Showing posts with label கச்சேரி. Show all posts
Showing posts with label கச்சேரி. Show all posts

Monday, 23 December 2013

மார்கழி இசை அனுபவம்

வாழை இலை பாய் விரித்து கச்சேரி ஆரம்பம். அமர்ந்து கோரி வர்ணமாக லட்டும், வடை போன்று ஏதோ வடக்கிந்திய பக்ஷணமும் – வட? வடாம் இல்லை. அனுபல்லவிக்கு, மரவள்ளிக்கிழங்கு வருவல் மொரு மொரு என்று.

வடக்கு வந்துவிட்டால் மேற்கும் பின் தொடராதோ? பீன்ஸ் பருப்புசுலி, அதில் சிட்டஸ்வரமாக பட்டாணி. நாவிலே இந்நேரத்தில் எல்லோருக்கும் ஸ்ருதி சேர்ந்து விட்டது.

அன்ன ஆலாபனை ஆரம்பம். பக்க ஆலாபனைக்கு பருப்பும் நெய்யும். குரலால் சொல்லும் ஸ்வரமும் ராகமும் பிசைவது போல் விரலால் இவற்றை பிசைந்து ருசித்தேன். ரசித்தேன். தயிர் பச்சடி சர்வ லகுவாக பருப்பு சாதம் முதல் ரசஞ்சாதம் வரை லயித்தது.
புளியோதரை சோலோ.

சாம்பார் பல்லவி, அப்பளம் அனுபல்லவி. நிரவலாக பருப்புசுலி. பாவைக்காய் பிட்லை ஸ்ருதிபேதம். சமையல்க்காரரின் கல்பனா ஸ்வரத்திற்கு அங்கங்கே பரிமாரியவர்கள் மாறி மாறி சாதித்து லயம் சேர்த்தனர்.

இந்த விஸ்தாரத்திர்க்கு அடுத்து, சுருக்கென்று ஒரு வாழைப்பூ காரக்குழம்பு. சாம்பாருக்கு சமானமாக. காரைக்குடி பாணி.

அமுதுண்டால் சாற்றும் அமுதின்றி ஆகுமோ? ஆசை முகம் மறந்து போகுமோ?

எப்போ வருவாரோ என்று கேட்கவைக்காமல், கிண்ணத்தில் கண்ணனமுது.

தனி ஆவர்த்தன தயிரும் தீர்மான மோர்மிளகாயும். மங்களமாய் மினரல் வாட்டர்.

இந்த அற்புத கச்சேரி : மியூசிக் அகடமியில் நேற்று, ஞாயிறு டிசம்பர் 22. மார்கழி அனுபவத்தை உங்களுடன் பகிர்வதில் இன்பம். அந்தரிக்கு வந்தனம்.



மறக்கும் முன் – யாரோ உள்ளே பாடிக்கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கியில் கேட்டது.