Friday, 29 April 2022

கோயம்புத்தூர் சபாபதி – சூரரை போற்று

எடிசனையும் ஜேம்ஸ் வாட்டையும் எலான் மஸ்கையும் பலரும் அறிவர். அப்துல் கலாமும் ஜகதீஷ் சந்திர போசும் பலரும் அறிந்தவர்களே. கோயம்புத்தூர் சபாபதி? எனக்கும் புதியவரே. வராகமிகிரன் அறிவியல் மன்றத்தில், வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் தன் உரையில், இட்லிமாவு அறைக்கும் இயந்திரத்தை உருவாக்கியவர் கோயம்புத்தூர் சபாபதி, என்று சொன்னப்போது ஒரு நிமிட உவகை.

சில வருடங்களுக்கு முன்பு, ஹான்ஸ் ரோஸ்லிங்க் என்பவர் தன் உரையில் துணித்தோய்க்கும் இயந்திரத்தை பற்றிப் பேசியிருந்தார். வீட்டுவேலைகளில் அதிகம் உழைத்த பெண்களுக்கு (ஐரோப்பிய அமெரிக்க பெண்களுக்கு) அது எவ்வளவு பெரிய பாக்கியம் என்று விளக்கினார். ஒரு நாளில் ஒரு மணிநேரம் வரை பெண்கள துணிகளை தோய்க்த்து ஒரு காலம். துணித்தோய்க்கும் இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அந்த ஒரு மணிநேர உழைப்பும் அசதியும் அவர்களுக்கு மிஞ்சியது. அந்த ஒரு மணிநேரம் புத்தகமோ நாளிதழோ படிக்கவோ, கலை ரசிக்கவோ, இசை கேட்கவோ, ஓய்வெடுக்கவோ லாபமாகிய நேரம். 

கல்லூரி நாட்களில் நானும் சக மாணவர்களும் சொந்த துணிகளை வாரம் ஒரு முறை தோய்த்தது மறக்கவில்லை. பத்து வயதிலேயே அம்மா துணிதோய்க்க கற்றுக்கொடுத்தார். வீட்டில் வேலைக்காரி நின்றுவிட்டால் நானோ என் தங்கையோ துணி தோய்ப்போம். 1990களில் தான் துணி தோய்க்கும் இயந்திரம் வாங்கினோம். (அதற்குள் நான் கல்லூரி படிப்பிற்கு அமெரிக்கா சென்றுவிட்டேன்). கிட்டத்தட்ட அதே காலத்தில் இட்லி மாவு கிரைண்டரும் வாங்கினோம். நான் அமெரிக்கா செல்லும் போது துணிகளுடன் ஒரு பெட்டியும், என் மாமா குடும்பத்துக்கு ஒரு இட்லி கிரைண்டரும் எடுத்து சென்றேன். வாரயிறுதியில் அங்கே தங்கும் போது பலமுறை அதன் பலன் கிடைத்தது. அமெரிக்காவில் துணிதோய்க்கும் அவஸ்தை இல்லை. லாண்ட்ரோமாட் என்று கடைகளில், சுமார் இருபது முப்பது துணிதோய்க்கும் இயந்திரங்களும், காயவைக்கும் இயந்திரங்களும் உள்ளன. ஒன்றரை டாலருக்கு காசு போட்டால் ஒரு கூடை துணிகளை தோய்த்துவிடலாம்; காயவைத்து விடலாம். அமெரிக்காவில் எந்த வீட்டிலும் குடியிருப்பிலும் கயிறுகட்டி துணிக்காயவைக்கும் வசதி கிடையாது. மழை பனி பிரதேசங்களில் மட்டுமல்ல, எத்தனை வெயில் அடிக்கும் ஊராயினும், மின்சார இயந்திரம் வைத்து ஈரத்துணிகளை காயவைக்கவேண்டும். உலக வெப்பமய பூச்சாண்டி கதையெல்லாம் மற்ற தாழ்வான மக்களுக்கு சொல்லப்படும் போலி உபதேசம். ஏறக்குறைய அனைத்து அமெரிக்க கானடா நகர கிராமங்களிலும் கயிறு கட்டி துணி காயக்கவைக்ககூடாது என்று சட்டமே உண்டு. வீட்டு பால்கணியிலோ, தோட்டத்திலோ துணிகாய போட்டால் வருமையின் சின்னம், சமூக அவமானம் என்று இந்த இயந்திரங்கள் வந்த காலத்தில் சட்டங்கள் இயக்கப்பட்டன. கார்பன் அசுரனிடமிருந்து உலகை காப்பாற்ற அவதரித்த அல் கோர் முதல் உலகை உய்யவைக்க உதித்த கிரெட்டா துன்பர்க் வரை, எலான் மஸ்க் முதல் திருக்குறிப்பு தொண்டர் வரை “யாகாயவைத்தாலும் துணிக்காய வைக்க துணியாதே” என்பது எழுதி வைத்த சட்டம். நிற்க. (ஐரோப்பா, சிங்கப்பூர், சீனாவில் இந்த வகை சட்டங்களில்லை.)

ஆனால் இந்தியர்களை தவிர எவரும் இட்லி அறைப்பதில்லை.

எடிசன் மின்விளக்கை படைத்து, வீடு தோறும் கம்பி நீட்டி, அதாவது மின் கம்பி வழியாக மின்சார வசதி அமைத்துக்கொடுத்த சில ஆண்டுகளிலேயே, துணி தோய்க்கும் இயந்திரம், பழரசம் பிழிய மிக்ஸி (பிளெண்டர் என்பார்கள்) எல்லாம் வந்துவிட்டன. 1900களிலேயே இவை அங்கு விற்பனைக்கு வந்தன. இந்தியாவில் 1970களில் தான் இம்மாதிரி வீட்டில் பயன் படும் இயந்திரங்கள் நடுத்தர மக்களுக்கும் கிடைக்கும் அளவுக்கு மலிவாக புழங்கின. மிக்ஸி முதல் வாஷிங் மெஷின் வரை யாவும் மேற்கத்திய படைப்புகளே. இங்கே நாம் செய்ததெல்லாம் லைசன்ஸ் பெற்று காப்பியடித்தது. பதினேழாம் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே டீ காபி சக்கரை மோகமும் அதனால் ஆசிய நாடுகளை ஆக்கிரமித்து போர்களெல்லாம் நடத்தி ஐரோப்பியருக்கு ஏனோ இட்லிதோசை மேல் மோகம் பிறக்கவில்லை. ஆரியப்படையை நெடுஞ்செழியன் கடந்தபோதும், இமயத்தின் வரம்பை நெடுஞ்சேரல் இரும்பொறை அடைந்தபோதும், அதெல்லாம் வேண்டாம் கங்கை கரை போதும் என்று அளவோடு படையெடுத்த ராஜேந்திர சோழனும் கருணாகர தொண்டைமானும் இட்லி இட்ட சோழன் என்றோ பலதோசை பாரளித்த பல்லவன் என்றோ புகழ் பெறவில்லை. கோனார்க்கை கோயிலையும் எல்லோரா கைலாசநாதர் கோவிலை கட்டிக்கொடுத்து பலபுதிர்களை வைத்து சென்று வேற்றுகிரகவாசிகளுக்கும் இட்லிகிரைண்டர் படைக்க ஏனோ இதயம் இரங்கவில்லை. கப்பல் மோட்டார் பார்த்து சிவி ராமனுக்கும், விமான பிரொப்பல்லர் பார்த்த சந்திரசேகருக்கும், ஆயுதமும் காகிதம் செய்ய அறிவுரை பாட்டெழுதிய முண்டாசுக்கவி பாரதிக்கும், “கடகடா குடுகுடு நடுவிலே மோட்டார்” என்று யோசனை தோன்றவில்லை. தென்னாட்டு எடிசன் ஜிடி நாயுடுவுக்கும் தோன்றவில்லை. நல்லவேளை, அவர் ஊரான கோயம்புத்தூர் சேர்ந்த சபாபதி சற்றே மாறுபட்டவர். இட்லி தோசை மாவு அறைக்க ஒரு மோட்டாரை பொருத்தி கல்லை செதுக்கி கருவி செய்யலாம் என்ற உன்னத எண்ணம் தோன்றி, செயலில் இரங்கும் ஊக்கமும் பிறந்தது.

சபாபதியின் முக்கியமான தகுதி அவர் எட்டாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்திக்கொண்டார் என்பதே. கில்பர்ட் டோரி என்ற ஆங்கிலேயரின் எவரெஸ்ட் இண்டஸ்ட்ரீஸ் என்ற கம்பெனியில் பணிக்கு சேர்ந்தார். அங்கே கிடைத்த பயிற்சியில் டோரியின் ஆதரவும் முக்கியம் என்று அவர் குடும்பத்தார் நம்புவதாக இந்த டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரை கூறுகிறது. 1955ல் முதலில் உருவாக்கி, 1960ல் கல்யாண பரிசாக தன் மனைவி இந்திராணிக்கு முதல் இட்லி கிரைண்டரை அளித்ததாகவும், அந்த அம்மையார் அதை தெரு மக்கள அனைவரும் பயன் படுத்த அனுமதித்தார் என்றும், அதே கட்டுரை மேலும் தெரிவிக்கின்றது.

பெண் விடுதலைக்கு இந்த இயந்திரங்களின் முக்கியத்துவம் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்திலும் பெயர் பெற்றுவிட்டது

லக்ஷ்மி கிரைண்டர்ஸ் என்ற கம்பெனியை தொடங்கிய கிருஷ்ணமூர்த்தி, பின்னர் சாயும் கிரைண்டரை படைத்த துரைசாமி, மேசையில் இயக்கக்கூடிய கிரைண்டரை அறிமுகப்படுத்திய எல்.ஜி.வரதராஜ், என்று கோயம்புத்தூரில் ஒரு கம்பன்  இளங்கோ வள்ளுவர் என்ற வரிசையில் அவதரித்தனர் என்று இந்த கோவைப்போஸ்ட் கட்டுரை தெரிவிக்கிறது. அடுத்த முறை கோவை சென்றால் இவர்களையோ இவர்கள் தொழிற்சாலைகளையோ காணமுயற்சிக்கவேண்டும். நாடறியவேண்டியவர்கள் இவர்கள்.

சவீதா கல்லூரியில் இன்வென்ஷன்ஸ் என்று ஒரு  வகுப்பு நடத்துகிறேன். சபாபதி பற்றி ஒரு வார்த்தை பேசி, அவருக்கு நன்றி சொல்கிறேன்.


விசைஞர் கட்டுரைகள்

Tech advances in a traditional city - Venkatesh Ramakrishnan VSF lecture


Friday, 22 April 2022

ஒளி பெருக வீழ்ந்த மரக்கிளைகள்

நேற்று நான் வசிக்கும் கங்காநகர் தெருக்களில் சென்னை மாநகராட்சியால் சில மரக்கிளைகள் வெட்டப்பட்டன. கோடைக்காலம் தொடங்குகிறது, ஏன் நிழல் தரும்மரங்களை வெட்டுகிறீர்கள், என்று அவர்களை கேட்டப்பொழுது, “உங்கள் காலனியில் வசிப்பவர் ஒருவர் அரசாங்கத்திற்கு மனுகொடுத்துள்ளார். இந்த மரக்கிளைகளால் தெருவிளக்கின் வெளிச்சம் மறைக்கப்படுகிறது. அதனால் மரக்கிளைகளை வெட்ட எங்களுக்கு ஆணை,” என்று விளக்கி, ஒரு மாமரத்தில் சில கிளைகளை வெட்ட, கீழே இருந்த என் காரை நகர்த்தச் சொன்னார்.

தெரு விளக்கு ஒளி கிடைக்க வெட்டப்பட்ட மரக்கிளைகள்





அவர் காட்டிய மாமர கிளைகள் ஒரு விளக்கின் ஓரம் இருந்தாலம், மரத்தின் மறுபக்கம் இருந்த விளக்கில் அந்த இடம் நல்ல வெளிச்சத்திலேயே இருக்கும். இதை சுட்டிக்காட்டிய போது, கவுன்சிலர் இப்போது தான் இதை வெட்ட சொன்னார்கள் என்று சொல்லிவிட்டு, அவர் ஆட்களை மரம் வெட்ட ஆணையிட்டார். மற்ற தொண்டர்கள் என்னை நேராக முகம் சந்திக்கவில்லை. வெட்டியவுடன் அந்த இயந்திரத்தின் மேலே இருந்தவர் லேசாக புன்னகைத்து, அவ்வளவு தான் என்று சொல்லிவிட்டு, இயந்திர வாகனத்தோடு நகர்ந்துவிட்டனர்.


நாற்பது வருடங்களாக எங்கள் வீட்டுக்கு எதிரே இருந்த தெருவிளக்கும் ஒரு வேப்பமர-புங்கைமர ஜோடியின் கிளைகளுக்கிடையே ஒளிவீசும். வார்தா புயலில் பாதி மரம்; 2021 புயலில் மீதி மரம் விழுந்துவிட்டது; மிஞ்சி நின்றது பின்னர் வெட்டி எடுத்து செல்லப்பட்டது.


ஜூலை 2021 வெட்டப்பட்ட மரக்கிளைகள்


2015ல் மரக்கிளை வெட்டும் முன்

சில மாதங்களுக்கு முன் எங்கள் தெருவிலிருந்த இரு மரங்களை இதேபோல் வெட்டினார்கள். அப்பொழுது நான் கேட்ட பொழுது, பழைய சாலையை பெயர்த்து புதிய சாலை போடும் இயந்திரம் நுழைய இந்த மரக்கிளைகள் தடையாக இருப்பதாகவும், அந்த இயந்திரம் நுழைய மரக்கிளைகளை வெட்டவேண்டும் என்றும் கூறினர். சாலைகள் சிறப்பாக போடப்பட்டன; அந்த மரமில்லா இடம் நிழலில்லாமல அகன்று தெரிகிறது.

நாற்பது ஆண்டுகளாக எங்கள் தெருவில் இருளினால் எந்த அசம்பாவிதமும் நடந்த நினைவில்லை.

தொடர்புடைய பதிவுகள்

அனுபவ கட்டுரைகள் - என் சரிதம்


Saturday, 26 March 2022

காரவேலன் கல்வெட்டு

 சமீபத்தில் கடந்த 2022 ஜனவரி மாதம் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை கலிங்கம் பற்றி ஒரு பேச்சு கச்சேரி நடத்தியது. எட்டு தலைப்புகளில், தமிழில் கலிங்க (ஒடிசா மாநில) வரலாறு, கல்வெட்டு, சிற்பம், கோயில் கலை போன்றவை காட்சிகளோடு பேசப்பட்டன. இதில் மௌரிய மன்னன் அசோகன் கல்வெட்டும், மகாமேகவாகன வம்ச மன்னன் காரவேலன் கல்வெட்டும், நான் பேசிய தலைப்புகள்.

மௌரிய அசோகனின் கல்வெட்டை விவரித்து பின்னர் தனி கட்டுரையாக எழுதுவேன்.

இங்கே காரவேலன் கல்வெட்டை பார்போம். அசோகன் கலிங்கத்தின் மேல் போர் தொடுத்தான் என்று நாம் அறிவோம். ஆனால் அவனை எதிர்த்த கலிங்க மன்னனை பற்றியோ வம்சத்தை பற்றியோ எந்த தகவல்களும் இல்லை. கல்வெட்டும் இல்லை. அசோகனின் கலிங்கப்போர் நடந்த சுமார் நூறாண்டுகளுக்கு பின், கலிங்கத்தை ஆண்ட மன்னன் காரவேலன். அவனுடைய கல்வெட்டு ஒன்றே ஒன்று உதயகிரி மலையில் ஹாதிகும்பா (ஹாதி=யானை; கும்பா=குகை) என்னும் குகையின் விதானத்தில் கிடைத்தது. பிராகிருத மொழியில் பிராமி லிபியில் பதினைந்து அடி நீளமும் ஐந்தரை அடி அகலமுமான இக்கல்வெட்டில், பதினேழு வரிகள் இருபது வாக்கியங்களாக அமைந்துள்ளன.

புவநேச்சுரம் நகரின் எல்லையில் உதயகிரி கண்டகிரி என்று இரு மலைகள். கண்டகிரி மலையில் பல சமண குகைகளும், அவற்றுள் தீர்தங்கரர் மற்றும் யக்ஷிகளின் சிற்பங்களும் உள்ளனர். ஒரு சமணகோயிலும் உள்ளது.

உதயகிரி - காரவேலன் கல்வெட்டுள்ள மலை 

காரவேலன் கல்வெட்டு


With THT group and Kharavela inscription

உதயகிரி மலையில் குகைகள் உள்ளன; ஆனால் சமண சிற்பங்கள் ஏதும் இல்லை. ராணிகும்பா என்னும் குகையில் இருக்கும் பல்வேறு சிற்பங்கள் காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் என்னும் நாடகக் காப்பியத்தின் சில காட்சிகளை காட்டுவதாக சில கலை வல்லுனர் கருதுகின்றனர். உதயகிரி கண்டகிரி சிற்பங்கள் குகைகள் பற்றி பத்ரி சேஷாத்ரியின் உரை காணலாம்.

காரவேலன் கல்வெட்டுள்ள மலை மேல் ஒரு சைத்தியத்தின் அதிட்டனாம் மட்டும் மிச்சமுள்ளது. கல்வெட்டின் பதினேழாம் வாக்கியத்தில் விஜயசக்கரத்தில் குமரி மலையில் காரவேலன் அருகர்களுக்கு ஆலயம் எழுப்பினான் என்று குறிப்பால், இந்த மலைக்கு குமாரிமலை என்ற பெயர் இருந்ததாகவும், அவன் எழுப்பிய அருகர் ஆலயத்தின் எச்சமே இந்த சைத்தியம் என்றும் கருதலாம்.

சைத்தியத்தின் அதிட்டனாம் 


இந்த கல்வெட்டை கிபி1825ல் ஸ்டெர்லிங்க் கண்டுபிடித்தான். கர்ன்ல் கிட்டோ என்னும் கிழக்கி இந்திய கம்பெனியின் ராணுவ அதிகாரி பிரதி எடுத்தான். அப்பொழுது இந்த லிபி அடையாளம் தெரியாத புதிராகவே இருந்தது. இந்த லிபியை பல கல்வெட்டுகளை படித்து மீட்டுதந்த ஜேம்ஸ் பிரின்சப், 1837ல் காரவேலன் கல்வெட்டை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தான். 1861 இந்திய தொல்லியல் துறை நிறுவப்பட்டது. துறை தலைவர் கர்னல் அலெக்ஸாண்டர் கன்னிங்காம் 1877ல் இந்த கல்வெட்டை இன்னொரு பிரதி எடுத்தான். 1880ல் அதை ராஜேந்திர லால் மித்ரா ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க, 1888ல் பகவான் லால் இந்திராஜி காரவேல மன்னனின் பெயரை அடையாளம் காட்ட, இதன் சிறப்பு தெரியவந்தது. 1895 முதல் 1942 வரை பியூலர், ஃப்ளீட், ஜெய்ஸ்வால், பானர்ஜி, பாருவா, டி.சி. சர்கார் ஆகியோர் பல சொற்களிலும் பொருளிலும் பாடபேதங்களை பதிவிட்டனர்.

ஏன் இத்தனை பாட பேதங்கள்? காரவேலன் காலத்து பிராகிருதம் எங்கும் வழக்கில் இல்லை. பிராகிருத சொற்களுக்கு சமமான சம்ஸ்கிருத சொற்களை யூகித்து பொருளை புரிந்துகொள்ள ஒவ்வொருவரும் முனைந்தனர். கல்வெட்டில் சில சொற்களும், ஒரு சில சொற்களில் சில எழுத்துக்களும், அழிந்துவிட்டன. இப்பிரிதியின் படத்தில் புள்ளியுள்ள எழுத்துக்கள் அழிந்துபோனதற்கு அடையாளம்.

காரவேலன் கல்வெட்டு இந்திய வரலாற்றில் பெரும் முக்கியம் பெற்றது.

அதுவே ஒரு கலிங்க மன்னனின் மிக தொன்மையான கல்வெட்டு. (இன்று பிகார் என்று அழைக்கும் மகத நாட்டு மன்னன் அசோகன் ). காரவேலன் தோன்றிய மகாமேகவாகன வம்சத்தின் ஒரே கல்வெட்டு. இதில் கிடைக்கும் பல வரலாற்று தகவல்கள் வேறு எந்த கல்வெட்டிலோ நூலிலோ செப்பேட்டிலோ இல்லை.

மேலும், ஒரு மன்னனின் ஆட்சியாண்டுகளை வரிசையில் கூறி ஒவ்வொரு ஆண்டிலும் நிகழ்ந்த முக்கிய போர்களை, அரசபணிகளை, சாதனைகளை, வாழ்க்கை சம்பவங்களை கூறும் அபூர்வ கல்வெட்டு.

அர்த்த சாத்திரத்தில் சானக்கியன் போற்றும் பிரஞாபன லேகன (”பொது அறிவிப்பு”) விதிகளுக்கு காரவேலன் கல்வெட்டு தனிச்சிறப்பான சான்று என்மனார் அறிஞர். சானக்கியன் கூறும் ஆறு குணங்களையும் இதில் காணலாம்.

  • அர்த்தக்கிரமம் (சீரான அமைப்பு )
  • சம்பந்தம் (பொருத்தம்)
  • பரிபூரணதா (முழுமை)
  • மாதுர்யம் (இனிமை)
  • ஔடர்யம் (கம்பீரம்)
  • ஸ்பஷ்டவம் (தெளிவு)

ஆட்சியாண்டை தவிற 103ம் ஆண்டு, 113ம் ஆண்டு, 165ம் ஆண்டு என்று சில குறிப்புகள் உள்ளன. இவை கலியாண்டாகவோ சக ஆண்டாகவோ இருக்க வாய்ப்பில்லை. காரவேலன் சமண மதத்தை  சேர்ந்தவன் என்பதால் மகாவீர யுகத்தையும் அந்த ஆண்டுகணக்கையும் குறிப்பதாக அறிஞர் கருதுகின்றனர். கடைசி ஜைன தீர்த்தங்கராரான வர்தமான மகாவீரர் பரிநிர்வாணம் (மரணம்) அடைந்த ஆண்டு முதல் தொடங்குவது இந்த மகாவீர யுகம். அதற்கு சமமான கிறுத்துவ ஆண்டை கல்வெட்டு மொழிப்பெயர்ப்பாளர்கள் கொடுத்துள்ளனர்.

எனக்கு பிராகிருதமோ சம்ஸ்கிருதமோ தெரியாது. தமிழில் ததிங்கிதோம் தான். நான் தொல்லியல் நிபுணனும் அல்லன். சமணமும் தெரியாது. கடைசி நான்கு வரிகளில் வரும் பல சொற்றொடர்களும் வர்ணனையும் சமண தத்துவம், நூல்கள், வரலாறு ஆழ்ந்து அறிபவர்க்கே சரியாக விளங்கும் என நினைக்கிறேன்.

ஆங்கில மொழிபெயர்ப்பின் அடிப்படையில், எனக்கு புரிந்த அளவில் தமிழாக்கம் செய்துள்ளேன்.

---------

வரி 1 

நமோ அர்ஹந்தானாம் | நமோ சர்வ சித்தானாம்
ஐரேன மகாராஜேன மகாமேகவாகனேன
சேதிராஜவம்ச-வதனேன பசத-சுப-லகனேன சதுரந்த-லூடன-குண-உபேதேன 
கலிங்காதிபதினா-சிரி-காரவேலேன

அருகருக்கு வணக்கம். அனைத்து சித்தருக்கும் வணக்கம்

ஐ மகாமேகவாகனன், மகாராஜன், கலிங்க அதிபதி,  சேதிவம்ச வர்தனன், சுப லக்ஷணம் உடையவன், நாற்திசையும் புகழ் பரவிய குணவான், செம்மேனியன் திரு காரவேலனால்  பதினைந்து வருடம் இளவரசனுக்கு தகுந்த விளையாட்டுகள் விளையாடப் பெற்றன.

வரி 2

பாண்டரச-வசானி சிரி-கடார-சரீர-வதா- கீடிதா
குமார-கீடிகா | ததோ லேக-ரூபா-கணனா-வவஹாரா-
விதி-விசாரதேன சவ-விஜாவதாதேன நவ-வசானி
யோவராஜ(ம்) பசாசிதம் | சம்பூண-சதுவீசதி-வசோ
ததானி வதமான-சேச-யோவனாபிவிஜயோ ததீயே

அதன் பின், எழுத்து(லேக) பணம்(ரூபா) கணக்கு(கணணம்), நிர்வாகம் ஆகிய கலைகளில் வல்லவனால் ஒன்பது வருடம் யுவராஜனாய் ஆளப்பெற்றது.

இருபத்திநான்கு வயது கடந்தபின், தன் இளமை (யோவனா) போர் வெற்றிகளால் செல்வம் பெருக, கலிங்க ராஜவம்சத்து மூன்றாம் (ததியே=த்ருதீய) அரசனாக மகாராஜ அபிசேகம் செய்யப் பெற்றான்.

வரி 3

கலிங்க-ராஜவம்சே-புரிசயுகே மகாராஜாபிசேசனம்
பாபுனாதி | அபிசிதமதோ ச பதமே வசே வாத-
விஹத கோபுர-பாகர-நிவேசனம் படிசங்காரயதி
கலிங்கநகரி-கிபீரம் சீதல-தடாக-பாடியோ ச
பந்தாபயதி சவூயான-படிசந்தபனம் ச

முதல் (பதமே=பிரதமே) வருடம் முப்பதியைந்து (பனதிசாஹி=பஞ்சத்ரிம்ஷதி) நூறாயிரம் (சத-சஹஸ்ர) செலவில், புயலால் முறிந்த (வாத-விஹத) கோபுரம் பிராகாரம் (பாகர) கட்டடம் (நிவேசனம்) சீரமைத்து தடாக கரைகள் சீரெழுப்பி  மக்களை மகிழ்வித்தான்.

வரி 4

காரயதி பனதிசாஹி-சட-சஹசேஹி பகதியோ ச ரஞ்சயதி | 
துதியே ச வசே அசிதயிதா சாதகணிம் பசிம-திசம் ஹய-கஜ-நர-ரத-பஹுலம்-தண்டம் படாபயதி கன்ஹ-பேம்னா-கதாய ச சேனாய 
விதாசதி அசிக-நகரம் | ததியே புனவசே

இரண்டாம் (துதியே=த்விதீயே) வருடம் சாதகர்ணி (மன்னனை) கருதாமல் மேற்கு திசையில் குதிரை(ஹய) யானை(கஜ) நர(கால்நடை வீரர்) தேர்(ரத) பலர் கொண்ட சேனை அனுப்பி கிருஷ்ணவேணா நதி அடைந்து அசிக நகரம் கைபற்றினான்.

வரி 5

கந்தவ-வேத-புதோ தப-நத-கீத-வாதித-சந்தம்சனாஹி உசவ-சமாஜ-காராபனாஹி ச கீடபய்தி நகரிம் | ததா சவுதே வசே
விஜாதராதிவாசம் அஹத-புவ-கலிங்க-புவராஜ
நிவேசிதி-விதத-மகுட-சபிலதிதே ச நிகித-சத

மீண்டும், மூன்றாம் (ததியே=த்ருதீயே) வருடம் (தலை)நகரத்தில் இசைக்கலை அறிந்தவன் (கந்தவ-வேத-புதோ) நாட்டியம்,பாடல்,இசை,கவிதையால் (தப-நத-கீத-வாதித-சந்தம்)
உற்சவம்(விழா) நடத்தி மக்களை மகிழ்வித்தான். 


மீண்டும், நான்காம்(சவுதே=சதுர்தே) வருடம் எந்த கலிங்கராஜனும் நுழையாத வித்யாதரரின் நகரம் நுழைந்து, ரடிக-போஜகரின் செல்வமும் ரத்தினமும் பரித்து, மகுடமும் பட்டத்து குதிரையும் சாய்த்து, குடையும் (சத்ர) தங்கக்குவளையும் (பீங்கார) ஒதுக்கி, காலடி பணிய வைத்தான்.

வரி 6

பீங்காரே ஹித-ரதன-சாபதேயே சவ-ரடிக-போஜகே
பாதே வந்தாபயதி | பஞ்சமே ச தானி வசே
நந்தராஜ-திவசசத-ஓகாடிதம் தனசுலியவாடா-
பணாடிம் நகரம் பவேசயதி ச... | அபிசிதோ ச
.... ராஜசேயம் சந்தசயந்தோ சவ-கர-வண


ஐந்தாம் (பஞ்சமே) வருடம் நந்தராஜனால் அமைக்கப்பட்ட
தனசுலியவாடா கால்வாயை தலைநகருக்கு கொண்டுவந்தான்

வரி 7 

அனுகஹ-அனேகானி சத-சஹசானி விசஜதி போர-ஜானபதம் | 
சதமே ச வசே பசாசதோ வஜிராகரவதி-குசித-கரினி ஸா மதுகு-பத
பும்னோ...த பா... | அடமே ச வசே மஹதா-சேனாய
(அபதி)ஹத-(பி)தி-கோரதகிரிம்


அபிசேகம் செய்த (ஆறாம் வருடம்) செல்வத்தை (ஷ்ரேயம்) நகர-ஜனபத மக்கள் அனுபவிக்க அவர்கள் பல நூறாயிரம் மதிப்புள்ள வரிகளையும் தானங்களையும் வழங்கினான்

ஏழாம் (சதமே) வருடம் (ராணி)) வஜிராகரவதி சேர்த்த புண்ணியத்தால் தாய் எனும் கௌரவம் அடைந்தாள்

வரி 8

காதபயிதா ராஜகஹ-நப(ம்) பீடபயதி | ஏதினம் ச கம்மபதான-பனந்தேன சம்பித-செனவாகனே விபமு(ஞ்)சிது மதுரம் அபயாதோ 
யமனா-(நதீம்)... | பலவபார

எட்டாம் வருடம் பெரும் சேனையுடன் கோரதகிரி (கழுகுமலை?) பற்றி ராஜகிருஹ மன்னனை (நப=ந்ருப) துன்புருத்தினான். இதை தொடர்ந்து சேனையுடன் யமுனை நதி வரை சென்று மதுரா நகரை விடுவித்தான். பழம்சுமந்த (பலவபார) (கல்ப-விருட்சம்) கபுருக சுமந்து நாலவகை படையுடன் தூபத்திற்கு எல்லா கிரஹவாசிகளாலும் பூஜிக்கப்படும் ஸ்தூபத்திற்கு சர்வகரஹண விழா நடத்தி, ப்ராமண ஜாதியருக்கு பரிசு வழங்கி, அருகர்களை (வணங்கினான்). 

வரி 9

கபுருக ஹய-கஜ-ரத-சஹ யந்தே சவ-
கராவாசி-பூஜி | ...டூ | ...யா சவ-கஹனம் ச
காரயிதும் பமணானம் ஜாதிம் பரிஹாரம் ததாதி
அரஹத ச....... சுவிஜய

வரி 10

தே உபய-ப்ராசி-தடே ராஜ-நிவாசம் மகாவிஜய-
பாசாதம் காரயதி அடதிசாய-சத-ஸஹஸேஹி. 

(ஒன்பதாம் வருடம்) வெற்றிக்கு பின் ப்ராசி நதியின் இரு கரையிலும் மகாவிஜய பிராசாதம் எனும் அரண்மனையை (ராஜ-நிவாசம்) முப்பத்தி எட்டாயிரம் செலவழித்து கட்டுவித்தான்.

தசமே ச வசே தந்த-சந்தி-சா(ம)மயோ
பாரதவச-படானம் மஹீ-ஜயனம்...
காராபயஹதி | ......... பாயாதானம் மணிரதனானி-சஹ
யாதி |  (சஹயாதி ??|| உபலபதே??)

பத்தாம் (தசமே) வருடம் பாரதவர்ஷத்தை மஹீஜயனம் (பெரும்வெற்றி) கொள்ள படைகள் பயின்றன. பிதுடம் என்னும் அவ-ராஜ (பர்மா) தேசம் நுழைந்து கழுதைகள் (கதபன) பூட்டிய ஏரால்(கலேன) வயல் உழுது (காசயதி) தன்னாட்டு நலனிற்காக 113ம் ஆண்டு (தேரசவச-சத) உருவாகிய தமிழ்நாடுகளின் சங்கத்தை (தமிர தேச சங்காதம்) பிளந்தான்(பிந்ததி).

வரி 11

*** (மந்தம்) ச அவ-ராஜ-நிவேசிதம் பிதுடம்
கதபனகலேன காசயதி ஜனபத-பாவனம்
ச தேரசவச-சத-கதம் பிந்ததி தமிர-தஹ-
சங்காதம் | பாரசமே ச வசே ...... ச(ஹ)சேஹி
விதாசயதோ உதராபத-ராஜானோ

பன்னிரண்டாம் வருடம் வடதிசை மன்னர்களை அஞ்சவைத்து மகத கங்கை நதிநீரை யானைகளும் குதிரைகளும் பருகவைத்து, மன்னன் பிரஹஸ்பதிமித்ரனை தன் காலடி பணியவைத்து, நந்த ராஜர்களால் கடத்திச் செல்லப்பட்ட ஜீனரின் சிலையை அக்கோயிலில் வணங்கி, அங்க மகத நாட்டு அரண்மனை ரத்தினங்களை கலிங்கத்திற்கு கொண்டுவந்தான்.

வரி 12

*** மாகதானாம் ச விபுலம் பயம் ஜனேதோ ஹதசம்
கங்காய பாயயதி மாகதம் ச ராஜானாம்
பஹ(ஸ)திமிதம் பாதே வந்தாபயதி நந்தராஜ-
நீதம் ச கலிங்கம்-ஜீனம் சந்நீவேசே ***  (கஹ)-
ரத(னா)னி படீஹாரேஹி அங்க-மகத-வசும் ச நேயதி |

வரி 13

*** கேதும் ஜடர-லகில-(கோ)புரானி-சிகரானி
நிவேசயதி சத-விசிகானாம் பரிஹாரேஹி |
அபுதமசரியம் ச ஹதி-நவ-நீதம் பரிஹரதி
***  ஹய-ஹதி-ரதன-மானிகோ பாண்ட-ராஜ (சேதானி
அனேகானி) முத-மனி-ரதனானி ஆஹராபயதி இத சத-ச...

கலிங்கம் வந்து கோபுரங்களின் சிகரங்களில் கொடிகளை பறக்கவைத்தான். யானைகளும் படகுகளும் கொண்ட அற்புதமான ஆச்சரியமான படைசெலுத்தி பாண்டியமன்னனின் (பாண்டராஜ) பலநூறாயிரம் முத்துமணி-ரத்தினங்களுக்கு விலைபோகும் குதிரை யானை மணிகள் ரத்தினங்களை எடுத்துவந்தான்.

வரி 14

*** சினோ வசீகரோதி | தேரசமே ச வசே சுபவத விஜய-
சகே-குமாரி-பவதே அரஹதே பகிண-சம்சிதேஹி
காய-நிசீதீயாயா யாபுஜவகேஹி ராஜ-ப4தினா சின-
வதானா வச-சிதானா பூஜானுரத-உவாசக-
காரவேல-சிரினா ஜீவ-தேஹ-(சிரிதா) பரிகாதா |

பதிமூன்றாம் வருடம் விஜயசக்கரத்தில் குமாரி மலையில் பூஜையில் வல்லவனான ஜீவதேக இயல்பறிந்த காரவேலஸ்ரீ உடலிலிருந்து ஆன்மாவை விடுதலை (காய நிசீதீயாயா) செய்துகொண்டவரான அருகர்களுக்கு (அரஹதே) ஆலயம் (ஸ்தூபம்? சைத்யம்) எழுப்பினான்

(இங்கே தெளிவில்லை)

வரி 15

*** சுகத-சமண-சுவிஹிதானம் ச சவ-திசானாம்
ஞானினம் தபசி-இசினம் சங்க4யனம் அரஹத-
நிசீதீயா சமீபே பாபா4ரே வராகார-சமுதாபிதாஹி
அனேக-யோஜனாஹிதாஹி.... சிலாஹி சிம்ஹபதா-ராணீ-
சிந்துலாய நிசயானி |

எல்லா திசைகளிலிருந்தும் பல யோஜனை தூரங்களிலிருந்தும் ஞானிகளாம் தபஸ்வி-ரிஷிகளாம் போற்றதகுந்த (சுவிஹித) சமணர்கள், மலைமேல்  அருகன் கோவிலின் அருகே அமைத்த பிராகாரத்தில் சிம்ஹம்பத ராணி சிந்துலா அமைத்த கல் (சிலாஹி) பலகையை வந்தடைந்தனர்

வரி 16

*** படலகே சதரே ச வேடூரிய-கபே-த2பே
பதிடா2பயதி பானதரிய-ஸட-ஸத-(வ)சேஹி
மு(ரி)கிய-கால-வோசிம்ன ச சோயட2-அங்கம்
சந்திகம் துரியம் உபாத3யதி | கே2ம-ராஜா ஸ
வத-ராஜா ஸ பிக்கு-ராஜா தம-ராஜா பசந்தோ
சுநந்தோ அநுபவந்தோ கலாணானி |

வைடூரியம் பதித்த தூண்கள் கொண்ட அந்த மன்றத்தில் 165ம் ஆண்டு முதல் (பானதரிய-ஸட-ஸத-(வ)சேஹி) மலிந்து வரும் பன்னிரண்டு அங்கங்களை (சமண புனித நூலகளை) வாசிக்க வைத்தான். இவன் நலம்புரியம் (கேம=க்ஷேம) அரசன், செல்வ (வத=வ்ரத?) ராசன் பிக்கு அரசன் தர்ம அரசன். அந்நூல்களை கேள்விகேட்டு (குறைகேட்டு?) செவிசாய்த்து, அனுபவித்து புரிந்துகொள்பவன்.

வரி 17

....குண-விசேச-குசலோ சவ-பாசந்த-பூஜகோ சவ-
தேவாயதன-சங்காரகாரகோ அபதிஹத-சக-
வாஹன-பலோ சக-தரோ குத-சகோ பவத-சகோ
ராஜசி-வம்ச-குல-விநிஷிதோ மகாவிஜயோ ராஜா-
காரவேல-சிரி |

குணத்தில் சிறந்தவன், எல்லா மதங்களையும் பூஜிப்பவன், எல்லா கோயில்களுக்கும் (சவ-தேவாயதனம்) நன்மைசெய்பவன் (சம்காரகாரக) வெல்லமுடியா படைவாகனம் உடையவன், (தர்ம?வெற்றி?) சக்கரம் உடையவன், ராஜவம்சத்தினரை காப்பவன், மகாவிஜயன், ராஜா காரவேல ஸ்ரீ.

கலிங்கம் பேச்சு கச்சேரி - காணொளிகள் 

உதயகிரி கண்டகிரி சிற்பங்கள் - பத்ரி சேஷாத்ரியின் உரை 

தொடர்புடைய கட்டுரைகள்

Thursday, 17 March 2022

விசித்திரசித்தன் குஸ்ரோ

பல்லவ மன்னன் மகேந்திர வர்மன் தன்னை விசித்திரசித்தன் என்று அழைத்துக்கொண்டான். விசித்திரசித்தன் என்ற விருதுபெயரை மண்டகபட்டு, திருச்சி மலைக்கோட்டை லலிதாங்குர பல்லவேச்சுரம், சென்னை பல்லாவரம் குகை கோயில் ஆகிய குகைகோயில்களில் கல்வெட்டாக பொறித்தான்.

கோயில் கலைகளில் புதுமைகள், சமஸ்கிருத இலக்கியத்தில் ஹாஸ்ய நாடகங்கள் எழுதிய புதுமை, தான் சூட்டுக்கொண்ட விருதுகளில் புதுமை, இசையில் புதுமை என்று பற்பல புதுமைகள் செய்த மகேந்திர பல்லவனுக்கு இந்திய வரலாற்றில் நிகரில்லை. கிண்டலும் எள்ளலும் நையாண்டியும் அவன் படைப்பிலும் சொல்லிலும் துள்ளிவிளையாடின.

ஆனால் மகேந்திரனை மிஞ்சிய ஒரு மன்னன் அவனுக்கு சற்றே ஒரு தலைமுறைக்கு முன்பு பாரசீகத்தை ஆண்டான். குஸ்ரோ அனூசிரவன் எனும் பாரசீக மன்னன் செய்த வரலாற்று நையாண்டிக்கு உலக சரித்திரத்தில் நிகரில்லை. ஆறாம் நூற்றாண்டில் ரோமாபுரி பேரரசும் பாரசீக பேரரசும் பாரதத்தின் மேற்கே பெரும் நாடுகள். ஆங்கிலேயர் ஆட்சியால் நமக்கு ரோமாபுரியை தெரிந்த அளவு பண்டைய பாரசீக வரலாறு பரிச்சயமல்ல.

எகிப்தை ஜூலியஸ் சீசர் கைபிடித்த பின், ரோமாபுரி சாம்ராஜ்ஜியம் பெரிதாகியது. கிழக்கில் பாரசீகத்தோடு பல போர்களை நடத்தினர். பாரசீகத்தில் அலெக்சாண்டர் விட்டுசென்ற கிரேக்க ஆட்சி வீழந்து பாரசீக சசானிய வம்சம் பேரரசானது. ரோமாபுரிக்கும் பாரசீகத்திற்கும் இடையே பல போர்கள் பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவந்தன. ஆறாம் நூற்றாண்டில் கான்ஸ்டாண்டினோபிளை தலைநகரமாக கொண்டு ரோமராஜ்ஜியம் கொடிகட்டியது. இத்தாலியில் உள்ள ரோமாபுரி ஐந்தாம் நூற்றாண்டிலே ஜெர்மானிய படைகளால் வீழ்த்தப்பட்டது. கான்ஸ்டாடினோபிளை தலைநகராக கொண்ட நாடு தன்னை ரோம் அல்லது ரூம் என்றே சொல்லிக்கொண்டது. ரோம மன்னன் ஜஸ்டினியன் பாரசீகத்தின் மீது போர் தொடுக்க, பாரசீக மன்னன் குஸ்ரோ பதிலடியாக தன் படையை செலுத்தி ரோம படைகளை வெளியேற்றி, சிரியதேசம் வரை விரட்டினான். அங்குள்ள அண்டியோக் என்னும் நகரத்தை சூழ்ந்து கப்பம் கேட்டான். அண்டியோக் நகரம் கப்பம் கட்ட மறுத்துவிட்டது. அந்நகரை முற்றுகையிட்டு படைகளை வீழ்த்தி நகரத்தில் நுழைந்தான். பொதுவாக தண்டனையாக நகரங்களை அழிப்பது எதிரிமன்னர்களின் வழக்கம். ஆனால் குஸ்ரோ நாட்டின் மன்னன் மட்டுமல்ல நையாண்டி மன்னன். ரோம மக்களுக்கு தாங்களே அறிவிலும் திறனிலும் நாகரீகத்தில் உலகில் மிகச்சிறந்த சமூகம் என்ற கர்வம் இருந்தது. ஆண்டியோக் நகரை தாங்கள் கட்டியதால் அதை நகரமைப்பிலும் கட்டுமான திறத்திலும் கலை அழகிலும் மிகச்சிறந்த நகரம் என்று பெருமைசாற்றி வந்தனர்.

குஸ்ரோ தன் நாட்டு ஸ்தபதிகளை அதிகாரகிகளையும் அண்டியோக் நகரின் ஒவ்வொரு வீடு, வீதி, மாளிகை, கோயில், கிணறு, தோட்டம் என்று ஒன்றுவிடாமல் அளவெடுத்து பதிவு செய்ய கட்டளையிட்டான். பின்னர் பாரசீக நாட்டுக்கு திரும்பிச் சென்று புகழ்மிக்க தெசைபான் நகருக்கு அருகே, இன்னொரு அண்டியோக் நகரை படைக்க கட்டளையிட்டான். ஒவ்வொரு செங்கலும், வீடும், வீதியும், மாளிகையும், கிணறும் குளமும் கோயிலும் அவர்கள் பழைய அண்டியோக் நகரில் எடுத்த அளவுகளை வைத்து ஒரு புதிய நகரத்தை மீட்டுருவாக்கினான். புது நகருக்கு “வெஃ குஸ்ரோ அண்டியோக்” என்று பெயர் வைத்தான். “குஸ்ரோவின் சிறந்த அண்டியோக்” என்பது இதன் பொருள். பழைய அண்டியோக் நகரில் சிறைபிடித்த பல்லாயிரம் மக்களை தன் புதிய நகரில் குடிபுகுத்தினான்.

ரோமாபுரி ராஜ்ஜியத்தையும் அதன் மரபையும் இப்படி குஸ்ரோ நகலெடுத்து நையாண்டி செய்ததுபோல் உலகில் வேறு எந்த அரசனோ அறிஞனோ புலவனோ நையாண்டி செய்ததில்லை என்றே நினைக்கிறேன். நம் காலத்து நையாண்டி நாயகன் டொணால்டு டிரம்பும் கூட வார்த்தையில் மட்டுமே ஜாலம் காட்ட, குஸ்ரோ விசித்திரசித்தரில் இமயமாய் நிற்கிறான்.

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவிலின் அழகில் மெய்மறந்து, பல்லவரை வென்ற சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்யன், தன் தலைநகர் பட்டடக்கல்லில் பல்லவ சிற்பிகளை அழைத்துபோய் இரு கோயில்களை நிறுவினான் என்று சில அறிஞரின் கூற்று. அதெல்லாம் ஒரு கலை ரசனை. இது வேறு தளம். மகேந்திர பல்லவனுக்கு இந்த குஸ்ரோ கதை தெரிந்திருந்தால் மிகவும் ரசித்திருப்பான்.

மௌரிய மன்னன் அசோகன் தன்காலத்தில் அண்டியோக் மன்னனுக்கு தூது அனுப்பினான் என்பது குறிப்பிடதக்கது. குஸ்ரோவுக்கு சுமார் எழுநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவன் அசோகன்.

கன்னௌஜ் மன்னன் சர்வவர்மனின் ஒரு மந்திரி சதுரங்கத்தை குஸ்ரோவின் ராஜசபைக்கு அனுப்பினான் என்றும், குஸ்ரோவின் மந்திரி கன்னௌஜ் மன்னனுக்கு பேக்கேமன் என்றும் விளையாட்டை திருப்பி அனுப்பினான் என்றும் விக்கிபீடியா கூறுகிறது. பல்வேறு நாட்டு பண்டிதர்களை தன் நாட்டிற்கு வரவழைத்து குஸ்ரோ ஆட்சியில் கலைகள் ஓங்கின.

கோரா என்னும் வலைதளத்தில் இந்த குஸ்ரோ சாதனையை முதன்முதலில் படித்தேன்.

வரலாற்று கட்டுரைகள்


Monday, 28 February 2022

நாகசாமி - கற்றதும் பெற்றதும்

Smt Vallabha Srinivasan has translated my tribute to Dr Nagaswamy in Madras Musings into Tamil.

மதராஸ் மியூஸிங்ஸ் இதழில் வந்த ஏன் கட்டுரை - தோழி வல்லபா சீனிவாசனின் தமிழாக்கம்

------------------------------

தினசரிகளில் வரும் தொல்லியல் வரலாற்றுக் கட்டுரைகளின் மூலமாகவே முதன் முதலாக டாக்டர் ஆர் நாகசாமியைப் பற்றி அறிந்தேன். 2009 ம் ஆண்டு மாமல்லபுரம் பற்றியதான அவரது கட்டுடைக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையைப் படித்தேன். அதில் அவர் “மாமல்லபுரத்திலிருக்கும் அனைத்துக் கோயில்களையும் காட்சிச் சிற்பங்களையும் கட்டியது ராஜசிம்ம பல்லவனே!” என்ற கருத்தை முன் வைத்தார். அதுவரை ஜூவோ துப்ரே (Jouveau Doubreil) என்பவர் 1915 ல் முன்வைத்த, ‘மாமல்லபுரச் சின்னங்கள் முதலாம் நரசிம்ம பல்லவர், அவரது பேரன் பரமேஸ்வரன், அவரின் மகன் ராஜசிம்மன் ஆகிய மூவராலும் கட்டப்பட்டவை’ என்ற கருத்தே, ஒரு நூற்றாண்டு காலமாக வரலாற்றாசிரியர்களிடையே நிலவியது. அந்தக் கருத்தை கட்டுடைத்த இந்த ஆய்வு ஒரு மர்ம நாவல் படிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தியது. அதற்காக அவர் சேகரித்து முன்வைத்த,

கட்டுமானக் கலை, கல்வெட்டு, அழகியல் ரசனை, கவித் திறன், வரலாற்று ஆதாரங்கள் சார்ந்த பல்வேறு வாதங்கள் பிரமிக்கத் தக்கவை.
பொதுவாக நாகசாமியை ஒரு பெரும் முதியவராக, தமிழ்நாட்டுத் தொல்லியலின் பீஷ்ம பிதாமகராகவே நினைவு கூர்கிறோம். அது அவருக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொல்லியலில் அவரால் பெரிதும் மதிக்கப்படுகிற, T N ராமச்சந்திரன், சிவராம மூர்த்தி போன்றோரை அவமதிப்பது போலாகும். இவர்களுடன் நாகசாமியும் பணியாற்றி கற்றவை பற்பல. அவரது சாதனைகள் அவர் இளைஞராக இருந்த போதே வந்தவை என்பதையும் மறந்து விடுகிறோம். ராஜசிம்மன் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதிய போது அவரது வயது 32! தென்னிந்திய வரலாறு என்ற பெரும் படைப்பின் முன்னுரையில் K A நீலகண்ட சாஸ்திரி, இளைஞர் நாகசாமியின் விலைமதிப்பற்ற ஆலோசனைக்கு நன்றி கூறி இருக்கிறார்.
நாகசாமி ஒரு பிரமிக்கத்தக்க இளைஞராக இருந்தார். அவர் பல ஆண்டுகள் உயிரோடிருந்து பல துறைகளை மேம்படுத்தியது நம் அதிர்ஷ்டமே! வரலாறு, நடனக்கலை, இசை, இலக்கியம், மதம்…தொல்லியலும் கல்வெட்டியலும் மட்டும் அல்ல. வில்லியம் ஜோன்ஸ், அலெக்சான்டர் கன்னிங்ஹாம் போன்ற சிறந்த ஆங்கிலேய ஆராய்ச்சியாளர்கள் தொடங்கி வைத்த ஒரு கலாசாரத்தின் விளக்காகத் திகழ்ந்தார் நாகசாமி. மேலும் தமிழிலும், சம்ஸ்கிருத்த்திலும் அகண்ட ஆழ்ந்த இலக்கியத் திறமை கொண்டவராகவும் இருந்தார். பகுத்தறியும் ஆராய்ச்சியில் எவ்வளவு மதிப்பு கொண்டவராக இருந்தாரோ, அவ்வளவு தன் பக்தியிலும் பெருமை கொண்டவராக எப்போதும் நெற்றியில் மூன்று பட்டை விபூதியுடன் காணப் படுவார்.
தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையைத் துவங்கிய, ஐஐடி டெல்லியில் பணியாற்றிய பேராசிரியர் சுவாமிநாதன் ஏற்பாடு செய்திருந்த மாமல்லபுரம் கல்விப் பயணத்திற்காக இவரது ராஜசிம்மன் ஆய்வுக் கட்டுரையைப் படிக்க நேர்ந்தது. சுவாமிநாதன் நாகசாமியுடன் சென்ற சித்தன்னவாசல் பயணத்தை நினைவு கூர்ந்தார். சித்தன்னவாசலில் பழைமையான சமண ஓவியமும், பாண்டியர் கால தமிழ் வட்டெழுத்துக் கல்வெட்டும், தமிழ் பிராமியிலான சங்க காலக் கல்வெட்டும் இருக்கின்றன. நாகசாமி உற்சாகம் கொண்டவராக அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் ஒரு காகித்த்தில் இந்த எழுத்துக்களை எழுதிக் காண்பிக்க ஆரம்பித்தாராம். அந்த ஆடு மேய்க்கும் சிறுவன் ஒரு பெரும் உலகறிந்த ஆராய்ச்சியாளர் தனக்கு கல்வெட்டு சொல்லித் தருகிறார் என்று அறிந்திருப்பானா?
இவ்வாறு இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் இந்நாட்டு பாரம்பரியப் பெருமையை அறிந்து பெருமை கொள்ள வேண்டும் என்று எண்ணியவர் நாகசாமி. தொல்லியலும், கல்வெட்டியலும் சமூகத்திலிருந்து விலகி அறிவுசார் கல்வி அரங்குகளிலும், காட்சியகங்களிலும் தீவு போல இருப்பதை அவர் விரும்பவில்லை. வரலாற்றுச் சின்னங்கள் சுரண்டப்பட்டு கருங்கல் குவாரிகளாகவும், ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த ஓவியங்கள் வெள்ளை அடிக்கப் பட்டும், வெங்கலச் சிலைகள் திருடி விற்கப் பட்டும், புதுப்பிக்கப்படுகிறது என்ற பெயரில் பழமையான சின்னங்கள் அழிக்கப்படுவதுமான அவல நிலையில் இருக்கும் இக்காலத்தில் இதைவிட முக்கியமானதாக எது இருக்க முடியும்?
இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு மாநிலத்தில் தொடங்கப்பட்ட தொல்லியில் துறையான தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு, 1966 ல் நாகசாமி தலைமை ஏற்றார். புத்தகங்கள் விலை மிக்கதாகவும், நூலகங்கள் அரிதாகவும் இருந்த கால கட்டத்தில் பல சிறிய விலை மலிவான துண்டுப் பிரசுரங்களை பதிப்பித்தார். பன்னிரண்டு மாவட்டங்களில் அருங்காட்சியகங்கள் அமைக்க அரசாங்கத்தை வற்புறுத்தினார். இதற்கு முன் சென்னையிலும், புதுக்கோட்டையிலும் மட்டுமே அருங்காட்சியகங்கள் இருந்தன. மற்ற மாநில தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் கோயில் சுவர்களிலுள்ள தமிழ்க் கல்வெட்டுகளை இவரது சீடர்கள் நேரடியாகப் படிப்பதைக் கண்டு வியந்தனர். அவர்கள் மாநிலங்களில் பதிவுப் பிரதி எடுக்கப் பட்டு, பின்னர் பல நாட்கள் படித்தறியும் ஒரு நீண்ட செயல்முறையாக இருந்தது இது.

அவருக்கும் சில வீழ்ச்சிகளும், சர்ச்சைகளும், அரசியல் சார்ந்த கருத்துசார்ந்த மோதல்களும் இருந்தன. அவர் ஒரு முறை பதவி நீக்கம் செய்யப் பட்டார். விசாரணைக்குக் காத்திருந்த நேரத்தில் அவர் வருந்தி அமர்ந்திருக்கவில்லை. சிறையிலிருந்த போது புத்தகங்கள் எழுதிய இந்திய விடுதலைப் போராட்டத் தலைவர்களைப் போல, தன் கலை மற்றும் இலக்கியத் திறமையை முழுவதுமாக உபயோகித்து, "ராஜராஜ சோழன்," "ராஜேந்திர சோழன்," "மணிமேகலை," "அப்பர்" போன்ற வரலாற்று, சமய நாயகர்கள் மீதான பல நாட்டிய நாடகங்களை வடிவமைத்தார். கபிலா வாத்ஸ்யாயன் என்பவருடன் இணைந்து சிதம்பரம் நாட்டியாஞ்சலி என்ற நடன விழாவைத் தொடங்கினார். அவரது பல நாட்டிய நாடகங்கள், நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்கள் பங்குபெற்று இந்தியாவில் மட்டுமின்றி, ஜெர்மெனி, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளிலும் அரங்கேற்றப்பட்டன.

தமிழில் சங்க இலக்கியம் பற்றி "யாவரும் கேளிர்" என்ற நூலையும், தமிழ்நாட்டின் ஓவியம் சிற்பக் கலை பற்றி "ஓவியப் பாவை" என்ற நூலையும் பொது மக்களுக்காக எழுதினார். ஆங்கிலத்தில் பல ஆய்வுப் புத்தகங்களை எழுதினார் - "சஹ்ருதயா"; "காஞ்சிபுர விஷ்ணுக் கோயில்கள்"; "பழமையான தமிழ் சமுதாயமும் அதன் சட்டங்களும்".





"வெங்கலச் சிலைகள் (சோழர் காலம்)"; "மாமல்லபுரம்"; "கங்கை கொண்ட சோழபுரம்" - தமிழ் நூல்களையும் எழுதினார் . அவரது இணைய தளம் அவரது புத்தகங்களும், கட்டுரைகளும் கொண்ட ஒரு பல்கலைக் கழகம்.
சம்ஸ்க்ருத இலக்கிய வார்த்தைகள் பரிச்சயம் இல்லாத மக்களைக் கருத்தில் கொண்டு, பல சிற்பங்களுக்கு தேவாரம், திவ்யப் பிரப்பந்தம் சொற்றொடர்களிலிருந்து அழகான தமிழ்ப் பெயர்களை உருவாக்கினார். "மாமயிடன் செறுக்கறுத்த கோலத்தாள்" என்று மஹிஷாசுர மர்த்தினியையும், திருமங்கை ஆழ்வார் சொன்ன கடல் மல்லை கிடந்த கரும்பு என மாமல்லபுர அனந்தசயன விஷ்ணுவையும் வர்ணித்தார். வலம்புரம் என்ற இடத்தில் கிடைத்த தானம் பற்றிய கல்வெட்டில் ‘வட்டணைகள் பட நடந்த நாயர்’ என்றிருந்தது. யாருக்கும் அதன் பொருள் விளங்கவில்லை. ஆனால் நாகசாமி அப்பரின் ஒரு பாடலில் “வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வம்புறத்தே புக்கங்கே மன்னினாரே” என்று பிக்ஷாடனர் குறிப்பிடப் படுவதைக் கூறி, சோழர் கால பிக்ஷாடனர் ஐம்பொன் சிலையுடன் இதை இணைத்தார். இது அவரது தனித்துவமான திறமை.
மூன்று மொழிகளிலுமான பரந்த ஞானம், வேதம், ஸ்மிருதி, ஆகமங்கள், பரத நாட்டிய சாஸ்திரம், சம்ஸ்கிருத காவியங்கள் இவற்றில் இருந்த ஆழ்ந்த ஆளுமை, அதே போல தமிழில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், இதர தமிழ்க் காப்பியங்கள், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம் போன்றவற்றில் இருந்த புலமை, கல்வெட்டில், வரலாற்றில் இருந்த திறமை, மூன்று நூற்றாண்டுக்கான ஆங்கில ஆராய்ச்சிக் கல்வியின் அறிவு ஆகியவை இவரை அரிதிலும் அரிதான ஆராய்ச்சியாளராக அடையாளம் காட்டியது. நாட்டில் இவ்வளவு பரந்த ஞானம் உள்ளவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அதிலும் திறம்பட எழுதவும், பேசவும் முடிந்தவர் சிலரே.
சில ஒற்றைப் புத்தக பண்டிதர்களும், ஒரு மொழிப் புலவர்களும் நாகசாமி மேல் ஏளனத்துடன் வசைமாறி பொழிந்தனர். சில நேரம் அவர்களுக்கும் தக்க பதிலளித்தார்.

சில தனிப்பட்ட நிகழ்வுகள் - காஞ்சி கைலாசநாதர் கோயிலை, நான் புரிந்து கொள்ளத் திண்டாடிய போது ‘அதைக் கட்டிய ராஜசிம்மன் அந்தக் கோயிலை அதிமானம் அதி அத்புதம் என்றே வர்ணிக்கிறான் என்று எடுத்துக் காட்டினார். அதாவது "சரியாக அளவிடப்பட்ட அற்புதம்" என்பது. அது என் கண்களைத் திறந்தது : அந்த ராஜசிம்மனின் வார்த்தைகளைக் கொண்டே அந்தக் கோயிலை அணுக வேண்டும் என்று புரிந்து கொண்டேன். 2014 ல் நாகசாமி அவர்களை கௌரவிக்கும் விதமாக நடத்தப்பட்ட தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரி நிகழ்வுக்காக நாகசாமி அவர்களின் பன்னாட்டு ஆய்வுக் கட்டுரைகளை அலசும் கௌரவத்தை சுவாமிநாதன் எனக்கு அளித்தார். கைலாசநாதர் கோயிலில் ராஜசிம்மன் தன் அழகிய எழுத்துக்களில் பொறித்து வைத்திருந்த பட்டப் பெயர்கள் - ‘அத்யந்தகாமன்’ (எல்லையில்லா விருப்புடையவன்), ‘கலாசமுத்ரன்’ (கலைக்கடல்). இரு பட்டப் பெயர்களையும் ஒரு சட்டையில் தைத்து எழுதி அவருக்குப் பரிசளித்தோம். அதை ஆனந்தமாக அடுத்த நாளே அணிந்து கொண்டார்.

சட்டையில் அத்யந்தகாமன், கலாசமுத்ரன்  


பெஞ்சமின் பாபிங்டன் 1830 ம் ஆண்டு எழுதி மறக்கப்பட்ட பல்லவ கல்வெட்டு பற்றிய ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையை நான் கண்டறிந்த போது அவர் மிகவும் அகமகிழ்ந்து அவர் வீட்டிலேயே ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து அதைப் பற்றிப் பேச வைத்தார். அவருடன் மேடையைப் பகிர்வது என்ன ஒரு பெருமை!

பாபிங்டன் பல்லவ கல்வெட்டு  


சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு கருத்தரங்கில், உத்திரமேரூர் பற்றிய ஒரு உரைக்காக ஒரு குடத்தில் சிறு காகித்த் துண்டுகளைப் போட்டு இளைஞர்களை எடுக்கச் செய்தார். இதன் மூலம் உத்திரமேரூர் கல்வெட்டில் குறிப்பிடப் பட்ட, பயம் பாகுபாடு இன்றி தலைமை வகிப்பவரைத் தேர்ந்தெடுக்கும் குடவோலை முறையை கண்கூடாக நடத்திக் காட்டினார்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சோகம் அவரைத் தாக்கியது. அவரது முப்பது வயது கூட நிரம்பாத பேரன் ஒரு நோயால் மரணித்தார். அதற்கு அமெரிக்கா சென்று விட்டு திரும்பியிருந்த போது இங்கு, சொல்லிலும் பேச்சிலும் வல்ல ஆய்வாளர் ஒருவர், சமூக வலைத் தளங்கள் அவரை தூற்றியதற்காக மனமுடைந்து, இனி தான் பேசவே போவதில்லை என்று அறிவித்திருப்பதை கேள்விப் பட்டார். நாகசாமி அவரைத் தொலைபேசியில் அழைத்து அவர் விபரீத முடிவை விசாரித்துக் கொண்டே, தனக்கு நேர்ந்த துயரத்தைப் பகிர்ந்து கொண்டார். அந்த இளைஞர் புரிந்து கொண்டார். இத்தகைய தாங்க முடியாத் துயரம் 80 வயதிற்கு மேற்பட்ட முதியவரான அவருக்கு ஏற்பட்ட போதும், அது அவரது ஆராய்ச்சியிலிருந்து அவரை விலக்கவில்லை எனும் போது எதிரிகள் வசைபாடும் காரணத்தால், அவரில் பாதி வயது கூட நிரம்பாத ஒருவர் விலகுவதா?
கலைக்கடல் நாகசாமியை நான் சந்தித்தது ஒரு வரம். அவர் செப்பும் மொழி கேட்டது ஒரு பாக்கியம். அவர் நூல்களைப் படித்தது ஈடில்லாக் கல்வி. அவருடன் உறவாடி உள்ளம் மகிழ்ந்த மணித்துணிகள் அதி அற்புதம்.

Related Essays

Nagaswamy - Beyond borders (Essays)

The third Rajasimha inscription - Babington's surprise

மயிலாப்பூரில் பல்லவர் இசை - நாகசாமி உரை

காஞ்சி கைலாச நாதர் கோயில் அலங்கார லிபி

Related Videos 

அத்யந்தகாமன் - நாகசாமி நினைவுகள் (தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை)

மாமல்லபுரம் 2000 ஆண்டுகள் (தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை)

New light on Mamallapuram (with Dr Nagaswamy at Tamil Arts Academy)