Saturday 5 September 2015

ஜோதிட ஆசிரிய பரம்பரை

பண்டிதர் நூலாசிரியர் பாரத குடியரசின் இரண்டாம் ஜனாதிபதி டாக்டர் இராதாகிருஷ்ணனின் பிறந்தநாள், கிரகோரிய கேலண்டர் முறைப்படி செப்டம்பர் மாதம் ஐந்தாம் நாள், ஆசிரியர்களின் தினமாக கொண்டாட படுகிறது. மாதா பிதா குரு தெய்வம் என்ற பழைய வாக்கில் ஆசிரியர்களுக்கு தொன்றுதொட்டு மரியாதை செலுத்திவருகிறோம். குரு பரம்பரை என்று சிலர் கொண்டாடுவதும் உண்டு. தமிழகத்தில் சிறப்பாக, நாதமுனிகள் தொடங்கி ஆச்சார்ய வைபவமும், சமண மத ஆசிரியர்களின் வரிசையும், கர்நாடக இசை உலகில் குரு பரம்பரையும் ஓரளவு நினைவில் பேணி வருவது வழக்கம்.

இந்திய ஜோதிட (விண்ணியல், வானியல்) நூல்களையும் அதன் கருத்துக்களையும் உரைத்த கே.வி.சர்மாவின் Facets of Indian Astronomy (“இந்திய விண்ணியலின் சில கோணங்கள்”) நூலை 2010இல் படித்தேன். அதில், கேரளத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த கோவிந்த பட்டதாரிமுதல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜராஜவர்மா வரை, ஒரு தொடர்ந்த குருபரம்பரையை சர்மா வரைந்திருந்தார். இவர்கள் கைரேகை, திருமணப் பொருத்தம் பார்க்கும் சாதாரண ஜோதிடர்கள் அல்ல. அத்துறையில் மிகச்சிறந்த முக்கியமான நூல்களை இயற்றியவர்கள்.

பாஸ்கராச்சாரியார் சித்தாந்த சிரோண்மனி என்ற நூலை பன்னிரண்டாம் நூற்றாண்டில் இயற்றினார். ஏழாம் நூற்றாண்டில் பிரம்மகுப்தர் இயற்றிய பிரம்ம ஸ்பூட சித்தாந்தம் என்ற நூலை தழுவி எழுதப்பட்ட இந்நூல், பாரதம் முழுதும் புகழ்பெற்று, ஜோதிடர்களின் ஆஸ்தான நூலாக நிலவியது. ஆனால் கேரளத்தில் ஐந்தாம் நூற்றாண்டில் ஆரியபடர் எழுதிய ஆரியபடீயமும், அதன் வழிவந்த பரஹிதம் என்ற நூலும் கோலோச்சியது. ஆரியபடீயம், பரஹிதம் முன்மொழிந்த முறைகளின் படி கணிக்கப்பட்ட பாதைகளுக்கும், நேரங்களுக்கும், கண்வழியே காணக்கூடிய கிரகங்களின் அசலான பாதைகளுக்கும் அவை வரும் ராசியின் இடங்களுக்கும் வேறுபாடுகளை கண்டு பரபரமேஷ்வரர் என்பவர் த்ருக்கணிதம் दृग्गणितम् என்ற நூலையும், அதன் ஆதார தத்துவத்தையும் எடுத்து சொன்னவர். அதாவது, கணிதம் சொல்லும் இடத்துக்கும் கிரகத்தின் அசலான இடத்துக்கும் கண்கூட வித்தியாசம் தெரிந்தால், கணக்கிலுள்ள பிழைகளை திருத்த வேண்டுமே தவிர, ஜோதிடர்களின் கணக்கிற்கு ஏற்ப கிரகங்கள் நடந்துகொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்க கூடாது, என்றார். பார்த்துக் (த்ருக்) கணக்கு (கணிதம்) செய்யும் முறையை த்ருக்கணிதம் என்று பெயரிட்டார்.

இவரது சீடர் வழியில் பின் தோன்றிய நீலகண்ட ஸோமய்யாஜியை, புகழ்பெற்ற ஐரோப்பிய விஞ்ஞானி நிக்கலாஸ் காபர்ணிக்கஸுக்கு (Nikolas Copernicus) சமமாக சொல்லலாம். தந்திர சங்க்ரஹம் என்ற நூலை இயற்றிய நீலகண்டர், பூமியே பிரபஞ்சத்தின் மைய கிரகம் என்ற கருத்தில் மாறுபடாவிட்டாலும், புதன் வெள்ளி கிரகங்கள் சூரியனை சுற்றி வருவதாக கருத்து உறைத்தார்.

பின்னர் வந்த ஜேஷ்டதேவர், கணித யுக்தி பாஷா என்ற நூலை இயற்றியவர். இவர் முன்மொழிந்த சில விதிகள், குறிப்பாக infinitesimals, கால்குலஸின் விதைகளுக்கு சமம் என்று சிலர் கருதுகின்றனர். இந்த குரு பரம்பரையை கீழ்வருமாறு கே.வி.சர்மா தன் நூலில் செப்பியுள்ளார்.

                 கோவிந்த பட்டாதிரி (1237-96)
சிஷ்யன்   பரமேஸ்வரனின் (1360-1430)
மகன்        தாமோதரன் (13??)
சிஷ்யன்   நீலகண்ட ஸோமய்யாஜி (1443-1555)
சிஷ்யன்   ஜேஷ்டதேவன் (1500-1600)
சிஷ்யன்   அச்யுத பிஸாரடி (1550-1621)
சிஷ்யன்   த்ரிப்பாணிகர பொடுவால் (15??)
சிஷ்யன்   நாவாயிகுலத்து ஆளாடி (16??)
சிஷ்யன்   புலிமுகத்து பொட்டி (1686-1785)
சிஷ்யன்   ராமன் ஆசான்(17??)
சிஷ்யன்   கிருஷ்ணதாஸன் (1756-1812)
சி  மங்கலரி தக்ஷிணாமூர்த்தி மூஸ்ஸது (17??-18??)
சி  நாலேகாட்டில் பாலராமன் பிள்ளை (18??)
சி  இளவரசன் ராஜராஜவர்மா (1812-1846)

தொடர்புடைய பதிவுகள்


3. ஸ்ரீவைஷ்ணவ ஆச்சாரிய பரம்பரை – அலமேலு பெரியம்மா ஒலிப்பதிவு

2 comments:

  1. Is the K V Sharma library named after this author?

    ReplyDelete
  2. Yes. In fact, the bulk of the collection is from the personal collection of KV Sarma

    ReplyDelete