Showing posts with label நூலகம். Show all posts
Showing posts with label நூலகம். Show all posts

Tuesday, 12 June 2018

சென்னை நகரத்து நூலகங்கள்



தீவுத்திடலில் ஜூன் 2016 நடந்த சென்னை புத்தக கண்காட்சியில் சென்னை நகரத்து நூலகங்கள் என்ற தலைப்பில் உரையாற்ற நண்பர்கள் பிரதீப் சக்கரவர்த்தியும் பிரியா தியாகராசனும் பபாசி நிறுவனத்தின் சார்பில் கேட்டனர். மகிழ்ந்தே ஒப்புக்கொண்டேன். ஒரு சில நூலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலர்களோடு பேசி, சில தகவல்களை சேகரித்தேன். 

சிறு வயதிலேயே கன்னிமாரா நூலகத்திற்கு என் தாய் புஷ்பாவுடன் சென்றுள்ளேன். அம்மா எத்திராஜ் கல்லூரியில் எம்.ஃபில். பொருளியல் படித்துவந்தாள். சில சனிஞாயிறு அன்று கன்னிமாரா செல்லும்போது என்னையும் அழைத்துச்செல்வாள்.

கன்னிமாரா நூலக புதிய கட்டத்தில்
கன்னிமாரா நூலக பழைய கட்டத்தில்

மதறாஸ் இலக்கிய சங்க நூலகம்

 அக்காலத்தில் தமிழ் படிக்கும் ஆர்வமேதும் இல்லை. குமுதம் கல்கி ஆனந்தவிகடன் பத்திரிகைகளில் வரும் துணுக்கு ஓவியங்களை (கார்ட்டூன்) மட்டும் படித்து ரசிப்பேன். எப்பொழுதாவது பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி கதைகளை வாசித்து காட்டுவாள்; ரசகுண்டு பேரை கேட்டாலே சிரிப்பு வரும். எனக்கு ஒன்பது வயதிருக்கும். ஆங்கிலத்தில் படிப்பதிலும் ஆர்வமில்லை. ஆனால் சென்னையிலிருந்து புனே செல்லும் ரயிலில், பொழுது போக்க யாரோ கருடன் எனும் அமர் சித்ர கதா ஓவியக்கதையை (காமிக் புத்தகம்) வாங்கி கொடுக்க, காமிக்புக் மோகம் பிறந்தது. ஆங்கிலம் மட்டுமே. முப்பது வயது வரை தமிழில் ஆர்வம் வரவில்லை.

சிறுவயதில் தந்தையுடன் ஓரிரு முறை மயிலை ரணாடே நூலகத்திற்கு சென்றுள்ளேன் – ஏதோ ஒரிரு மாலை வேளை ஏதாவது சில மாதாந்திர பத்திரிகை அல்ல செய்தித்தாளை படிக்க போவார். அதன் வாசலில் நிற்கும் நடமாடும் தபால்வண்டியை (சிவப்பு வேன்) ஒரு முறை அவர் காட்டினார். வாய்பிளந்தேன்.

கடந்த சில வருடங்களாய் கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திலும் அடையாறு கே.வி.சர்மா நூலக்த்திலும் பற்பல நாட்கள் நாலைந்து மணிநேரம் படிக்கும் இன்பத்தில் மூழ்கியுள்ளேன். உவேசா நூலகத்திற்கு நரசையா அழைத்து சென்று தமிழ் தாத்தாவின் கையெழுத்தும் சன்னதும் ஓலைச்சுவடிகளையும் ரவீந்திரநாத் தாகூர் எழுதிய வாழ்த்தையும் பார்த்தது மறக்க முடியாத திருநாள். அங்கு நண்பர் உத்திராடம் பணியாற்றி வருகிறார்; அவரைக் கண்டதும் ஒரு இன்ப அதிர்ச்சி. அவர் சென்னை கிறுத்துவ கல்லூரி பேராசிரியர் பாலுசாமியின் மாணவர்; பல முறை பேசி பழகியுள்ளோம். உவேசா நூலகத்தை பற்றிய பல தகவல்களை அளித்ததுடன், தே.சிவகணேஷ், ஐ.சிவகுமார் எழுதிய “சென்னை நூலகங்கள்” என்ற புத்தகத்தையும் காட்டினார். கைத்தல நிறைகனி! எல்லா நூலகத்திலும் வாசலிலே வரவேற்கும் மாவிலைத் தோரணம் போல இந்நூலை காட்சி வைக்கலாம்.

இருளில் ஒலித்த குரல்

ஒளிமயமான பிரதீப் உரை

நண்பர்கள் ராம்கி, சேவாலயா முரளிதரன், காந்தி நிலையம் அண்ணாமலை ஆகியோர் அறிவுருத்தி சைதை காந்தி நூலகம் பற்றி அறிந்தேன். அதன் நிறுவனர் மகாலிங்கத்தின் மகன் நித்தியானந்தரை பலமுறை டக்கர் பாப்பா காந்தி நிலையத்தில் புதன்கிழமை நூலாய்வுகளில் சந்தித்துள்ளேன். மகாலிங்கம் ஆச்சரியமானவர். கல்கி, ராஜாஜி, மாபொசி, ராஜம் ராமசாமி, கண்ணதாசன், பரளி சு நெல்லியப்பர் என்ற பல ஜாம்பவான்கள் தன் நூலகத்திற்கு வந்த வரலாற்று சம்பவங்களை பேசி நெகிழ வைத்தார். 

அதே போல் திருவல்லிக்கேணி கஸ்தூரி ஸ்ரீநிவாசன் நூலகத்து நிறுவனர்கள் நரசிம்மன்னும் பார்த்தசாரதியும் அன்பாக பேசியதோடு, இதே ஜாம்பவான்கள் தங்கள் நூலகத்துக்கு வந்ததை சொல்லி அசரவைத்தனர். எம்.எஸ்.விசுவனாதனுக்கு “மெல்லிசை மன்னர்” என்ற பட்டத்தை அளித்ததே இவர்களது திருவல்லிக்கேணி கலாச்சார மன்றமே என்று தெரிந்ததும், நூலகத்தில் புத்தகத்தை தாண்டி எத்தனை அதிசயங்கள் உள்ளன என்பதை புரியவைத்தது.

அந்நாளில் சேப்பாக்கத்தில் சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கிய அரசு கீழ்திசை சுவடி நூலகத்திற்கு சென்றபோது, அதன் இயக்குனர் சந்திரமோகன் அவர்களே பொறுத்து பல தகவல்களை அளித்தார். இந்த சுவடி நூலகம் சமீபத்தில் கோட்டூர்புரம் அண்ணா நூலகத்திற்கு இடம் மாறியுள்ளது. வரலாற்று புகழோடு அரிதான களஞ்சியமாக திகழும் நூலகம் என்பதால், ஓலைச்சுவடிகளையும் அவற்றின் பாதுகாப்பு முறைகளையும் படமெடுத்துக்கொள்ளலாமா என்று அனுமதி கேட்டேன். மறுத்துவிட்டார். ஆனால் தன்னுடைய கணினியில் வைத்திருந்த படங்களை படமெடுக்க அனுமதித்தார். அடுத்த நாள் அடையாறு நூலகமும் இதைப்போல் அனுமதி மறுத்தது. பின்னாளில் அடையாறு நதி வரலாற்று தேடலின் போது நண்பர் வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் அனுமதி பெற்று, அடையாறு நூலகத்து அரிய நூல்களையும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முகமதிய நூலகத்தின் மேலாளரை பார்த்து தகவல்கள் பெற்றுக்கொள்ள நண்பர் கோம்பை அன்வர் அறிவுருத்தினார். மூன்று முறை சென்றும் அவரை சந்திக்க முடியவில்லை. மயிலை ராமகிருஷ்ண மடத்து நூலகத்திலும் மேலாளர் சென்ற போது இல்லை, அவர் அனுமதியின்றி ஒன்றும் செய்ய முடியவில்லை, படம் கூட எடுக்கவில்லை.

ஒரு மணி நேர உரைக்கு தயாரான பின் நாற்பது நிமிடமாக சுருங்கியது. கொஞ்சம் வேகவேகமாக பேசினேன். 1950களோடு நிறுத்திக்கொள்ளும் நிலமை, சில நூலகங்களை பற்றி பேச இயலவில்லை. இணையமே இன்று அனைவருக்கும் நூலகமாயினும், காகித புத்தக நூலகங்கள் வழக்கொழியவில்லை.

காணொளி பதிவாகவில்லை என்பதால் ஒலிப்பதிவுடன் படங்களை சேர்த்து காணொளியை நான் படைத்து இணையத்தில் ஏற்றியுள்ளேன். கீழே காணலாம்.

வத்தல்குழம்பு சம்பவம், சின்ன மழையில் தவித்தாலும் பெருவெள்ளத்தில் தப்பித்த நூலகம், ஆங்கிலேய உவேசா என்று அழைக்க தகுந்தவர் யார், எகிப்து மன்னர் கொடுத்த பரிசு, நூலகவியலின் தந்தை, அவர் வகுத்த ஐந்து விதிகள், தமிழில் மருத்துவ நூலை எழுதிய அமெரிக்கர், சிவலிங்க வடிவிலுள்ள ஓலைச்சுவடி நூல், திபெத்திய திபிதகம் என்று பல சுவையான தகவல்கள் இவ்வுரையாய்வு தேடலின் போது கிடைத்தன. இதையெல்லாம் காணொளியில் பார்க்கலாம். இந்த நூலகங்களுக்கு நேரில் சென்றும் காணலாம்.  

 சென்னை நகரத்து நூலகங்கள் - video

உறவுடை சுட்டிகள்

ஞானதேவதைகள்அமெரிக்க தேசிய நூலகத்து ஓவியங்கள்
ரவீந்திரநாத் தாகூர் இயற்றிய உவேசா வாழ்த்து
ஒரு ஆங்கிலேயனின் தமிழ் கல்வெட்டு
இந்த உரையின் ஒலிப்பதிவு


Wednesday, 6 April 2016

ஞானதேவதைகள்

அமெரிக்கா ஒரு அறிவியல் நாடா ஆன்மீக நாடா? கிறுஸ்துவ நாடா மதச்சார்பற்ற நாடா? மரபு போற்றும் நாடா முற்போக்கு நாடா?

கல்லூரி காலத்து கலை ஆர்வம்

நான் 1991இல் படிக்க அமெரிக்கா செல்லும் வரை, அந்நாட்டை அறிவியல் துறையில் தலைத்தோங்கும் நாடென்றே நினைத்துவந்தேன். எடிசனின் நாடு, பெஞ்சமின் ரைட் சகோதரர்களின் நாடு, கம்ப்யூட்டர் உகம் படைத்த நாடு, நோபல் பரிசுகளை அள்ளி குவிக்கும் நாடு, மேற்படிப்புக்கு ஈடு இணையற்ற நாடு, அற்புதமான சினிமாக்களை தயாரிக்கும் நாடு, ராணுவ வல்லரசு, பொருளாதார வல்லரசு, வசதிகளும் பேச்சுரிமையும் பல வித சுதந்திரங்களும் கோலோச்சும் நாடு என்றெல்லாம் நம்பினேன். இவை முக்கால்வாசி அங்கே உண்மையாகவே இருந்தன. 

கலை ஓவியம் சிற்பம் பாரம்பரியம் பற்றி பெரிதாக அப்போது எனக்கு ஆர்வம் இல்லை. அமெரிக்காவில் அவற்றை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்பொழுது கணினித்துறை படிப்பில்தான் ஆர்வம். சினிமாவில் பலவிதத்தில் பார்த்திருந்தாலும், நேரில் கண்ட செல்வ கொழிப்பு பிரமிக்கவைத்தது. பெரிதாக கவர்ந்தது தொலைகாட்சி பெட்டியே. 1991இல் தூர்தர்ஷண் மட்டுமே பாரத்தில் தொலைகாட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் படிக்கும் போது அங்கே விடுதியில் இலங்கை ரூபவாஹிணியில் தமிழ் மற்றும் அமெரிக்க ஆங்கில தொடர்களை பார்க்க நேர்ந்தாலும், அமெரிக்காவில் கண்ட ஐம்பது தொலைகாட்சி சேனல்களும் மற்ற கலைகளை பற்றிய எண்ணத்தையே உருவாக்கவில்லை.

டாவின்சியும் மைக்கலேஞ்சலோவும் ஏதோ வரலாற்று நபர்கள். அவர்களது ஓவியங்கள் பெரிதும் அழகாக எனக்கு இன்றுவரை தோன்றுவதில்லை. நார்மன் மெய்லர், ஜாக்சன் பால்லாக் போன்றவர்கள் பிரபலமானாலும், அதிலும் ஈடுபாடே இல்லை. இயற்கை எழிலுக்கு அவை போட்டியே இல்லை என்பது அன்றைய மனப்பான்மை. 1999இல் டாவின்சியின் நூல்களை சியாட்டில் அருங்காட்சியகத்தில் வைத்தபோது பார்க்க ஆசையிருந்தாலும் கூட்டத்தை கண்டு மிரண்டு போகவில்லை. அந்நகரத்து ஃப்ரை அருங்காட்சியகத்தில் வேன் கோ, ராஃபாயல், ககேன், மோனே, ரெம்ப்ராண்ட் வேறு சிலரின் ஓவியங்களை கண்டேன்; நுண்கலை உணர்வே எனக்கு இல்லை; ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை; அவற்றில் ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. 

உண்மையில் குமுதம் விகடன் கல்கி கதைகளுக்காக வரையப்பட்ட படங்களும், சூப்பர்மேன் பேட்மேன் டிண்டின் ஆஸ்டெரிக்ஸ் கேல்வின் & ஹாப்ஸ் போன்ற காமிக்ஸ் எனப்படும் தூரிகை படங்கள் தந்த மகிழ்ச்சியை அந்து உலக புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் தரவில்லை. நவீன கலை நகைச்சுவை பொருளாகவே தெரிந்தது.

அமெரிக்க தேசிய நூலகம்

சென்ற 2015இல் அமெரிக்காவுக்கு சுற்றுலாவாக சென்றேன். அறிவியல் யாத்திரை என்றே மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கங்கே கலைகளையும் பார்த்து ரசிக்க நேரந்தது. குறிப்பாக  நான்கு நாட்கள் வாஷிங்டன் நகரின் அருங்காட்சியகங்களிலும், அந்நாட்டு பாராளுமன்றத்தின் நூலகத்திலும் சிற்பங்களும் ஓவியங்களும் பல கதைகள் சொல்லின. 

காங்கிரஸ் என்ற பெயர்கொண்ட அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு தனி நூலகம் தேவை என்று கருதி, மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்ஸன் (நற்றமழில் தாமசு செப்பர்சன்) நினைத்து அதை அமைத்தார். பின்னர் அது மிக முக்கிய நூலகமாக மாறியது. தெய்வ நம்பிக்கையுள்ள மதசார்பற்ற அரசை உருவாக்கவேண்டும் என்பது அமெரிக்க குடியரசின் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தை சமைத்தவர்க்கும் தோன்றிய ஒரு முக்கிய கருத்து. அவர்கள் பெரும்பாலும் கிறுத்துவர்களாகவே இருந்தனர்; ஆனால் கிறுத்துவத்தின் பல்வேறு பிறிவுகளை சித்தாந்தங்களை சேர்ந்தவராயிருந்தனர். அரசும் சமூகமும் அமைக்க ஜூலியஸ் சீஸருக்கு முந்தைய ரோமாபுரி குடியரசும் ஏதென்ஸ் சைரக்கியூஸ் போன்ற கிரேக்க நகரங்களும் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தன.

முதலில் அமைத்த நூலகத்தை 1812இல் நடந்த போரில் பிரித்தானிய படை எரித்துவிட்டது. அந்தப்போரிலும் அமெரிக்காவே வென்றது. எரிந்த நூலகத்தை மீட்டமைக்க தாமசு செப்பர்சன் தன் சொந்த நூல்களை தானம் செய்தார். அதை வைத்து பல ஆண்டுகள் நடத்தினர். பெரும் நூலகம் ஒன்றைகட்ட நிதி ஒதுக்கி பின்னர் 1897 அதை கட்டி முடித்தனர். அதுவே நாம் இன்று காணும் நூலகம்.


காங்கிரஸ் நூலகம் முகப்பில் ஜெயராமன்

கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. அறிவியலில் ஃப்ரான்சிஸ் பேக்கன், கெலீலியோ, ரெனே தேகார்த், ஐசக் நியூட்டன், ஜான் ஹூக், ராபர்ட் பாயில், வோல்டேர் ஆகியோர் வளர்த்த தத்துவங்கள் ஒரு ஊக்கத்தை தந்தது. அக்காலத்து மாபெரும் அறிவியல் மேதாவி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு முக்கிய சுதந்திர போராளி. இந்திய விடுதலை போராளிகளுக்கு ரவீந்திரநாத் தாகூரை போல், அவர் ஒரு வழிகாட்டி. ஜனநாயகம் செழிக்க அதன் பிரதிநிதிகளுக்கு கல்வியும் தகவலும் முக்கியம் என்பதால் இதை பிரதிபலிக்கும் விதத்தில் காங்கிரசின் நூலகத்தை அமைத்துள்ளனர்.

மகாமண்டபத்தில் ஓவியங்கள்

ஓவியப் பாவைகள்

அழகும் பிரம்மாண்டமும் செல்வமும் மிளிரும் வகையில் நூலகத்தின் கட்டட கலையும் அலங்காரமும் அமைந்துள்ளன. கண்ணாடி ஜன்னல்களின் அமைப்பும் கூறை ஜன்னல்களின் அமைப்பும், தூண்களின் கம்பீரமும், பார்ப்பவரின் கண்ணை பறிக்கும்.

இதில் கிறுஸ்துவ சின்னங்கள் ஏதும் மையமாக இல்லை. தேசிய சின்னங்கள் என்றுகூட எதையும் சொல்லமுடியாது. சுதந்திர போராட்டத்தை சித்தரிக்கும் ஓவியங்களோ, தலைவர்களின் ஓவியங்களோ, நாட்டின் இயற்கை எழிலோ ஏதும் இல்லை.

மாறாக, நூலக மகாமண்டபத்தின் சுவர்களில் ஞானதேவதைகளின் ஓவியங்களை தீட்டியுள்ளனர். பல்வேறு செல்வங்களை நாம் அஷ்டலக்ஷ்மியாக ஐதீக மரபில் கொள்வது போல் தொன்மையான கிரேக்க மக்களும் ரோமாபுரியினரும் பல தெய்வங்களையும் தேவதைகளையும் வழிப்பட்டனர். அந்த தெய்வங்களை தழுவாமல், ஆனால் அந்த மரபை தழுவி, கணிதம் விண்ணியல் புவியியல் தாவரவியல் விலங்கியல் ரசாயனம் என்று தலா ஒரு பெண் வடிவம் அமைத்து சுவற்றின் மேல் ஓவியங்கள் தீட்டிப்பட்டுள்ளன. கலைகளுக்கும் பல்வேறு ஓவியங்கள் உள்ளன. இந்திய மரபில் பருவங்கள் ஆறு; ஐரோப்பாவில் நான்கு – வசந்தம், கோடை, இலையுதிர், பனிக்காலம். இவை நான்கும் சிற்பமாகவும் ஓவியமாகவும் உள்ளன.
உடற்பயிற்சியும் விளையாட்டும் கிரேக்க காலத்திலிருந்து முக்கியமாக கருதப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் நினைவாகவும் இரண்டு ஓவியங்கள் உள்ளன.

பழமொழிகளும் பொன்மொழிகளும் மரபின் அடையாளங்கள். ஷோக்ஸ்பியர் ஜெஃபெர்சன் போன்றவரின் பொன்மொழிகளை கல்வெட்டாய் செதுக்கி, அவற்றிற்கும் ஓவியப்பாவை வடிவம் அமைத்துள்ளனர்.

பார்க்கும் இடமெல்லாம் சிற்பங்கள் ஓவியங்கள். பளிச்சிடும் பளிங்கு தூண்களும், வெளிச்சத்தை பரப்பும் கண்ணாடி ஜன்னல்களும், சுவரிலும் கூறையிலும் போதிகைகளிலும் வண்ண

ஒளிமயமான அஜந்தா என்றே சொல்லலாம்.


தொல்லியல் தேவதை விண்ணியல் தேவதை
ரசாயன தேவதை புவியியல் தேவதை
கணித தேவதை இயற்பியல் தேவதை
இருபுறமும் அறிவியல் தேவதை ஓவியங்கள்


ஞான தேவதைகள்

அறியாமை ஒரு சாபம், வானுலகம் எய்த ஞானமே சிறகு

ஒத்துழைப்பு வீரம்
முயற்சி தேசபக்தி

வழிகாட்டும் சான்றோர்

இவற்றையெல்லாம் விளக்க, ஆர்வமும் வரலாறும் பேச்சுத்தெளிவும் அயரா பண்பும் கொண்ட பல வழிகாட்டிகள் சுற்றுலா வந்தோரை, பத்து நிமிடத்து ஒரு சுற்றுலா குழு வீதம், வழிநடத்தினர். பல்வேறு நகரங்களில் கண்ட பெரும் சிறப்பு இது. அமெரிக்காவின் வழிகாட்டிகளை நம்மை வியக்கவைக்கின்றினர். பாரதத்தில் பெரும்பாலும் இப்படி இல்லையே என்ற ஏக்கத்தில் நம்மை மூழ்கடிப்பார்கள். தம் நாட்டு வரலாற்றிலும் சாதனைகளிலும் பெருமை கொண்டவர்களாயினும், அவர்களின் நடுநிலைமை புகழதக்கது. என்னாட்டவர்க்கும் எக்கலைஞர்க்கும் சான்றாக திகழ்கிறார்கள்.

நூலகத்தில் வெவ்வேறு கண்காட்சிகள் உள்ளன. தாளில் முதல் அச்சிடப்பட்ட விவிலிய நூல் ஒன்றுள்ளது. செவ்விந்தியரின் மரபையும், முதலில் அமெரிக்கா வந்திறங்கிய இசுபானிய தேசத்தோரின் பண்டங்களும், மற்றும் பல பிறிவுகளும் உள்ளன. அதை வேறுமுறை அலசலாம்.

கலைவாணி மினெர்வா

வெளிமண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் அற்புதமான ஒரு படிக்கும் அறை உள்ளது. இதற்கு போகும் வழியில் சுவர் உயர மினெர்வாவின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. 

மினெர்வா கலைகளின் தேவதை, சரஸ்வதிக்கும் சமம்.

கலைவாணி மினெர்வா
படிக்கும் அறையின் இரண்டாம் மாடிக்கு சென்று சுற்றுலா பார்க்க மட்டும் ஒரு பலகணி அமைத்துள்ளனர். சுற்றுலா வருவோருக்கு வட்டமான படிக்கும் அறைக்கு தரை தளத்தில் செல்ல அனுமதி இல்லை; அது ஆய்வாளர்களுக்கு மட்டுமே. அந்த வட்ட அரையின் விமானம் மசூதிகளை போல் வானியல் மையங்களைபோல் அரைகோளம். அங்கே பல சிற்பங்களும், கூரையில் ஒரு அசாத்திய ஓவியமும் உள்ளன. பின்னர் ஒரு நாள் அவற்றை பற்றி எழுதுகிறேன்.

ஒளிமயமான மகாமண்டபம்

சுட்டிகள்