித்தானாம். இதை கேட்டபோது வடகலை சிறப்பு பட்டமெல்லாம் மறந்தே போய்விட்டது.
பாடல் பெற்ற தலமா, வைப்பு தலமா என்று கேட்டபோது, இந்த பெருமாளை அனைவரும் பார்க்கமுடியாது. ”மாரி மலை முழஞ்சில் மன்னிகிடந்துறங்கும் சீரிய சிங்கம் அறிவுற்று தீவிழித்து” என்று பாசுரம் பாடிய ஆண்டாள், "காரியம் ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்” என்று ஈற்றடி வைத்தாள். இந்த பெருமாள் ஆராய்ந்து அருள யாரை அழைக்கிறாரோ அவர் மட்டுமே இங்கே வந்து தரிசனம் பெருவார்கள் என்று ஒரு விளக்கமளித்தார்.
எந்தையும் தாயும் அவர் முந்தையும் மூதாயும் மகிழ்ந்து குலாவிய தலத்திற்கு அப்போதைக்கு இப்போதே தப்paபாமல் சென்று வந்த ஒரு திருப்தி.

ஸ்வஸ்தி ஸ்ரீ!



No comments:

Post a Comment