Showing posts with label உணவு. Show all posts
Showing posts with label உணவு. Show all posts

Tuesday, 10 August 2021

அளிந்தது நெல்லளவு

ஆறு மாதமாக மதிய சாப்பாட்டுக்கு அரிசி அளிந்து, ஊரவைத்து, குக்கரில் பொங்க வைக்கிறேன். அம்மா இருக்கும்போதே சொல்லிக்கொடுத்த பழக்கம். சமையலுக்கு வீட்டில் ஆளில்லாத போது பள்ளி காலத்திலேயே பழகிவிட்டது. கூடவே, பாத்திரம் கழுவவும், துணி தோய்க்கவும் என் பத்து வயதிலேயே அம்மா கற்றுக்கொடுத்தாள். அமெரிக்கா வாழ்க்கையில் இதெல்லாம் உதவியது. 

அரிசியை அளிந்து, அழுக்கு நீரை வடிகட்டும் போது அவ்வப்போது, தூசி, மணல், ஓரிரு சிறு கற்கள், வழி தவறிய தானியம் எல்லாம் மாட்டும். அவ்வப்போது ஓரிரு புழு பூச்சி கூட மாட்டும். ஆனால அமெரிக்காவில் அரிசியில் புழு பூச்சி எதுவும் இருந்த ஞாபகமில்லை. 

பள்ளி பருவத்தில் பாலோ, பாலில் கலந்த போர்ண்விட்டா, பூஸ்ட், ஹார்லிக்ஸ் அருந்துவோம். அவ்வப்போழ்து சக்கரையிலிருந்த எறும்பு பாலில் மிதக்கும். எறும்பிருந்தால் எறும்பை தூக்கிப்போட்டு விட்டு பாலை குடித்த ஞாபகம். ஈ இருந்தால் பாலையே கொட்டிவிடுவோம், குடிக்கமாட்டோம். பள்ளிக்கால நண்பர்கள், குறிப்பாக அசைவம் சாப்பிடும் நண்பர்கள், இதை நான்வெஜிடேரிய பால், நான்வெஜிடேரியன் காபி, பூஸ்ட் என்று கிண்டலடிப்பார்கள். ஒரு முறை நூட்ரமுல் பொடியில் கறப்பு செத்துகிடந்து. எனக்கு போட்டுக்கொடுத்து நான் குடிக்கும் போது என் தங்கை தம்பிக்கு நூட்ரமுல் பொடி எடுக்கும் போது அம்மா செத்த கறப்பான்பூச்சியை பார்த்து அலரி என்னிடம் குடிக்காதே என்று எச்சரித்தாள். அதன் பிறகு ஒரு வாரம் பாலே குடிக்கவில்லை. ஒரு வருடம் நூட்ரமுல் பார்த்தாலே கொமட்டும், இன்னொருவர் வீடு என்றாலும். 

கல்லூரிகாலத்தில் நான்காம் ஆண்டில் முதல் முதலாக சில நண்பர்கள் நான் அவர்களுக்க பிராஜக்டிற்கு உதவியதற்கு நன்றியாக ராஜபாளையத்தில் கந்தர்வா ஹோட்டலில் விருந்துக்கு அழைத்தார்கள். அனைவரும் அசைவம் நான் மட்டும் சைவம். முதன் முதலில் ஒரு அசைவ ஹோட்டலில் கால் வைத்தேன். நான் ஒரு மேசை, சைவம் சாப்பிட்டேன், அவர்கள் அடுத்த மேசை; அசைவம். நூட்ரமுல் அளவுக்கு மோசமில்லை எனினும், இனிமேல் அசைவ ஹோட்டல் வாசப்படி மிதிப்பதில்லை என்று மனதளவு சொல்லிக்கொண்டேன்.

ஒரு வருடம் கழித்து மேல்படிப்பு படிக்க அமெரிக்கா பயணம். வாரம் மூன்று நாளாவது சப்வே, பிட்சா, பரிட்டோ என்று அசைவமும் விற்கும் கடைக்கு சென்று சாப்பிடவேண்டும். வாங்குவது சாப்பிடுவது சைவமானாலும், அதே மேடையில் அசைவ உணவும் இருக்கும். ஏன் காந்தி, ராமானுஜனெல்லாம் பாரதம் திரும்பிய பின் ஜாதிப்ரஷ்டம் செய்யப்பட்டனர் என்று புரிந்தது. ஒரு வாரம் மாமா பழக்கிவிட்டார். பிறகு நானும் பழகிவிட்டேன். 

ஆனால் அமெரிக்காவில் அசைவ உணவகத்திலும் அசைவ வாசனை வராது. அவர்கள் உணவில் சமைக்கும் போது உப்பை கூட போடமாட்டார்கள் (அதனால் தான் டேபிளில் உப்பு மிளகு தனியாய் இருக்கும்). இந்திய அசைவ சமையலில் முக்கால் வாசனை அதில் சேர்க்கும் மசாலா வகைகள் என்று தெரிந்து கொண்டேன். அதனால் பெரும்பாலும் சகித்து கொள்ள முடிந்தது. மாறாக நம் சைவ உணவுகளின் வாசனை, பல அமெரிக்கர்களை திகைக்க வைத்தன என்று புரிந்தது. நியு யார்க் ஏர்போர்ட்டில் மாமாவின் பெருங்காய டப்பியை மோந்து பார்த்து திணரிப்போன கஸ்டம்ஸ் அதிகாரி, “இதையா உங்கள் சாப்பாட்டில் கலக்கிறீர்கள்?” என்று பரிதாபமும் வியப்பும் கலந்து கேட்டாராம். 

இந்திய உணவுகளை பல நகரங்களில் அமெரிக்கர்கள் விரும்பியே அருந்துகின்றனர். சீன உணவை தவிற, மற்றபடி இத்தாலிய, மெக்சிக, பாரசீக, தாய்லாண்டு, முக்கியமாக எத்தியோப்பிய உணவை.... எல்லாவற்றிலும் சைவம் உண்டு... மிக சுவையாக இருக்கும்... அமெரிக்காவில் தான் எனக்கு அறிமுகம். வடக்கு இந்திய உணவு என்றால் சோளே பட்டூரா, நான், பனீர் பட்டர் மசாலா என்ற ஞான சூனியமாக இருந்தேன். கலிபோர்ணியாவில் தான் முதல் முறை குஜராத்தி உணவு ருசித்தேன். 

பற்பல இடங்களில் இது சைவமா இல்லையா என்று யோசித்து சாப்பிடவேண்டியதும், மதுபானங்கள் காபி டீ போன்ற அன்றாட பண்பாட்டு சின்னங்கள் என்பதும், நான் மீண்டும் பாரதம் திரும்ப பல காரணங்களில் ஒரிரு காரணங்கள். அதற்குள் இந்தியாவிற்கு பிட்சா, சப்வே, பரிட்டோவில்லாம் வந்துவிட்டன. நிற்க. 

இந்த வருடம் ஜனவரி முதல் அரிசி அளிந்து சாதம் வைக்கும் போது ஓரிரு பூச்சி சிக்கும். எறும்பு மிதந்த நான்வெஜிடெரியன் காபி போல் பூச்சி மிதந்த நான்வெஜிடேரியன் அரிசியோ? 

ஒரு மாசத்தில் பூச்சித்தொகை பிரம்மாண்டமாக பெருகிவிட்டது. ஒரு சின்ன டம்பளரில் அரிசி எடுத்து அதை தண்ணீரில் அலம்பும் முன், ஒரு தட்டில் போட்டு, பூச்சி புழுக்களை கொல்லாமல், ஒதுக்கி ஜன்னல்மேல் விட்டுவிட்டு, அரிசி அலம்பலாம் என்று முடிவெடுத்தேன். டம்ப்ளர் அரிசியை ஏழு எட்டு முறை கொஞ்சம் கொஞ்சமாக தட்டில் பரப்பி, பூச்சிகளை புழுக்களை ஓரம் தள்ளி, பாக்கி அரிசியை பாத்திரத்தில் கொட்டி... ஒவ்வொரு தட்டு குவியலிலும் ஒரிரு பூச்சி அல்லது புழு என்று ஜூலை மாத ஆரம்பம் சென்றது. ஆகஸ்ட் மாதம் ஒவ்வொரு தட்டு குவியலிலும் நாலைந்து பூச்சி. புழுக்களெல்லாம் கடைசி இரண்டு தட்டில் மட்டும். அந்த ஜன்னலில் விட்ட பூச்சி எல்லாம் எங்கோ மாயமாக சென்றுவிடுகின்றன. அந்த பூச்சகிள்ளுக்கு முதல் வாரம் ஓரிரு நெல்லை ஜன்னலில் வைத்தேன். ஒரு முறை ஒரு புழுவை மூன்று எறும்புகள் இழுத்து செல்வதை கவனித்தேன். சிபிச்சக்கரவர்த்தி பிரச்சனை. 

எத்தனை பூச்சிகளை விடுவித்தாலும் எப்படியேனும் மிகமிகச்சிறிதான ஓரிரு பூச்சி அலசலில் தப்பித்து, அலம்பும் நீரில் மூழ்கி சாகும். 

சமீபத்தில் சங்கரநாராயணன் ஒரு பதிவில், உழவு பார்க்குமுன் நம் உழவர்கள் செய்யும் அறக்களவேள்வி பற்றி புறநானூற்று குறிப்பும் பராசர ஸ்மிரிதி குறிப்பும் பகிந்ர்ந்தார். இந்த வேள்வி செய்தால் ஏரிட்டு மண்ணை உழும்போது புழுபூச்சிகளை துன்புருத்திய பாவத்திலிந்து விடுபடுவார்களாம். 

கொன்னா பாவம் தின்னா போகும் என்று ஒரு பழமொழி. கோழி ஆடு மாடுக்கு மட்டுமா, புழுபூச்சிக்கும் இது ஒவ்வுமா என்று தெரியவில்லை.

பின் குறிப்பு, ஆகஸ்ட் 12, 2021. அளிந்து என்ற சொல்  புதிது என்று தோழி வல்லபா ஸ்ரீநிவாசன் முகநூலில் கேட்க, பத்ரி சேஷாத்ரி இந்த பதில் எழுதியுள்ளார்:
அளைந்து => அளிந்து. அளைதல் = துழாவுதல். அரிசியை நீரிலிட்டுத் துழாவி, அதில் உள்ள அழுக்குகளையும் பூச்சிகளையும் களைதல். ஐயங்கார் வழக்கு

உதாரணம் ”வெண்ணெய் அளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு” - என்ற பெரியாழ்வார் பாசுரம்













Thursday, 10 December 2015

வான் மழை பொய்ப்பினும்


சென்னையில் வெள்ளம். ஆனால் பாரதத்தில் வரட்சி. பிகார் தேர்தல், பசு வதை, ஆமிர் கான், டிப்பு சுல்தான் நாடக அவலங்களில் இது செய்தி இல்லைதான். ஆனால் ஏன் செய்தி இல்லை? டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வந்த சுவாமிநாதன் ஐயரின் கட்டுரை விளக்குகிறது. நல்ல செய்தி என்றாலே அலறி ஓடுவோர் படிக்கவேண்டாம். இது என் மொழிபெயர்ப்பு

-------கட்டுரை மொழிபெயர்ப்பு ஆரம்பம்-----
பருப்பு விலை இப்படி அபாரமாக ஏறிவிட்டதே,” என்று என்னை கேட்கும்போது எனக்கு ஆச்சரியம் பொங்குகிறது. மழையின்றி இரண்டு வருடங்கள் வரண்டு வாடியுள்ளது பாரதம். வரட்சி இருந்தும் ஏன் உணவு விலை ஏன் மலை ஏறவில்லை என்றல்லவா மக்கள் கேட்கவேண்டும்!

1965 நான் பத்திரிகை நிருபரானேன். அன்றும் பாரதம் இரண்டாண்டு தொடர்ந்து மழையின்றி வரண்டது. தானிய உற்பத்தி இருபது சதவிகிதம் குறைந்தது; பஞ்சம் பட்டினி நாட்டை வாட்டியது; விலைவாசி விண்ணை முட்டியது. வெட்கக்கேடாக, இந்தியா பரிதாபமாக அமெரிக்காவிடம் உணவுக்கு கெஞ்சியது. “கையிலிருந்து வாய்” வருமை போல் “கப்பலிலிருந்து வாய்” வருமை என்று பேசப்பட்டது.

ஐம்பது ஆண்டுகளுக்கு பின் – இரண்டு தொடர் வரட்சிகளின் பாதிப்பே தெரியாமல், பஞ்சம் பட்டினியில் வாடாமல், பருப்பு விலை ஏறியுள்ளதே என்று கேட்கும் நிலைமைக்கு பிரம்மாண்டமாக முன்னேறியுள்ளோம். 2014-15 புள்ளிவிவரப்படி, 12% குறைந்த மழை பெய்தாலும், வரட்சி இருந்தும், அதை மீறி விவசாய விளைச்சல் சற்றே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு 14.3% குறைந்த மழை பெய்தாலும் ஆறு மாதங்களில் விவசாய விளைச்சல் அதிகரித்துள்ளது. தொலைகாட்சி நிருபர் நாடெங்கும் தேடியும் பட்டினியில் வாடும் கிராமவாசிகள் யாருமில்லை. வரட்சி செய்தியே இல்லை!

மழை பொய்ப்பின், விவசாயம் மட்டும் அல்ல, மற்ற உற்பத்தியும் சேவைகளும் அடிபடுவது வழக்கம். நெசவு, சணல், சக்கரை, சமையல் எண்ணை இவை யாவும் விவசாயத்தை நம்பும் துறைகள். விதைத்தல், அருவடை, சாகுபடி, போக்குவரத்து, செக்கு, பொட்டலம், போன்றதொழில்கள் விவசாயம் சார்ந்தவை. பாரதம் சுதந்திரம் வாங்கிய முதல் ஐம்பது ஆண்டில் 45% ஜிடிபி மாற்றம் மழையால் பாதிக்கபட்டது என்று பொருளியலாளர் அரவிந்த வீர்மணி காட்டியுள்ளார்.

1965, 1966 ஆண்டு வரட்சிகளும் பஞ்சமும் கண்ட மேலை நாட்டு நிபுணர்கள், இந்தியா என்றுமே சோற்றுக்கு கையேந்தி வாடும் என்று ஆரூடம் சொன்னார்கள். வில்லியம் பேட்டாக்கும் பால் பேட்டாக்கும் எழுதிய “பஞ்சம் 1975” அந்த வருடம் (எழுதிய பத்து ஆண்டுகளுக்கு பின்) உலகமே பஞ்சத்தில்  வாடும் என்றனர். மேலை நாடுகளின் தானியங்கள் காப்பாற்ற முடிந்த நாடுகளுக்கு மட்டுமே தரவேண்டும் என்றும், இந்தியாவை போன்ற காப்பாற்ற முடியாத நாடுகள், அவர்களின் விதிக்கு விடப்படவேண்டும் என்று கூறினர். இந்தியர்கள் கொதித்து குமைந்தாலும், மேற்கத்திய சமூகங்களில் பலர் இக்கருத்தை பாராட்டினர். ”ஜனத்தொகை வெடிகுண்டு” என்ற நூல் எழுதிய பசுமை போராளி பால் எர்லிக், இந்த பேட்டாக் சகோதரர்களை வானளாவி புகழ்ந்தார்.

இன்றோ! இரண்டு வரட்சிகளை அலட்சியமாக கையாளுகிறோம். இந்த மாற்றத்தின் காரணம் என்ன? பசுமை புரட்சியால் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் தானியங்கள் அதிகரித்தது என்று சிலர் கருதினாலும், உண்மையில் தனிநபர் தானிய அளவு1964 இல் உச்சத்தை எட்டியது; அதன் பின் சரிந்தது. உணவு வினியோகத்தை சரியாக செய்ததால் பஞ்சங்களை தவிர்த்தோம். பஞ்சம் நிலவிய மாவட்டங்களில் அரசின் கிராம வேலை வாய்ப்பு திட்டங்களால், உணவு பொருட்களை வாங்கும் அளவுக்காவது மக்களிடம் செல்வம் வளர்ந்தது. பசியிருந்தாலும் பட்டினியில்லை.

அடுத்த சில ஆண்டுகளில் வருமானம் ஏறியது. தானியங்களை தாண்டி, மற்ற உணவுகள் புழக்கமாயின. தனி நபர் தானிய பருகல் குன்றி, எதிர்பாராமல் தானிய மிகுதி உண்டானது. 1990களில் இந்தியா தானியங்கள் வெளிநாடுகளுக்கு விற்கும் அளவு விவசாயம் செழுந்தது. அரிசி ஏற்றுமதியில் இன்று உலகில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது! வரட்சி ஆண்டுகளிலும் உணவு ஏற்றுமதி செய்யும் நாடாக மாறியது. ஒரு கையேந்தி நாடு கண்ட மாபெரும் முன்னேற்றம் இது.

பசுமை புரட்சியால் வரப்புக்கு வரப்பு வயலுக்கு வயல் நெல் உயர்ந்தது. குழாய்க்கிணறுகளால் நீர்பாசன வசதி பெருகி, ராபி பயிர், கரிஃப் பயிருக்கு நிகராக விளைச்சல் தந்தது. பாசன நிலங்கள் அறுபது சதவிகிதம் பெருகின. வான் பொய்ப்பினும் பஞ்சம் தவிர்க்கும் திறன் பெற்றோம்!

முக்கியமாக, இந்திய பொருளாதாரத்தில் விவசாயத்தின் பங்கு லயமாக சரிந்தது. 1950இல் இந்திய பொருளாதாரத்தில் 52% நிலவிய விவசாயம், இன்று 2015இல் 14% ஆக சரிந்தது. சேவைத்தொழில்கள் இந்திய பொருளாதாரத்தில்  60% ஆக கோலோச்சுகின்றன. இத்தொழில்கள் பருவமழையை நம்பி செழிப்பவை அல்ல. தொழிற்சாலை உற்பத்தியும் நெசவு சக்கரை சணல் என்று விவசாயத்தை நம்பும் தொழிலாக இல்லாமல், பொறியியல் ரசாயனம் என்று அகலமாக பரவியுள்ளன.

1970களில் வருமானம் உயர, விவசாய முறைகள் மாறின. தனிநபர் நெல் உற்பத்தி சரிந்து, பால, பருப்பு, எண்ணைகள், சக்கரை, தேயிலை, முட்டை, காய், கனி போன்ற உணவுகளின் உற்பத்தி உயர்ந்தது. சமூகத்தின் அடுத்தக்கட்ட தேவைகளையும் பூர்த்தி செய்தன; உழவர்களின் வருமானத்தையு வளர்த்தன.

மூன்றில் இரண்டாக நிலவிய பாரம்பரிய பயிர்களின் உற்பத்தி பாதியாக சரிந்தது. கறும்பு, நாறு, எண்ணைவிதைகள் போன்றவை இவற்றுள் அடங்கும். காய் கனி கோழி மீன் கால்நடை போன்ற மற்ற பாதி, பயிரளவு மழையை நம்பி இல்லை. இதுவே வரட்சியிருந்தும் இவ்வாண்டு விவசாயம் வளர்ச்சி கண்டதன் ரகசியம்.

ஆனால் இதற்கு ஒரு விலை கொடுத்துள்ளோம் - சுற்றுசூழலின் சீரழிவு. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து நிலத்தடி நீர் அபாயகரமாக குறைந்துள்ளது. அரசியல்வாதிகள் உழவருக்கு மின்சார கட்டணம் வசூலிக்க மறுக்கின்றனர். செய்தால் தேர்தலில் தோல்வி நிச்சயம் என்பது அவர்களது கணிப்பு. சூரிய ஒளி பம்புகளை உழவருக்கு கொடுத்து, மற்ற மின் தேவைகளுக்கு வசூல் செய்தால் இந்த சீரழிப்பு  குறையலாம்.

-------கட்டுரை மொழிபெயர்ப்பு முற்றும்-----


பின்குறிப்பு

செவ்வாய் கிரகணத்திற்கு மங்கள்யான் ராக்கெட் விடுவதை விட, இந்தியர்கள் பன்னாட்டு கம்பெனிகளில் கோலோச்சுவதை விட, ஜனநாயகம் ஓங்கியதை விட, அணுகுண்டு ஏவுகணை சாதனைகளை விட, ஆஸ்கார் நோபல் கிரிக்கட் உலக கோப்பை வென்றதை விட, இது ஒரு மாபெரும் சாதனை.

உழவர் தற்கொலை, வெள்ளச் சேத உயிரிழப்பு, சாலை விபத்தில் உயிரிழப்பு எல்லாம் துன்பக்கேடுகள். ஆனால் கோடிக்கணக்கில் பஞ்சம் பலிவாங்கிய நாட்டில் இந்த முன்னேற்றம் ஈடு இணையற்ற இதிகாச தொடர்ச்சி.

ஜகத்தினில் பசியில்லை, களித்திடுவோம்.


உழவர் தற்கொலை - சுவாமிநாதன் ஐயர் கட்டுரை


பசுமை புரட்சி கட்டுரைகள்

முதல் பசுமை புரட்சி - செயற்கை எரு
இரண்டாம் பசுமை புரட்சி - டீசல் வண்டிகள்
நான்காம் பசுமை புரட்சி - வரப்புயர்த்திய வல்லவன் 

அணைகளும் நீர்பாசன முன்னேற்றங்களும் மூன்றாம் பசுமை புரட்சி என்பது என் கருத்து. அதை பற்றி நான் எழுதவில்லை

Saturday, 12 September 2015

அமெரிக்காவின் தலை சிறந்த காபி

தமிழ்நாட்டு ஃபில்டர் காபி அருந்தி பழகியவர்களுக்கு அதன் மேல் அதிக பிரியம் மட்டுமில்லை, ஒரு தனிவிதமான கர்வமும் உண்டு. காபி பழக்கம் வரலாற்றில் மிக சமீபமானதே என்று நம்மில் பலர் அறிவோமில்லை. அறிந்தாலும் ஏற்றுக்கொள்ள மனமிறாது; கொஞ்சம் கர்வம்தான். ஃபில்டர் காபி என்றில்லை, எந்த காபியை பற்றியும் இந்த கர்வமுண்டு. தென்னாடுடைய சிவன் மட்டுமா? காபி உடைய தென்னாடு அல்லவா?

காபி, ஒரு அரபிய பானம். நதிமூலம் ரிஷிமூலத்தை போல, காபிமூலம் கேள்விக்குறியது. தேநீரின் சீன வரலாற்றை போல, காபிக்கு ஒரு வரலாறு உருவாகவில்லை. போதிதர்மரின் கண்ணிமை போல் ஒரு வட்டார கதையும் இல்லை. நானூறு ஆண்டுகளுக்கு முன் மத்திய ஐரோப்பாவில் அறிவாளிகளின் பானமாக மாறியது. சக்கரை யுகத்திற்கு முன்னரே காபி யுகம் தொடங்கிவிட்டது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், தமிழகத்தில் காவிரிக்கு போட்டியாய் காபிநதி பாயத்தொடங்கியது. பிராமண சமூகத்தில் ஆசாரங்களை மீறி, உடைத்து, கௌரவத்தை குறைக்காமல், அந்தஸ்த்தை கொஞ்சம் வளர்க்கும் பொருளானது. வடக்கிந்தியாவை காபி வெல்லவில்லை. தமிழனைக் கேட்டால் பன்ருட்டி பலா, மணப்பாரை முறுக்கு, கும்பகோணம் காபி என்பான். ஆனால் மயிலாப்பூரில் மானமுள்ள மாமா மாமி ஒருத்தரும் இதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். காபி மயிலையின் ஆஸ்தான பானம்.

பால பால் காண்டம்

நான், காபி அருந்தும் தாய்க்கும் டீ அருந்தும் தந்தைக்கும், மயிலையில் பிறந்த போர்ண்வீட்டா பயில்வான். ஹார்லிக்ஸ் வீவா நியூட்ரமுல் பூஸ்ட் என்ற பால்ய பருவத்து பான பெருங்கடலை கடந்து, பதிமூன்று வயதுக்குள் காபி பழக்கத்தை கற்றுக்கொண்டு, தொண்டைக்கு மஞ்சள் நீராட்டுவிழா கண்ட வித்தகருக்கு நடுவே, பசும்பால் சப்பாணியாக பலவருடம் வளர்ந்துவந்தேன். மற்றவர் இல்லத்தில் வெங்கடேச சுப்ரபாதமோ விவித் பாரதி சஹஸ்ரநாமமோ ஒலிக்க எங்கள் வீட்டில், “கோபு, காபி போட்டு தா, டா”, என்று என் தம்பி ஜெயராமனின் உரிமை குரல் கர்ஜிக்க, கூவம் நதிமிசை வெயிலிலே, சேர நன்னாட்டு டீ புரக்கணித்தே, அரபுவிதை டிகாஷன் கொதித்திடவே, ஆவின் பாலாற்றி அளித்திடுவேன். ராமன் எஃபெக்ட்டை காபியில் பார்க்காவிட்டாலும், காபியின் விளைவை ஜெயராமனில் பார்த்து களித்தேன். ஆனால் கல்லூரி காலத்திலும் சரி, தொழில் செய்த காலத்திலும் சரி, நான் என்றோ எப்பொழுதோ அருந்திய அபூர்வ பானமாகவே காபி விளைந்தது. 

டெக்ஸாஸ் மாகாணத்தில் படிக்க சென்றபோது, சூடாக பால் அருந்தும் பழக்கம் போனது.  அமெரிக்காவில் பாலை சுடவைத்து குடித்தால், கொமட்டும். ஜில்லென்ற பாலில் சீரியோஸ், கார்ன் ஃப்லேக்ஸ் வகையறா சீரியல் சாப்பிட கற்றுக்கொண்டேன்.

காரும் காபியும்

பின் 1994இல் தொழில் செய்ய சியாட்டில் நகருக்கு சென்றேன். சியாட்டில் அமெரிக்காவின் காபி தலநகரம். விமானம் செய்யும் போயிங் கம்பெனி, பின்னர் மைக்ரோஸாஃப்ட், பின்னர் அமேசான், எல்லாம் பிரபலமாகுமுன், அது மரம் வேட்டும், காகிதம் செய்யும் நகரமாக தொடங்கியது. துறைமுகமும் முக்கியம். அங்கே என்றோ காபி கலாச்சாரம், அமெரிக்காவில் எந்த ஊரிலும் இல்லாத அளவு, பெரிதாக தொடங்கிவிட்டது.

முதல் ஸ்டார்பக்ஸ் காபி கடை நிறுவபட்ட ஊர் சியாட்டில். மைக்ரோஸாஃப்ட் சியாட்டில் நகருக்கு அரிசோனாவிலிருந்து இடம் மாறிய பின், உள்ளே அடைந்து கம்ப்யூட்டரை 15 மணிநேரம் பேந்த பேந்த விழித்து பார்க்கும் ஊராக மாறியதை கண்டு, இத்தாலியில் காபி கலாச்சாரத்தையும், அதனால் செழித்திருந்த சமூக உறவுகளையும் கண்ட ஹொவர்ட் ஷுல்ட்ஸ் (கேள்வி: இவர் பெயரை கிரந்த எழுத்தின்றி, தூய தமிழில் எழுதமுடியுமா? சுலுசு? சுலசன்? சூலசேய காபி நாயனார்?), ஒற்றை கடையாய் நின்ற ஸ்டார்பக்ஸை வாங்கி பல கடைகளாக பெருக்கினார்.


எனக்கு பிடிக்காத காபி வகைகள்


காபி கிட்டிய கிட்கிந்தா காண்டம்

Starbucks ஸ்டார்பக்ஸ், Seattle's Best Coffee சியாட்டிலின் பெஸ்ட் காபி, போன்ற கடைகளுள்ள சியாட்டிலுக்கு நான் 1994இல் வந்தேன். ஒரு கார் வாங்கினேன். கல்லூரி காலத்தில் இல்லாத சம்பளமும், காரும் கிட்டியதால் அக்கம் பக்கம் சில நண்பர்களோடு சனி ஞாயிறு பயணங்கள் செய்ய தொடங்கினேன். நீண்ட பயணங்களின் போது மட்டும் பெட்ரோல் கடைகளில் நிறுத்தும் போது, தலைவலி களைப்பு குறைய, காபி அருந்துவேன். வருடம் இரண்டோ மூன்றோ. அவ்வளவே. 

அப்பொழுதெல்லாம் மாலை நேரம் சில நண்பர்களோடும், சக அலுவலர்களோடும் கூடைபந்து ஆடும்பழக்கமிருந்தது. 1997 இல் ஸீக்வெல் ஸெர்வர் SQL Server குழுவிலிருந்து எம்.எஸ்.என் MSN குழுவுக்கு மாறினேன். அங்கே மதியம் கூடைபந்து ஆடும் பழக்கம் வந்தது. சியாட்டிலில் வெயில் இல்லை, மதியம் சுகமாக ஆடலாம். விளையாடுவோருக்கு குளியல் அறையை மைக்ரோஸாஃப்ட் செய்திருந்தது. அங்கேயே குளித்து, மதியம் உணவு அருந்தி, அலுவலகம் சென்றால் திடீரென்று அடித்து தள்ளிக்கொண்டு தூக்கம் வரும். அதை போக்க, காபி அருந்துவேன். வாரம் நான்கு நாள். சுமாரான காபி தான். ஆனால் பழகிவிட்டது.

அதே நேரம், திடீரென்று சியாட்டில் கடையாக இருந்த ஸ்டார்பக்ஸ் அமெரிக்கவெங்கும் பரவி புகழ்பெற்றது. பிறகு உலகெங்கும் பரவியது. ஆனால் அவர்களுடைய காப்புசினோ, மோக்கா, லாட்டே, எஸ்ப்ரெஸ்ஸோ எந்த காபியும் எனக்கு பிடிக்கவில்லை. பெரும்பாலான இந்தியர்களுக்கு, குறிப்பாக தமிழர்களுக்கு ஃபில்டர் காபி தான் மதச்சார்பற்ற ஆறெழுத்து மந்திரம்.

சுந்தர ஃபில்டர் காபி காண்டம்

அடுத்த வருடம் என் காபி பிரியன் தம்பி ஜெயராமன் டெக்ஸாஸுக்கு படிக்க வந்தான். அதற்கு முன் ஒரு மாசம் என்னுடன் சியாட்டில் வாசம். ஊர் சுற்றி பார்க்க தான். அவன் நல்ல காபி போட்டு அந்த பழக்கத்தை வளர்த்துவிட்டான். நான் மீண்டும் இந்தியா வந்த பின், கூடை பந்தும், கார் பயணங்களும் மறைந்துவிட்டன, ஆனால் காபி பழக்கம் தங்கிவிட்டது.

சமீபத்தில் அமெரிக்கா சென்ற போது, கலிஃபொர்ணியாவில் காபி மட்டுமே பெரிய குறை. ஜெயராம், டிஸ்னிலாண்ட், ஸீ வர்ல்ட், யூனிவர்சல் ஸ்டூடியோ, விமான் நிலயத்து ஸ்டார்பக்ஸ் கடைகளில் வாளி அளவு காபி வாங்கி, தசரதர் பாயசம் பிரித்தது போல் பிரித்து அனைவருக்கும் கொடுத்து வந்தான். எனக்கோ, அமெரிக்கா, ஃபில்டர் காபியில்லா சபரி மலையாக தோற்றமளித்தது.

சான் ஃபிரான்ஸிஸ்கோவில், சித்தி மகன் விவேக் வீட்டில் தங்கினோம். அவனும் அவன் மனைவி டாமியும் காலையில் தொண்டைகளை தலா ஒரு வாளி கருப்பு காபியில் குளிக்கவைத்துவிட்டே சிற்றுண்டியில்லா சித்தர்களாய் வாழ்ந்து வருகின்றனர். இப்படி இரண்டு நாட்கள் இரண்டு யுகங்களாய் ஓடின; நகர்ந்தன.

மூன்றாம் நாள் மட்டும் என்ன நடக்கும் என்று மட்டும் தெரிந்திருந்தால், நானும் சாண்டில்யன் நாவல் சத்திரியர்களை போல நம்பியிருக்கவே மாட்டேன். யவன ராணிகளும், கடல்புறாக்களும், சீன மாலுமிகளும், வெண்புரவிகளும், பாய்மர கலங்களும், ஜலக்கிரீடைகளும்… அதாவது கன்னிமாடத்தை தவிற எல்லாம் உள்ள சான் ஃபிரான்ஸிஸ்கோவில்….மாலை வேளையில்… இதை எல்லாவற்றையும் விட அதிசயமான…. சைவ உணவுகளை மட்டுமே பரிமாறும் சீன ஹோட்டல். லவிங் ஹட் (அன்பான் குடிசை) அதன் பெயர்.

ஆஹா, சைவ ஃப்ரென்க்சு ஃப்ரைஸ் கிடைக்குமாம், என்ன சந்தோஷம் என்று நான் கேட்க, ஜெயராம் காபி கேட்க, அவர்களும் ஒரு வாளி காபி கொண்டுவர, எனக்கு கைகேயி பகுதி காபி கிடைக்க… தேனோடு கலந்த தெள்ளமுது! கோல நிலவோடு கலந்த குளிர் தென்றல்! ஃபில்டர் காபியை மிஞ்சும் சுவை!



சாய் மில்க் காபியுடன், என் தம்பி ஜெயராமன்


டவுன் பஸ்ஸிலிருந்து ஹீரோ இறங்கினாலும் மிரண்டு மிரண்டு மயங்குவாளே பஞ்சாபி தேன்மொழி பேசும் தமிழ்ப்பட ஹீரோயின், அதை போல் அண்ணலும் மிரண்டேன்; அம்பியும் ருசித்து ரசித்தான். “உங்கள் அஜந்தா ரகசியம் என்ன?” என்று ஆயன சிற்பி போல நாங்கள் வினவ, “சாய் மில்க்” என்றாள் சீன மங்கை. சாய் பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். ஸாய் மில்க்! என்ன டிகாஷண், என்ன பொடி என்றெல்லாம் வீணாக நாங்கள் ஆராய்ச்சி செய்யவில்லை. யாம் பெற்ற காபி, பெறுக இவ்வையகம் என்ற நல்லெண்ணதில் இதை பகிற்கிறேன். அமெரிக்காவின் நான் ருசித்த தலை சிறந்த காபி, லவிங் ஹட் கடையில்தான்.

சைவ உணவை பரப்பும் கொள்கையுடன், சில சைவ பிரபலங்களின் படங்களை - பெஞ்சமின் ஃப்ராங்க்ளின், ஆல்பெர்ட் ஐன்ஸ்டைன் - லவிங் ஹட் நிர்வாகம், தங்கள் கடை சுவர்களில் பதித்துள்ளது. பார்த்த இடங்களெல்லாம் ஃப்ராங்க்ளின்…



லவிங் ஹட் கடையின் சின்னம்


உலக சைவ உணவு பிரியர்கள் - Loving Hut wall

இதை ஒத்த பதிவுகள்

1. சுவைத்ததும் ரசித்ததும்
2. எழில் மல்கும் அமெரிக்கா (ஆங்கிலத்தில் )
3. SQL Server ஸீக்வெல் செர்வர் நாட்கள் - எண்ணெழுத்தும் கையெழுத்தும்
4. பண்டைக்கால பாண்டுரங்கன் கல்வெட்டு 
5. முயல் கர்ஜனை 
6திருவேப்பம்பாவை




Thursday, 21 May 2015

உழவர் தற்கொலை

சுவாமிநாத ஐயர் டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையில் பொருளியல் கட்டுரைகளை எழுதிவருபவர். இடதுசாரி எண்ணங்கள் பரவலாயுள்ள இந்திய நாளிதழ் சூழலில் தெளிவாக வலதுசாரி சிந்தனைகளை முன்வைப்பவர். பல வருடங்களாக இவரை படித்து வருகிறேன். பொருளியல் பார்வையில் சமூகத்தை அலசி, புதிதாக பல தகவல்களை சொல்வார். இந்தியாவில் இது செவிடன் காதில் சங்கு ஊதும் பிழைப்பு. இந்த கட்டுரை பிடித்ததாலும், உழவர் தற்கொலைகளை பற்றி புலம்பல்களே அதிகம் இருப்பதாலும், நான் இதை தமிழில் மொழிபெயர்த்து இங்கு பகிர்கிறேன். இதன் ஆங்கில மூலம் இங்கே

Monday, 18 May 2015

பாஸ்தா செய்யும் முறை

The English version of this post / recipe is here.

அமெரிக்காவில் வாழ்ந்த நாட்களில் பல நாட்டு உணவுகளை சுவைப்பது எனக்கு [பலருக்கும்] மிகச்சிறந்த அனுபவம். நான் சைவ [வெஜிடேரியன்] உணவுகளை தான் சாப்பிடுவேன். அதில் மெக்சிகோ, இத்தலி, தாய்லாண்ட் (சியாமதேசம்), சீனா, எத்தியோப்பியா, ஈராக், ஆப்கானிஸ்தான், லெபானன் நாட்டு உணவுகளை சுவைத்துள்ளேன். 

பீட்சா, பாஸ்தா இவை இரண்டிற்கும் இத்தலியே பூர்வீகம். வெவ்வேறு மாவு வகைகளில் பாஸ்தா செய்யப்படுகிறது. போன வாரம் இந்திராம்மாவும் என் தங்கை தேவசேனாவும் சேர்ந்து இரு வாகை பாஸ்தா சமைத்தனர். சென்னையில் ஹோட்டல்களில் கிடைக்கும் பாஸ்தாவைவிட இவர்கள் செய்யும் பாஸ்தா மிகவும் சுவையாக உள்ளது. கொஞ்சம் காரமும் புளிப்பும் உப்பும் கலந்தே உணவுகொள்ளும் தமிழருக்கும் மற்றநாட்டு உணவுகள் சப்பென்றே இருக்கும், குறிப்பாக, மெக்சிக உணவைத்தவிற, மேற்கத்திய உணவுக்கள் உப்பு காரமில்லதவை. இத்தலிய உணவுகளும் சப்பென்றே இருக்கும். முதலில் இவற்றை சுவைத்து முகம்சுளித்தேன், ஆனால், சில முறை உண்டபின், தக்காளியின் சுவை, கொடமிளகாய் சுவை, கேரட் சுவை என்று காய்கறிகளின் இயற்கை சுவையை உணர்ந்தபின், அவற்றையும் ரசிக்க தொடங்கினேன்.

சீஸ் சுவை விரும்பி பீட்சா சாப்பிட்டு பிடித்துப்போவதே, இந்திய சைவர்களுக்கு மேநாட்டு உணவின் முதல் அறிமுகம். ஹிந்தி மொழியில் வெஜிடேரியன் உணவை வைணவ போஜனம் என்று அழைப்பதாக சமீபத்தில்ல் தெரிந்துகொண்டேன். வெங்காயம் பூண்டு இல்லாவிட்டால் ஜைன உணவு என்று பல ஹோட்டல்கள் அழைப்பதையும் பார்க்கலாம்.

பச்சை சிவப்பு மஞ்சள் கொடமிளகாய்
இந்த பீடிகை போதும். என் வீட்டில் பாஸ்தா செய்யும் முறை கீழே.

1.    ஆலிவ் எண்ணையிலோ, வெண்ணையிலோ, கொடமிளகாய் [அல்லது குடைமிளகாய்] வதக்கவும். காட்சி அழகிற்கு பச்சை சிவப்பு மஞ்சள் என் பலவண்ணங்களில் குடைமிளகாய் சேர்த்துக்கொள்ளலாம்.
2.    தனியாக வெங்காயத்தை ஆலிவ் எண்ணையிலோ, வெண்ணையிலோ வதக்கி வைத்துக்கொள்ளவும்.
3.    தனியாக ஆலிவ் எண்ணையிலோ, வெண்ணையிலோ சீஸ் வதக்கி வைத்துக்கொள்ளவும். சுவைக்கு உப்பும் மசாலாவும் சிறிதே மிளகாய் தூளும் சேர்க்கலாம்.
4.    பாலை கொதிக்கவைத்து சோளமாவு கலந்து வெள்ளை சாஸ் செய்யவும். 400 மில்லி பாலில் நான்கு கரண்டி மாவு கலக்கலாம். சோள மாவு பொட்டலங்கள் கடைகளில் கிடைக்கும்
5.    பாஸ்தா எவ்வளவு எடையோ அதே எடைக்கு தக்காளிகளை மிக்ஸியில் அரைத்து கூழாக்கவும். இதில் பாலும் சோள மாவும் கலந்து கொதிக்கவைத்து, சிவப்பு சாஸ் செய்யவும்.
6.    பாஸ்தாவை நீரில் கொதிக்கவைத்து, நீரைவடித்துவிடவும்

கடாயில் 1,2,3,4,5 கலந்து லேசாக வதக்கினால் வெள்ளை சாஸ் பாஸ்தா. 1,2,3,4,6 கலந்து லேசாக வதக்கினால் சிவப்பு சாஸ் பாஸ்தா. நூல் நூலாக சீஸ் சீவியும், பச்சையாகவோ காய்ந்த இலையாகவோ ஓரிகானோ சேர்த்து, விருந்தளிக்கலாம்.

இத்தாலியர்கள் ஆலிவ் எண்ணையும் வேறு சாஸ்களையும் செய்வார்கள். மற்ற மேற்கத்திய நாடுகளில் கடையிலேயே சாஸ் வாங்கிகொள்வதும் வழக்கம். இந்தியாவிலும் கடையில் பல வகை சாஸ் கடைகளில் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணையோ சாஸோ கடையில் மலிவு அல்ல. ஆலிவ் எண்ணை இந்திய எண்ணைகளை விட கொஞ்சம் கசக்கும். நல்லெண்ணை கடலையெண்ணை தேங்காயெண்ணை பாஸ்தாவிற்கு தகா. இதனால் இந்திராம்மாவும் என் தங்கையும் எண்ணைக்கு மாறாக வெண்ணையில் வதக்குகின்றனர்.

கடாய்களில் சிவப்பு வெள்ளை பாஸ்தாவுடன் நானும் என் மறுமக்களும்

சமையல் கட்டுரைகள்

1. பழைய சாதத்தில் தோசை - சத்யோன்னரோட்டா, பெருகு தோசை


Friday, 4 April 2014

சுரக்காய் தோசையும் பில்லகுடுமுலுவும்


என் வீட்டில் சமையல் செய்பவர் இந்திராம்மா. இவர்கள் திடீர் திடீர் என்று புதிதாக அற்புதமாக எதாவது செய்து நாசிலிர்க்க வைப்பார். முன்பே இவர் செய்த வாழைத்தண்டு தோசை பற்றி எழுதியுள்ளேன்.

ஏப்ரல் ஒன்றாம் தேதி, மகேந்திர பல்லவன் கோவில்களை பார்த்து விட்ட கலைபோதையுடன் மாடியிலிருந்து கீழே வந்தேன். என்ன டிஃபன் என்றால், “சுரக்காய் தோசை!” என்று திமுகவோடு கூட்டணி வைத்த ராஜாஜி போல் நாக்கூசாமல் பதிலளித்தார்.

சுரக்காய் மாவும் இந்திராம்மாவும்
சுரக்காய் தோசை


பில்ல குடுமுலு என்று பிழையின்றி முதல் முயற்சியிலேயே சொன்னால் உங்களுக்கு பில்ல குடுமுலு விருந்தளிக்க நான் தயார். ஆரிய வைசிய கோமுட்டி செட்டியார்களில் இது பிரபலம் போலும் - இந்திராம்மா அந்த ஜாதி. ஒன்றுமில்லை கொஞ்சம் மாறுதலான இட்லிதான். “ஒரு பொழுது இருக்கும் நாட்களில் நாங்கள் இதை தான் செய்வோம்,” என்று சொன்னார்.  “தொட்டுக்க என்ன சாம்பார்?” என்றேன்.  “பருப்பு பாயசம்” என்று பதில் வந்தது. கிரைமியாவை இணைத்த ரஷியாவை கண்டித்து, உத்தமத்தின் உச்சக்கட்ட அமெரிக்காவின் போர் அமைச்சர் ஜான் கெர்ரி, 21ஆம் நூற்றாண்டில் இப்படி மற்றொரு நாடு மேல் படை எடுக்கலாமா என்று கேட்க சுரணையில்லாத பத்திரிகையாளர்கள் கூட கொஞ்சம் ஆடிப்போகவில்லை? அப்படி ஆடினேன். குடுமுலுவும் பாயசமும் சாவித்திரி பாட ஜெமினி கணேசன் நாகஸ்வரம் வாசித்ததுப்போல் தேனோடு கலந்த தெள்ளமுதாய் ருசித்தது. கோல நிலவோடு கலந்த குளிர்த்தென்றல் என் சிந்தை சிம்மாசனத்தில் வீசியது.

பில்ல குடுமுலுவும் பருப்பு பாயாசமும்

Monday, 23 December 2013

மார்கழி இசை அனுபவம்

வாழை இலை பாய் விரித்து கச்சேரி ஆரம்பம். அமர்ந்து கோரி வர்ணமாக லட்டும், வடை போன்று ஏதோ வடக்கிந்திய பக்ஷணமும் – வட? வடாம் இல்லை. அனுபல்லவிக்கு, மரவள்ளிக்கிழங்கு வருவல் மொரு மொரு என்று.

வடக்கு வந்துவிட்டால் மேற்கும் பின் தொடராதோ? பீன்ஸ் பருப்புசுலி, அதில் சிட்டஸ்வரமாக பட்டாணி. நாவிலே இந்நேரத்தில் எல்லோருக்கும் ஸ்ருதி சேர்ந்து விட்டது.

அன்ன ஆலாபனை ஆரம்பம். பக்க ஆலாபனைக்கு பருப்பும் நெய்யும். குரலால் சொல்லும் ஸ்வரமும் ராகமும் பிசைவது போல் விரலால் இவற்றை பிசைந்து ருசித்தேன். ரசித்தேன். தயிர் பச்சடி சர்வ லகுவாக பருப்பு சாதம் முதல் ரசஞ்சாதம் வரை லயித்தது.
புளியோதரை சோலோ.

சாம்பார் பல்லவி, அப்பளம் அனுபல்லவி. நிரவலாக பருப்புசுலி. பாவைக்காய் பிட்லை ஸ்ருதிபேதம். சமையல்க்காரரின் கல்பனா ஸ்வரத்திற்கு அங்கங்கே பரிமாரியவர்கள் மாறி மாறி சாதித்து லயம் சேர்த்தனர்.

இந்த விஸ்தாரத்திர்க்கு அடுத்து, சுருக்கென்று ஒரு வாழைப்பூ காரக்குழம்பு. சாம்பாருக்கு சமானமாக. காரைக்குடி பாணி.

அமுதுண்டால் சாற்றும் அமுதின்றி ஆகுமோ? ஆசை முகம் மறந்து போகுமோ?

எப்போ வருவாரோ என்று கேட்கவைக்காமல், கிண்ணத்தில் கண்ணனமுது.

தனி ஆவர்த்தன தயிரும் தீர்மான மோர்மிளகாயும். மங்களமாய் மினரல் வாட்டர்.

இந்த அற்புத கச்சேரி : மியூசிக் அகடமியில் நேற்று, ஞாயிறு டிசம்பர் 22. மார்கழி அனுபவத்தை உங்களுடன் பகிர்வதில் இன்பம். அந்தரிக்கு வந்தனம்.



மறக்கும் முன் – யாரோ உள்ளே பாடிக்கொண்டிருந்தார். ஒலிப்பெருக்கியில் கேட்டது.

Friday, 15 November 2013

டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி


கிமு 1900 இல் உலக ஜனத்தொகை 200 கோடியை எட்டியது. அங்கும் இங்கும் அவ்வபொழுது பஞ்சம் நிலவியது. காளையும் குதிரையும் ஏரில் பூட்டியே விவசாயமே யதார்த்தம். இதற்கு ஜப்பான் நாடு விதிவிலக்கு – 1940கள் வரை, அன்னாட்டில் மனிதர்களே ஏர் இழுத்து உழுதனர். ஏனெனில், ஜப்பானின் ஜனத்தொகை அதிகம் நஞ்சை நிலம் குறைவு. மாட்டுக்கும் தீனி போடும் அளவு நெல் வளர்க்க நிலம் போதவில்லை.

1880க்களில் ஜர்மனியில் ருடால்ஃப் டீஸல், நிக்கலோஸ் ஆட்டோ, கார்ள் பென்ஸ் ஆகியோர் டீஸல் பெட்ரோல் எஞ்ஜின்களை உருவாக்கினர். டீஸல் இஞ்ஜின் பொருத்தி டிராக்டர், ஹார்வஸ்டர், புல்டோஸர் போன்ற விவசாய துறைக்கு ஏற்ற வண்டிகள் வந்தன. காளைகளும் குதிரைகளும் ஏரிழுக்கும் காலம் தேய்ந்தது. போக்குவரத்து வண்டிகளான மாட்டுவண்டியும் குதிரைவண்டியும் வேகமாக மறைந்து கார்களும் பஸ்களும் லாரிகளும் பறவின. பொது போக்குவரத்தில் கரிப்புகை ரயில்வண்டியை விட இவையே பெரும் புரட்சி செய்தன.

நாம் அரிசியும் கோதுமையும் சோளமும் கம்பும் காய்கறிகளும் மனிதருக்கு வளர்க்கும் உணவாகவும், வைக்கோலும் புல்லுமே கால்நடை விலங்குகளின் உணவாக நினைக்கிறோம். ஆனால் கால்நடைகளுக்கு புல் வளர்க்க எத்தனை நிலம் வேண்டியிருக்கும்? அன்றைய ஜனத்தொகையான 200 கோடியில் எத்தனை நபருக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் இருந்தன? 700 கோடி மக்களுக்கு மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் தேவை பட்டால் அந்த மாடுகளுக்கும் குதிரைகளுக்கும் எத்தனை புல்லும் நெல்லும் வேண்டும்? அதற்கு எவ்வளவு நிலம் வேண்டும்? டீசல் பெட்ரோல் இஞ்ஜின் வாகனங்கள் வந்த பின் கோடிக்கணக்கான மாடுகளும் குதிரைகளும் தேவையற்று போயின. அவற்றிர்கு உணவு வளர்க்க தேவையான நிலமும் குறைந்தது. விளைநிலங்களின் வளர்ந்த உணவுகளில் மூன்றில் இரண்டு பகுதி கால்நடைகளுக்கு வேண்டியிருந்தன, என்கிறார் மாட் ரிட்லி, ’The Rational Optimist’ புத்தகத்தில். [கேள்வி: ’The Rational Optimist’ என்பதை தமிழில் எப்படி மொழிப்பெயர்க்கலாம்?]

டிராக்டரும் லாரியும் ஹார்வஸ்டரும் உழவை நேரடியாக மாற்றின. அதாவது கால்நடைகளால் உழ இயலும் நில அளவை பெருக்கின; உழும் வேகத்தை அதிகரித்தன; அவற்றிர்க்கு செலவாகும் உணவு வளர்க்கும் நிலதின் அளவை மிகவும் குறைத்தன. இது உணவு தயாரிக்கும் முறையில் நடந்த பெரும் புரட்சி.

ஆனால் பஞ்சமும் பசியும் தீர படைக்கும் திறன் மட்டுமே போதாது. பஞ்சம் நிலவும் ஊர்களுக்கும் மாவட்டங்களுக்கும் மாநிலங்களுக்கும் நாடுகளுக்கும் பயிர் மிகுதி உள்ள இடங்களிலுருந்து பெரும் அளவில் கொண்டு வர வேண்டும். காரும் பஸ்ஸும் லாரியும் வந்ததால் உலகெங்கும் தார் சாலைகள் போடப்பட்டன. மாத கால பயணம் சில நாளளவிலும் நாளளவு பயணம் சில மணிநேரங்களிலும் குறைந்தது டீஸல் எஞ்ஜின்களால் தான். இருபதாம் நூற்றாண்டில் பஞ்சத்தை ஒழிக்க டீஸல் எஞ்ஜின் இன்றி அரசுகளுக்கு திறன் இருக்காது.
நல்லெண்ணமோ அறியாமையோ, கார்களின் புகையிலும் நிலக்கரி மின்சார நிலையங்களாலும் சுற்றுச்சூழல் அழிந்தது ஐயோ ஐயோ என்று புலம்பும் ஆர்வலர்களும், ஓலத்தை பெரிதாக்கும் ஊடகங்களும் ஓயாத ஒப்பாரி பாடும் போது, இவை சொகுசுகள் மட்டுமல்ல, இவையின்றி பஞ்சமும் வருமையும் உலகில் கோலோச்சும் என்று நாம் உணர வேண்டும்.

ஹாபர்பாஷ் ரசாயன முறையும், நார்மன் போர்லாக்கின் பசுமை புரட்சியும் உழவு தொழிலை நேராக மாற்றின. ருடால்ஃப் டீசலும் நிக்கலாஸ் ஆட்டோவும் கார்ள் பென்ஸும், போக்குவரத்தை மட்டுமல்ல உழவையும் பிரம்மாண்டமாக மாற்றி புரட்சி செய்தனர். இதுவே நவீன உலகின் முதல் பசுமை புரட்சி என்றும் சொல்லலாம். பெரும் கல்லணைகளாலும் நீர் குழாய்களாலும் விவசாயம் பெருகியதை நான் மறக்கவில்லை. அவற்றின் பாதிப்பின் அளவு தெரியாததால், குறிக்காமல் விடுகிறேன்.



மாட் ரிட்லியின் புத்தகமும், இணையத்தில் அவரது உரைகளும், வச்லாவ் ஸ்மில், ஹுவான் எனிர்கே ஆகியோரின் உரைகளும் படித்தும் பார்த்தும் இக்கட்டுரை எழுதினேன். ஆங்கிலத்தில் இந்த கட்டுரை இங்கே.

Thursday, 12 September 2013

வரப்புயர்த்திய வல்லவன்

செப்டம்பர் 11, நியூ யார்க் நகர உலக வர்த்தக மைய கட்டிடங்கள் விமானங்களால் இடிந்து விழுந்ததற்காக உலகத்தாலும், சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளாக தமிழராலும், பூமிதான திட்டம் வகுத்து நடத்திய வினோபா பாவேவின் பிறந்த நாளா சிலராலும், விவேகாநந்தரின் சிகாகோ உரைக்காக சிலராலும் அனுசரிக்கப்படும்.

செப்டம்பர் 12, நார்மன் போர்லாக் என்ற விவசாய ஆய்வாளரின் நினைவு நாள். இவர் இறந்தது 2009 ஆம் ஆண்டு. இன்று இரவு (செப்டம்பர்) சென்னை தியாகராய நகரிலுள்ள தக்கர் பாபா பள்ளியில் வி.எஸ்.ஸ்ரீநிவாச சாஸ்த்திரியை பற்றி திரு.விப்ரநாராயணனின் உரைக்குப் பின், ரசாயன ஆசிரியர் மோகன், வினோபாவை பற்றி சிறு உரையாற்றினார். நாளை போர்லாக் நினைவு நாள் என்றேன். யார் அவர் என்றார். உலகில் பாமரர் மட்டுமன்றி அறிஞர் பலரும் சான்றோர் பலரும் போர்லாகை பெயர்கூட அறியார் என்று நம்பலாம்.

இளம் வயதில் போர்லாக்
யார் இந்த போர்லாக்? காந்தி மாவோ டெங் ஹிட்லர் சர்ச்சில் அடாடர்க் ஸ்டாலின் கோர்பாசெவ் அடேனார் ரூசவெல்ட் ரீகன் தாச்சர் போன்ற அரசியல் தலைவர்களை மிஞ்சி, ஐன்ஸ்டைன் ருதர்போர்ட் வாட்சன் பார்டீன் வான்நியூமன் ஃபார்ண்ஸ்வர்த் மார்ட்டின்கூப்பர் ஜாப்ஸ் ஸுகர்பர்க் பில்கேட்ஸ் போன்ற விஞ்ஞான தொழில்நுட்ப மேதைகளை மிஞ்சி, கீன்ஸ் ஹாயக் ஃப்ரீட்மன் ஆகிய பொருளியல் வல்லுனர்களை மிஞ்சி, இருபதாம் நூற்றாண்டு மாமனிதராய், அருட்பெருஞ்சுடராய், சான்றோராய், உலகெலாம் ஓதற்கறியவராய், நான் நினைப்பவர் நார்மன் போர்லாக். நான் மட்டும் அல்ல…

“வரப்புயர” என்ற ஔவையின் காலம் கடந்த கவிதைக்கு தக்கதோர் தலைவன் இவனே.

பசுமை புரட்சியின் தந்தை.
நார்மன் போர்லாக்

“ஜனத்தொகை பேரபாயம்” என கற்றோரை கதிகலக்கும் ஒரு பூச்சாண்டி, இன்றும் உண்டு. உலக வெப்பமயமாக்கல் பூச்சாண்டியும், பொருளாதார சீரழிவு பூச்சாண்டியும், சில வருடங்களாக பெரிதாய் ஊதப்பட்டு, ஜனத்தொகை பூச்சாண்டி கொஞம் சோணியாகிவிட்டான். 1960களில் பஞ்சத்தால் இந்தியாவும் சீனாவும் பெரும் இன அழிவு காணும், மக்கள் கோடி கணக்கில் செத்து மடிவர், என்றெல்லாம், உலகமே மிரண்டு, அமெரிக்காவிலிருந்து இந்திரா காந்தி கையேந்தி கெஞ்ச கப்பல் கப்பலாய் கோதுமை மூட்டை வந்திறங்கி, ஒரு பெரும் பஞ்சம் தவிர்க்கப்பட்டது. என் தலைமுறை பிறந்தது; வாழ்கிறது. அன்று இருபது கோடிக்கு சோறில்லை என்று பெரும் பீதி. இன்று நூற்றி இருபது கோடி இந்தியருக்கும் நூற்றி நாற்பது கோடி சீனருக்கும் எந்த பஞ்ச பயமும் இல்லை.

எப்படி?

கோதுமை செடிகளுக்கு ரஸ்ட் என்று ஒரு வியாதி வரும். இரும்புக்கு வரும் துரு அல்ல; இது ஒரு வகை காளான். அதை அகற்ற ஆய்வு செய்தார் போர்லாக். ரஸ்ட் கிருமிகள் காற்றில் பரவின. ஜெட் விமானங்கள் அப்பொழுது இல்லை. ஆனால் உலகெங்கும் வீசும் அதிவேக ஜெட் காற்றில் ரஸ்ட் கிருமிகள் பரவுவதை அவர் ஆய்வு காட்டியது. அருவடை காலத்தில் இக்காற்றில் ஏறி ரஸ்ட் கிருமி உலகெங்கும் பரவி பெரும் பஞ்சம் செய்தது. பூச்சிகொல்லிகளால் மட்டும் இதை அழிக்கமுடியாது. வெவ்வேறு காலத்தில் அருவடைக்கு தயாராகும் கோதுமையை செயற்கையாக உருவாக்கி அருவடை கால இழப்பை பெரிதும் குறைத்தது போர்லாகின் முதல் வெற்றி. “இயற்கை விவசாயம், அந்த்கோ” என்மனார் ஊடகப்புலவர். “விவசாயம் என்பதே முழுக்க முழுக்க செயற்கை” என்று எதிர்த்துப் பேச ஒரு நக்கீரனையும் காணோம்.

ஆள் உயரம் வளர்ந்த நெல் கதிர்களில் ஒரு கையளவு நெல் இருக்கும். அதில் பாதி உயரம் வளரும் நெல்லில் இரண்டு கையளவு நெல் இருக்கும். ஒரே நிலத்தில் இருமடங்கு நெல் வளர்ந்தால் இரு மடங்கு மக்கள் உண்ணலாம். இது தான் போர்லாக் செய்த பசுமை புரட்சியின் அடிப்படை கணக்கு. இதற்கேற்ற குள்ள கோதுமையை செய்தது போர்லாகின் இரண்டாம் வெற்றி. ஆனால் மெக்ஸிகோவில் விஞ்ஞானத்திற்கு எட்டிய வெற்றி வயலுக்கு எட்டவில்லை. அங்குள்ள பல விவசாயிகளுக்கும் அரசிற்கும் போர்லாகின் விஞ்ஞானத்தின் மீது சந்தேகங்கள் பெரிதும் இருந்தன. (மரபணு பூச்சாண்டி காட்டி நகரத்தில் வாழும் நடுத்தர மக்களை மிரட்டுவது ஊடக மேதைகளுக்கு நல்ல பொழுதுபோக்கு. விஞ்ஞானம் கிலோ என்ன விலை என கேட்கும் கலையுலக ஜாம்பவான்களும் சமூக முன்னேற்ற வண்டு முருகர்களுக்கும் இது ஒவ்வா நன்மை.)

இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் பஞ்சம் ஏற்படும் சூழ்நிலை இருந்ததால் இங்கே தன் கோதுமையை பரிசோதித்தார். முதலில் மெக்ஸிகோவைப் போல இங்கும் பல தடைகளும் சவால்களும் இருந்தன. நெல்லுக்கு பிச்சை எடுக்கும் நிலையிலும் இரு நாட்டிற்கும் இடையே போர் மூளும் நிலையும் வந்ததாலும், சி சுப்ரமணியன் என்ற அமைச்சரின் ஆதரவாலும், இரு நாட்டின் பஞ்சாப் மாநில விவசாயிளின் வரவேற்பினாலும், அணைகள் கட்டியதால் தண்ணீர் வசதிகள் இருந்ததாலும், போதுமான செயற்கை எரு தயாரிக்க முடிந்ததாலும், மெக்ஸிகோவில் விதையா நெல், பருவத்தை மீறி பாரதத்தில் பழுத்தது. சில வருடங்களில் ஐஆர்20, ஐஆர் 8 போன்ற அரிசி வகைகளும் படைக்கப்பட்டு, அதற்கு பின் இந்தியாவும் பாகிஸ்தானும் நெல்மல்கும் நாடாய் மாறின. ஐஆர் என்பது International Rice Research Institute என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் முதலெழுத்துக்கள். எம் எஸ் சுவாமிநாதன் தலைமையில் இந்தியாவில் இந்த ஆய்வுகள் நடந்தன.

1970 இல் நார்மன் போர்லாக் அமைதிக்கு நோபல் பரிசு பெற்றார். சி சுபரமணியன் பாரத் ரத்னா விருது பெற்றார். நார்மன் போர்லாகும் எம் எஸ் சுவாமிநாதனும் பத்ம விபூஷன் பெற்றனர். அவர் பிறந்த நாளான மார்ச் 25 இல் நான் என் முதல் வலைப்பதிவில் ஹாபர்-பாஷ் பற்றி எழுதினேன்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
நெல்லாண்ட வரப்புயர் போர்லாகே, நின் பணி செவ்வி திருகாப்பு.


திருத்தம் 28-3-2015

1. எம் எஸ் சுவாமிநாதன் பாரத் ரத்னா பெற்றதாக தவராக எழுதியிருந்தேன். அவர் பத்ம ஸ்ரீ, பத்ம் பூஷன், பத்ம் விபூஷன் பரிசுகள் பெற்றுள்ளார். 

2. இருபதாம் நூற்றாண்டில் நான்கு பசுமை புரட்சிகள் நடந்திருக்கின்றன என்பது என் கணிப்பு. அந்த வரிசையில் போர்லாகின் பசுமை புரட்சி நான்காம் புரட்சி. இவற்றுள் மூன்றை பற்றி எழுதியுள்ளேன் - சுட்டிகள் கீழே. பாசன புதுமைகளை நான்காவது புரட்சியாக கருதுகிறேன் - பெரும் அணைகட்டுகள், மின்சார பம்புகள், நெடுநீள கால்வாய்கள், சொட்டுநீர் பாசனம் போன்றவை இதனுள் அடங்கும். இதை பற்றி நான் எழுதவில்லை. ஆனால் பக்ரா நங்கல் போன்ற பெரும் அணை திட்டங்களும், அவற்றை ஜவஹர்லால் நேரு பாரதத்தின் புதிய கோவில்கள் என்று புகழ்ந்ததும் நாடறிந்தவை.



மற்ற பசுமை புரட்சிகள்

1. செயற்கை எரு - காற்றை கறந்து எரு படைத்த மேதையர் 
2. டீசல் வண்டிகள் - டீஸல் பென்ஸ் செய்த பசுமை புரட்சி