Showing posts with label ஓவியம். Show all posts
Showing posts with label ஓவியம். Show all posts

Saturday, 4 May 2019

ஐம்பெரும் ஓவியம் - 2 - பெருங்காப்பிய அளவுகோல்கள்




பாரத நாட்டிலுள்ள எல்லா ஓவியங்களிலிருந்தும் ஐம்பெரும் ஓவியம் என்று தேர்ந்தெடுக்க என்ன அளவுகோல்? காலம், அளவு, இடம், மரபு, ரசம், கருப்பொருள் என்று ஆறு வகையான அளவுகோல்கள் எனக்கு தோன்றுகின்றன. இலக்கியத்திலும் இசையிலும் பயன்பட்ட அளவுகோல்களை மேலோடு பார்த்துவிட்டு, பின்னர் ஓவியக் கலையில் நிலைமையை ஆராய்வோம்.

ஒரு நூலை காப்பியம் என்று அழைக்க ஒரு தமிழகத்து சம்ஸ்கிருத புலவர் வகுத்த லக்ஷணமே மிகப்புகழ் பெற்றது. காஞ்சிபுரத்தில் பல்லவர்காலத்தில் வாழ்ந்த தண்டி எனும் புலவர் காவியதரிசனம் எனும் நூலில் காவியத்தின் இலக்கணத்தை, அதாவது அளவுகோல்களை வரிசைப்படுத்தியுள்ளார். இலக்கணத்தை (லக்ஷணம்) நிறைவேற்றுவது இலக்கியம் (லக்ஷ்யம்). ஏழாம் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தண்டிக்கு முன்னர் கிமு இரண்டாம் நூற்றாண்டிலோ அதற்கும் முன்னோ வாழ்ந்ததாக கருதப்படும் பரதர் இயற்றிய நாட்டியசாத்திரத்தில், காவியத்தின் தகுதிகளும் காவிய நாயகனின் தகுதிகளும் காணலாம்.
தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வேறு பல இந்திய மொழிகளிலும் புலவர்கள் இவ்விலக்கணத்தை பேணி வந்தனர். சில விதிவிலக்குகளையும் மரபு வழியாக கடைபிடித்தனர். காப்பியத்திற்கு இந்த இலக்கணமிருக்கையில் பெருங்காப்பியம் என்று ஒரு நூலை கருத என்ன தனிப்பட்ட அளவுகோல்கள் என்பதை நான் இங்கு பரிசீலிக்க முனைகிறேன்

தமிழ் இலக்கியம்

(க) கால அளவுகோல் தமிழில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஐம்பெரும் காப்பியமாம். இவற்றை தேர்ந்தவர் யாரெனத் தெரியவில்லை. கிபி பதினான்காம் நூற்றாண்டில் நன்னூலுக்கு உரை எழுதிய மயிலைநாதர், ஐம்பெருங்காப்பியம் என்று முதலில் குறிப்பிடுகிறார்.

காலத்தை அளவுகோலாக நோக்கின், இவையாவும் சங்ககாலத்திற்கு பின்னும், சோழர்கால அஸ்தமனத்திற்கு முன்னுமாகும். ஏறத்தாழ கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு பின்னும் பதிமூன்றாம் நூற்றாண்டுக்கு முன்னும். சங்க இலக்கியங்கள் எதுவும் பெருங்காப்பியம் இல்லையா என்று எவரும் கேட்டதாக தெரியவில்லை. குண்டலகேசியும் வளையாபதியும் தொலைந்துவிட்டதாலும், அவை மீண்டும் கிடைக்க வாய்ப்பு மிக சிறிதே என்பதாலும், அவற்றை நீக்கி, கம்ப ராமாயணமும் சேக்கிழாரின் பெரிய புராணமும் ஐம்பெருங்காப்பியத்துள் சேர்க்கவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். சற்றே காலத்தில் பின் வந்த வில்லிபாரத்தை சேர்க்கவேண்டும் என்று கோருவாருமுண்டு. கோபாலகிருஷ்ண பாரதி எழுதிய நந்தனார் சரித்திரம், அருணாச்சல கவியின் ராமநாடகம், சன்கரதாஸ் சுவாமிகளின் பவளக்கொடி, அல்லிஅர்சுணன் போன்ற மேடை நாடகங்களை ஐம்பெருங்காப்பியமாக சேர்க்க யாரும் கோரவில்லை.


சிலப்பதிகாரத்தின் தரத்தில் நீளத்தில் இன்று ஒருவர் காப்பியம் எழுதினால் அதை படிக்கவோ கேட்கவோ யாருளர்? இருபதாம் நூற்றண்டில் தான் தமிழ் சமூகம் இயல் தமிழையும் இலக்கியமாக ஏற்றது; ஆனால் கல்கியின் பொன்னியின் செல்வன், சாண்டில்யனின் கடல் புறா போன்ற சரித்திர கதைகளையோ, மற்றவர் கதைகளையோ பெருங்காப்பியம் என்று புகழவோ, ஐம்பெரும்நாவல் என்று ஒரு வகுப்பையோ தொகுக்க யாரும் முனையவில்லை.

சங்க கால இருதியிலோ அதற்கு சற்று பின்னரோ இயற்றப்பட்ட சிலம்பும் மணிமேகலையும், பின்னர் சோழர் காலத்தில் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், குண்டலகேசியும் வளையாபதியும் எப்படி ஒரே தொகுப்பில் இடம்பெற்றன? அப்படி சிறப்பித்து தொகுத்தபின் ஏன் ஒரு சமூகமே மறக்கும் அளவுக்கு அத்துப்போயின? விடைகள் இல்லை. ஆதலால், காலம் ஒரு அளவுகோலல்ல.

(ச) நீள அளவுகோல் பெருங்காப்பியம் என்னில் நீளமாக இருக்கவேண்டும். சிலம்பு ஐந்தாயிரம் வரிகள், சீவக சிந்தாமணி பன்னிரண்டாயிரம் வரிகள்.
ஐங்குறுங்காப்பியம் என்று தனி ஒரு தொகை இருப்பதும் இதை காட்டுகிறது. தொள்ளாயிரம் விருத்தச்செய்யுளே கொண்டது நீலகேசி.
முல்லைப்பாட்டு 103 வரிகள், நெடுநல்வாடை 188 வரிகள், பொருனராற்றுப்படை 250 வரிகள், குறிஞ்சிப்பாட்டு 261 வரிகள், சிறுபாணாற்றுப்படை 269 வரிகள், பட்டினப்பாலை 301 வரிகள், பெரும்பாணாற்றுப்படை 500 வரிகள், மதுரைக்காஞ்சி, மலைப்படுகடாம் தலா 583 வரிகள். இவை சங்ககால காப்பியங்கள் என்று சொன்னாலும் நீளாத்தால் பெருங்காப்பியம் அல்ல.

சோழர்கால இலக்கியத்தில் நளவெண்பா ஏறத்தாழ 1600 வரிகள், கலிங்கத்து பரணி 2400 வரிகள், மூவர் உலா ஓவ்வொன்றும் தலா 600 வரிகள்.

நீளம் ஒரு அளவுகோல் என்பது தெளிவு. எத்தனை நீளம் என்பது தெளிவில்லை.

இராமாயணம், பெரிய புராணம், வில்லிபாரதம் போன்றவையும் சேர்த்து ஏன் எண்பெருங்காப்பியம் என்று பின்னாளில் ஐம்பெருங்காப்பியம் விரிவாகவில்லை? இதற்கு விடையில்லை. நீளம் மட்டுமே அளவில்லை எனத்தோன்றுகிறது.

(ட) இட அளவுகோல் ஓவியமும் சிற்பமும் கோயில், குகை, மண்டபம், கட்டடம் என்ற இடத்தை சார்ந்தவை. இலக்கியத்திற்கு பொதுவாக இது ஒரு அளவுகோலாக தெரியவில்லை.

ஆனால் இந்த ஊரிலோ நாட்டிலோ நிகழ்ந்த கதை ஏற்கலாம், மற்றவை விலக்கலாம் என்று ஏதும் தடையிருப்பதாக தெரியவில்லை.

(த) மரபு அளவுகோல் பாரத நாட்டு பலமொழிகளிலும் கவிதையே இலக்கியம் என்ற கொள்கை பத்தொன்பதாம் நூற்றண்டுவரை நிலைத்தது. கவி செய்வது காவியம். ஆற்றுப்படை, செய்யுட்தொகை, நீதி நூல், பழமொழித்தொகை, காப்பியம், புராணம், உலா, பரணி, தூது, என்று பலவகை இலக்கியம் தோன்றியுள்ளன. இலக்கணம், மருத்துவம், இசை, ஆகமம், கணிதம், கட்டிடக்கலை, ஆகியவை இதிலடங்கா; அவற்றை காப்பியமாக நாம் கருதுவதில்லை. பின் தோன்றியவை குறவஞ்சி, காவடிச்சிந்து, நாட்டிய நாடகம், தெருக்கூத்து, மேடை நாடகம், திரைப்படம், நாவல். முப்பெரும் உலா, ஐம்பெரும் திரைப்படம், மேடை முப்பது, நாவல் நாற்பது என்று யாரும் தொகுக்கவில்லை. ஏன் என்று தெரியவில்லை.

ஐம்பெரும் காப்பியம் என்ற ஒரு தொகை என்றோ உருவானதால், அதையும் ஒரு மரபாக தொடர்ந்து வருகிறோம்.

(ப) ரச அளவுகோல் இதுதானே பெரும்சிக்கல்? ரசனை தனிமனிதனுக்கு ஒருவிதம், சமூகத்திற்கு ஒருவிதம், சமூகத்தின் பல்வேறு குழுக்களுக்கு பலவிதம். மேன்மக்களாலோ, மேல்தட்டுமக்களாலோ காலத்தை வென்று நிற்கும் கலைப்பொருட்கள் ஒரு நாட்டிலோ சமூகத்திலோ தங்கி நிற்கின்றன. பாமர மக்களுக்கு அன்றாட வாழ்விலுள்ள அக்கறையும் ஈடுபாடும் செவ்வியல் கலைகளில் இருப்பதில்லை. இதை உலகெங்கும் காண்கிறோம். ஒரு சமூகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டால், அதன் ரசனையும் கலையும் மாறுவதை காண்கிறோம். எகிப்தில் பாரோக்களின் வீழ்ச்சிக்கு பின் பிரமிடுகளும் அவர்களது மதக்கோயில்களும் கட்டுவது நின்றுபோனது. சுமேரியா, கிரேக்கம், ரோமாபுரி, பாரசீகம், மதமாற்றத்தால் மரபு மாறிவிட்டன. அமெரிக்க பழங்குடியினரின் ஒல்மெக், அஸ்டெக், இன்கா மரபுகள் யாவும் ஐரோப்பிய படையெடுப்பினாலும் இனவொழிப்பாலும் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டன. பாரதமும் சீனமும் ஜப்பானும் கொரியாவும் ஓரளவுக்கு விதிவிலக்கு.
தமிழ் இலக்கியத்திலும் இதை காணலாம். சங்க கால தமிழுக்கும் பிற்கால தமிழுக்கும் உள்ள வேறுபாடு இரண்டு வரி படித்தாலே சுள்ளென அடிக்கும். உ.வே.சாமிநாத ஐயர் சங்க இலக்கியத்தை “வேறு ஒரு தனி பாஷை” என்றே குறிப்பிடுகிறார். சொற்களும், உவமைகளும், சித்தாந்தமும், கருப்பொருளும் அவ்வளவு மாறிவிட்டன. ஆனால் அந்த மரபு தொடர்கிறது. சங்க இலக்கியங்களை தனி ஒரு தொன்மையாக கருதுகிறோம். ஆனால், ஒரு மரபு பிளவையும் உணர்கிறோம். இயற்றமிழில் இலக்கியம் உருவான இருபதாம் நூற்றாண்டில், அதே போல், ஒரு மரபு தொடர்ச்சி, ஒரு மரபு பிளவு இரண்டும் கலந்தே நிகழ்ந்தன.

ஓவிய சிற்ப கலைகளிலும் இந்த மாற்றம், தொடர்ச்சி இரண்டுமே தெள்ளந்தெளிவு. பின்னர் பார்ப்போம்.

சிலப்பதிகாரம் கதையாலும், சொல்வளத்தாலும், செய்யுள் சுவையாலும், ரசத்தில் மிக சிறந்த காப்பியம். பாத்திரங்களின் குணங்களும் ரசிக்கக்கூடியவை. ஒரு தலைவனின் வீரசாகசமோ, போரோ மையமாக அன்றி, கண்ணகியின் அறச்சீற்றமும், பாண்டியனின் அறவுணர்ச்சியும் பாரத இலக்கியத்திலேயே அதற்கு தனியிடம் பெறவைத்தவை. சேரனின் படையெடுப்பு மையக்கதையின் நீரோட்டத்தை விலகி நிற்கிறது. அதை ஒரு தனி காவியமாகவே படைத்திருக்கலாம்.

சமூகநிலை, இசை குறிப்புகள் நாட்டிய வர்ணனைகள் சிலம்பின் முக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கின்றன. மணிமேகலை கதையிலோ இசைக்குறிப்பிலோ மிளிரவில்லை. இல்லற வாழ்க்கையை துறந்து துறவரம் நாடும் ஒரு பெண்ணின் கதை, பரதர் தண்டி வகுத்த இலக்கணத்தில் பொருந்தவில்லை. ஆனால் சொல்வளம், நகர வர்ணனை, பஞ்ச கால சோகம், கருணை போன்ற ரசங்களை சிறப்பாக கையாண்டுள்ளது. பல்வேறு மதங்களை விசாரிக்கும் காதை தனி ஒரு சிறப்பு.

சீவகசிந்தாமணியில் கதையே இல்லை; காதல், திருமணம், திருமணம், அப்பப்பா ஆகமொத்தம் எட்டு திருமணம், நகர வர்ணனை, இயற்கை வர்ணனை; அதனை சொல்லும் மிக அழகிய இலக்கியம்.
ரசத்தில் மூன்றும் வெவேறு நிலையில் உள்ளன; ரசம் அளவுகோலாக தெரியவில்லை.

உலகின் மற்ற அனைத்து பேரிலக்கியங்களை போல் ஒரு மன்னனின் வீரசாகசத்தை மையக்கதையாக கொள்ளாமல், தமிழிலேயே மதுரைக்காஞ்சி, பெரும்பாணற்றுப்படை, ராமாயணம், கலிங்கத்து பரணி போலுமன்றி, வணிகர்களை நாயகராகவும், அறம்தேடும் பெண்ணை நாயகியாகவும் கொண்டாடுவது ஐம்பெருங்காப்பியத்தின் தனிச்சிறப்பு.

(ற) கருப்பொருள் அளவுகோல் பன்னிரு திருமுறை சைவப் பாசுரங்கள் மட்டுமே. நாலாயிர திவ்யபிரபந்தம் வைணவப் பாசுரங்கள் மட்டுமே. ஐம்பெருங்காப்பியமோ பௌத்த சமண நூல்கள். அரசியல், வணிகம், உழவு, இவை கருப்பொருளாக இலக்கியங்கள் இல்லை. காதல், போர், பழிவாங்கல், நியாயம், பக்தி, இவைமட்டுமே இலக்கியத்தின் கருப்பொருள். நிற்க. கருப்பொருள் வேறுபடும் போது எவ்வாறு ஒப்பிட்டு ஒன்றை சிறந்ததென்றும், ஒன்றை தாழ்ந்ததென்றும் பிறிக்கமுடியும்? ஒரு மதத்தையோ சித்தாந்தத்தையோ சார்ந்தவர் மற்றொரு மதத்தையோ சித்தாந்தத்தையோ, அதை சார்ந்த படைப்பையோ சிறந்ததென்று ஒப்புக்கொள்ள முடியுமா? இல்லை சரிசமமாக பார்க்கமுடியுமா? பலருக்கும் இது இயலவில்லை என்பதே நிதர்சனம். மிகச்சிலரால் முடிகிறது. பன்னிரு திருமுறையும், திவ்ய பிரபந்தமும், திருப்புகழ், தேம்பவணி, சீராப்புரணம் போன்றவையும் தனியாக வைப்பதற்கும் இது ஒரு காரணம் எனத்தோன்றுகிறது. இறைமறுக்கும் அறிவியல், பொதுவுடமை, போன்ற கருத்து தளங்களும் இதில் அடங்கும்.
தமிழில் மிகச்சிறந்த அறிவியல் இலக்கியம் இல்லாதது ஒரு பெரும் குறை. அளவுகோல்களில் ரசத்தை போல், கருப்பொருளும் ஒரு சிக்கலான அளவுகோல் என்பது, இலக்கியத்திற்கு மட்டுமல்ல, மற்ற கலைகளுக்கும் பொருந்தும்.

ஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தில் பெருங்காப்பியம் என்று வகுக்க மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறியவை காட்டுகின்றன.

வடமொழி இலக்கியம்

() கால அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தில் தொன்மையானவை வேதங்கள். அவை வேத சந்தத்தில் உள்ளன; பாணினி இலக்கணத்தை வகுக்கும் முந்தைய காலத்து மொழியிலுள்ளன.
சம்ஸ்கிருதத்தில் வியாகரணம் என்பதை தமிழில் நாம் இலக்கணம் என்கிறோம். இலக்கணம் லக்ஷணம் என்பது சம்ஸ்கிருதத்தில் காவியத்தின் விதிகளை குறிப்பது, மொழியின் விதிகளை குறிப்பதல்ல என்பது நோக்கற்பாலது.

இராமாயணமும் மகாபாரதமும் இதிகாசங்கள். இவை சமஸ்கிருத மொழியிலுள்ளன. பாரதம் இயற்றிய கிருஷ்ண த்வைபாயன வேதவியாசர், பதினென் புராணங்களையும் தொகுத்ததாக மரபு. வேதம், வேதாங்கம், சாத்திரம், இதிகாசம், புராணம், இவை தனி வகைகள், காப்பியம் வேறு வகை என்பது சம்ஸ்கிருத மரபு. அதன்படி, காளிதாசன், பாரவி, மாகன், ஸ்ரீஹர்ஷன் இயற்றிய காப்பியங்கள், ஐம்பெருங் காப்பியங்களாய் வழங்கிவருகின்றன. காளிதாசன் கிமு இரண்டாம் நூற்றாண்டு, பாரவி மாகன் ஏழாம் நூற்றாண்டு, ஸ்ரீஹர்ஷன் பன்னிரெண்டாம் நூற்றாண்டு.  
காலம் சம்ஸ்கிருத மொழியின் பெருங்காப்பியத்திற்கும் ஒரு அளவுகோல் அல்ல, என்பது தெளிவு.

அப்படியா? இந்தக் கட்டுரைக்கு விவரம் தேடியபோது விக்கிப்பீடியா தந்தது ஓர் அதிர்ச்சி. இருபதாம் நூற்றாண்டில் இருநூற்று பெருங்காப்பியங்கள் சம்ஸ்கிருதத்தில் இயற்றப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து இந்தியாவின் சுந்திர போராட்டாம், மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கை வரலாறு, பால கங்காதர் திலகரின் வாழ்க்கை வரலாறு, கேரளத்தின் எழுச்சி என்று பல்வேறு நவீன நிகழ்ச்சிகளும் மனிதர்களும் இந்தக்காவியங்களின் கருப்பொருள், நாயகர்கள். பல நூல்களின் கவித்திறன் காளிதாசனை மிஞ்சும் என்று ஒரு பண்டிதர் கருதுகிறார்.
சம்ஸ்கிருதம் ஒரு செத்த மொழி என்று பலரும் கருத இந்த நாடறியா ரகசியத்தை எப்படி பார்க்கலாம்?

(ச) நீள அளவுகோல்
காளிதாசன் இயற்றிய ரகுவம்சமும் குமாரசம்பவமும் பெருங்காப்பியங்கள். ஆனால், மேகதூதம், சாகுந்தலம், விக்ரமோர்வசி லகுகாப்பியங்கள். அதாவது குறுங்காப்பியங்கள். இதிகாசங்களும் புராணங்களும் சம்ஸ்கிருத காப்பியங்களை விட பல மடங்கு நீளம். பரதர் இயற்றிய நாட்டிய சாத்திரம், வராஹமிகிர் இயற்றிய பிருஹத் சம்ஹிதை போன்ற நூல்களும் இக்காப்பியங்கோளோடு நீளமானவையே. ஐம்பெரும் சாத்திரம், ஐம்பெரும் ஜோதிடம் என்றெல்லாம் வகைமுறை இல்லை.
கதாசரித்சாகரம் என்ற தொகை நூலும் மிகப்பெரியது. ஆனால் அது காப்பியமாக கருதப்படவில்லை போலும்.

நான் சம்ஸ்கிருத மொழி அறியேன்; அதன் இலக்கியம் மேலோட்டமாகவே தெரியும்; சாராம்சத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ சுருக்கமாகவே படித்துள்ளேன். ஆய்வு கட்டுரைகளை, உரைகளை படித்ததில்லை. அதனால் என் தகவல்களும் கருத்துக்களும் மிகவும் மேலோட்டமானவை; ஆழமில்லாதவை.

(ட) இட அளவுகோல்
தமிழ் இலக்கியங்களை போலவே சம்ஸ்கிருத மொழி இலக்கியங்களும் இடம் முக்கிய அளவுகோல் அல்ல. கோசலை நாட்டில் ரகுவம்சம், விதர்ப நாட்டில் நைஷத சரிதம், சேடி நாட்டில் சிசுபால வதம், இமயமலையில் குமாரசம்பவம், கிராதார்ஜுனீயம். நாடு, நகரம், நதி, காடு, மலை, புண்ணிய தலங்கள் என்று பல இடங்களில் கதைகள்.

மேலே செல்வோம்.

() மரபு அளவுகோல்
தமிழைப்போலவே சம்ஸ்கிருதத்திலும் கவிதையே இலக்கியமாக கருதப்பட்டுளது. ஆனால சம்பு என்னும் உரைநடை மரபும் இருந்தது. குறிப்பாக, ஏழாம் நூற்றாண்டில் பாணர் இயற்றிய காதம்பரி என்னும் இலக்கியம் உரைநடையே. பெருங்காப்பிய புலவர்கள் பாரவிக்கும் மாகனுக்கும் ஏறத்தாழ சமகாலத்தவர் பாணர். காதம்பரி, உலகின் முதல் நாவல் என்பது சிலரின் கருத்து. ஆனால் பாணர் வழியில் மற்ற இயல்நடையில் புலவர்கள் தொடரவில்லை. உரைகளில் இயலும் காவியத்தில் கவிதையும் என்பதே மரபு. விக்ரமோர்வசீயம், மத்தவிலாசம், போன்ற நாடகங்களில் வசனங்களுக்கு நடுநடுவே கவிதைகள் வரும்.

தெய்வத்தையோ மிகச்சிறந்த மன்னனையோ நாயகனாய் வடிக்கப்பட்ட கதைகளே காவியமாக கருதப்படும் மரபு சம்ஸ்கிருதத்தில் உண்டு. ராமனின் முன்னொற்களின் கதை ரகுவம்சம்; சிவ பார்வதி திருமணமும், முருகனின் பிறப்பும் குமாரசம்பவம். கிராதார்ஜுனியம், சிசுபாலவதம், நைஷத சரிதம் மகாபாரதத்தின் வழித்தோன்றல்கள். சாகுந்தலம், ரத்னாவலி, விக்ரமோர்வசீயம் போன்றவை துஷ்யந்தன், உதயணன், விக்ரமன் போன்ற புராணகால மன்னர்களை நாயகராய் கொண்ட கதைகள். பத்தாம் நூற்றாண்டிற்கு பின் தோன்றிய மற்ற மொழி இலக்கியங்களும் இந்த சம்ஸ்கிருத மரபையே பெரும்பாலும் பின்பற்றின.

சூத்ரகன் இயற்றிய ம்ருச்சகடிகம் என்ற ஒரு மிக அபூர்வ நூல் இதற்கு ஒரு விதிவிலக்கு. மகேந்திர வர்ம பல்லவன் இயற்றிய இரண்டு பிரஹஸனங்களாம் மத்தவிலாசமும், பகவதஜ்ஜுகமும் அவ்வாறே. இதை பற்றி மைக்கேல் லாக்வுட் சிறப்பான ஆய்வு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
செல்வந்தரான வணிகர், சாதனை படைத்த பாமரர், படைத்தலைவர் ஜோதிடம், கணிதம், இலக்கணம், தர்க்கம், மருத்துவம், நாட்டியம் என்று கலையோ அறிவியலோ சாலப்படைத்த புலவர், பண்டிதர் எவரும் காவிய நாயகர்களல்ல. குறிப்பாக உலகமே வியக்கும் வானளாவிய கோவில்களையும், அணைகளையும், நகரங்களையும் வகுத்த ஸ்தபதிகளோ, அஜந்தா, தஞ்சை போன்ற அற்புத ஓவியத்தொடர்களை வடித்த் கலைஞர்களோ காப்பிய நாயகர்களாக கொண்டாடப்படவில்லை. 

காளிதாசனை பற்றிய செவிவழிச் செய்திகளை மட்டுமே நாமறிவோம்; மூன்று வேறு காலத்தில் மூன்று காளிதாசர்கள் இருந்துள்ளனர்; இதுவே பலருக்கும் புதிதாக இருக்கலாம்; பராமார குல மன்னன் போஜன் காலத்து காளிதாசனை பற்றியவையே இந்த செவிவழிச் செய்திகள்; பெரும்புலவனாக கொண்டாடப்படும் காளிதாசனோ, போஜனுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சுங்க வம்ச காலத்தில் வாழ்ந்தவன்.
வைதீக மரபில் நிலமை இப்படி. நாட்டிய பெண்களை நாயகியாய் கொண்ட பௌத்த கதைகள் அமரபாலி, குண்டலகேசி போன்றவை. நாகாநந்தி என்ற பௌத்த முனிவரை பற்றிய நூலை மன்னன் ஹர்ஷவர்த்தன் இயற்றினான்; லலிதவிஸ்தாரம் கௌதம புத்தரின் வாழ்க்கை சரித்திரம். பிராகிருத மூலக்கதைகளை சம்ஸ்கிருதத்தில் படைத்த காலத்தில் இவை உருவாகின. சம்ஸ்கிருதத்தில் சமண ஆசிவக சார்வாக இலக்கியமேதும் நான் அறியேன்.

(ப) ரச அளவுகோல்
குறுங்காப்பியமான சாகுந்தலம் காளிதாசனின் மற்ற படைப்புகளை விட சிறப்பாக பேசப்படுகின்றன. காளிதாசனுக்கு ஒரு படி கீழாகவே மற்ற வடமொழி புலவர்களை ரசிகர்கள் கருதுகின்றனர். ஆனால் ஒரு பழமொழி மட்டும், “உவமைக்கு காளிதாசன், ஆழ்ந்த பொருளுக்கு (அர்த்த கௌரவம்) பாரவி, சொல் இனிமைக்கு (பத லாலித்யம்) தண்டி, இந்த மூன்றும் கொண்டவை மாகன்” என்று பறைச்சாற்றுக்கிறது.

குமாரசம்பவத்தில் சில செய்யுட்களில், ஒரு பிரமாணத்திற்கு தலா மூன்று உவமைகளை கூறியுள்ளான் காளிதாசன். சில உவமைகள் இயற்கை சார்ந்தும், சில உவமைகள் தத்துவம் சார்ந்தும், சில உவமைகள் இலக்கணம் சார்ந்தும், சில உவமைகள் வரலாற்றை சார்ந்தும் உள்ளன. ஒரு சர்கம் (காண்டம்) முழுதும் ஒற்றை சந்த பிரயோகம், பாத்திரத்துக்கும் சந்தர்ப்பத்துக்கும் ஏற்ற சொல்நயம், போன்றவை அவன் திறனை காட்டுகின்றன. இமய மலையை வர்ணிக்கும் போது அதன் தாவரங்கள், விலங்குகள், பருவகால மாற்றங்களும் சிறப்பும், வானிலையின் பன்மை, மூலிகைகளின் மகிமை, வந்து போகும் பாத்திரங்களின் நடத்தை பண்பு குணம் பண்பாடு என்று பல்வேறு தகவல்கள், காளிதாசனின் கள ஞானத்தை தெரிவிக்கின்றன. சிலப்ப்திகாரத்து நகர, நதி வர்ணனைக்கும் இசை நாட்டிய வணிக குறிப்புகளுக்கும் சமமாக இவற்றை கூறலாம். கதை சம்பவங்களுக்கு  ஏற்ப சிங்காரம், வீரம், ரௌத்திரம், சோகம், பயம் என்று ரசங்களை வெளிகாட்டும் மாட்சியை உரையாசிரியர்கள் சிலாகித்தும் ரசித்தும் எழுதியுள்ளனர். இதை போன்றே மற்ற காப்பியங்களிலும் பலவித ரச வெளிபாடு, இயற்கை வர்ணனை, நகர வர்ணனை போன்றவற்றை நாம் அறியலாம், அனுபவிக்கலாம்.
குப்த மன்னன் விக்கிரமாதித்யனின் அரசவையில் நவரத்தினங்களென ஒன்பது புலவர்கள் புகழ்பெற்றனர்; ஆனால் அவர்கள் இயற்றிய நூல்களுக்கு இந்த புகழில்லை.

பல ரசங்களும் உள்ள நூலே காப்பியம் என்று கருதவேண்டும்; ஒரு காப்பியம் மற்றொரு காப்பியத்தை விட சிறப்பாக சிலரும், நேரெதிராக சிலரும் கருதுவது மனித இயல்பு. மிகச்சிறந்த நூல்களே பெருங்காப்பியங்களாக நிலவுகின்றன என்பதில் ஐயமில்லை.

() கருப்பொருள் அளவுகோல் சம்ஸ்கிருத இலக்கியத்தின் கால அளவுகோலையும் மரபு அளவுகோலையும் சுட்டிக்காட்டுகையில் கருப்பொருள் வேற்றுமைகளையும் சுட்டிக்காட்டிவிட்டேன். மிக முக்கிய வேற்றுமை, வடமொழி ஐம்பெருங்காப்பியங்கள் வைதீக மரபு கதைகள்; பௌத்த சமண கதைகளல்ல.

ஆறு அளவுகோல்கள் காட்டும் முடிவு தமிழ் இலக்கியத்தைப்போலவே, சம்ஸ்கிருத இலக்கியத்திலும் மரபும், நீளமும் முக்கிய அளவுகோல்கள், மற்றவை முக்கிய அளவுகோல்கள் அல்ல என்பது மேற்கூறிய தரவுகள் காட்டுகின்றன.

அடுத்த கட்டுரையில் இசை தொகுப்புகளை காண்போம்.


Monday, 15 April 2019

ஐம்பெரும் ஓவியம் - 1 - ஆதங்கம், அறியாமை, கேள்விகள்


இலக்கிய தொகை
தமிழ் இலக்கியத்தில் ஐம்பெருங் காப்பியம் புகழ்பெற்றவை. ஐங்குறுங்காப்பியமும் அறிவோம். வடமொழியில் மூன்று பிருஹத்காவியங்கள், அதாவது, பெருங்காப்பியங்கள், புகழ் பெற்றவை; இவை பாரவி இயற்றிய கிராதார்ஜுனீயம்; மாகன் இயற்றிய சிசுபாலவதம்; ஸ்ரீஹர்ஷன் எழுதிய நைடதம். காளிதாசன் இயற்றிய ரகுவம்சம், குமாரசம்பவம் இரண்டையும் சேர்த்து, வடமொழியின் ஐம்பெருங் காப்பியமாகவும் கூறுவர். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் காலத்தில், அதாவது பதினாறாம் நூற்றாண்டில் தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் இயற்றப்பட்டன என்று சமீபத்தில் அறிந்தேன். மற்ற இந்திய மொழிகள் இதுபோல் வரிசையை நான் கேள்விப்பட்டதில்லை.

பஞ்சபூதங்களையும் நாம் அறிவோம். உபநிடதங்களிலும் புறநாநூற்று பாடலிலும் இப் பஞ்சபூதங்களை வணங்கியும் வர்ணித்ததும் வரலாறு. பஞ்சபூத தலங்கள் என்று பாடல் பெற்ற ஐந்து சிவன் கோயில்களும் தமிழரும் மற்ற தென்னிந்தியரும் அறிந்ததே. முருகனின் அறுபடை வீடுகளை சொல்லவும் வேண்டுமா?

இசைத்தொகை
கர்நாடக இசையில் திருவாரூர் தியாகையர் இயற்றிய பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் புகழ் பெற்றவை. முத்துசாமி தீட்சிதரின் கமலாம்பாள் நவாவர்ணமும் சிலர் அறிவர். விக்கிரமாதித்தியன் அரசவையில் நவரத்தினங்களாக ஒன்பது புலவர் இருந்ததும் கர்ணப்பரம்பரை. எந்த விக்கிரமாதித்தியன் என்பது கேள்விக்குறி. முகலாய மன்னன் அக்பரின் அரசவையிலும் கிருஷ்ணதேவராயர் அரசவையிலும் இதுபோல் நவரத்தினங்கள் இருந்ததும் தெரியும். நவரத்தினம் என்பதே செல்வந்தர் மகிழும் ஒன்பது ரத்தினங்கள் அல்லவா?

நான்மறை, அறுசுவை, ஏழு ஸ்வரம், எட்டு திக்கு, என்றெல்லாம் பொக்கிஷங்களை எண்ணி கணித்து கொண்டாடுவது நம் வழக்கம். அகநானூறு, ஐங்குறுநூறு, இனியவை நாற்பது, பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று இலக்கியத்தில் மிக தொன்மையான மரபை காண்கிறோம்.

கலைத்தொகை
ஐம்பெரும் ஓவியம் என்று நாம் கொண்டாடுகிறோமா? எனக்கு தெரிந்து அப்படி யாரும் ஒரு தொகுப்பை வழங்கவில்லை. ஓவியர்கள் கூட யாரும் இதை பற்றி பேசியோ எழுதியோ நான் கேட்டதில்லை. பண்டைக்கால ஓவியங்கள் பலவும் காலத்தின் கோலத்தால் அழிந்து ஒழிந்து விட்டன என்று  ஒரு வாதத்துக்கு ஒதுக்கிவிடுவோம். ஐம்பெரும் சிற்பம் என்றாவது நாம் புகழ்ந்து பாராட்டுகிறோமா? இல்லை. ஏன்?

மாமல்லபுரத்து ஐந்து ரதங்கள் மிகப்பிரபலம். பாரதத்தை தாண்டி உலக கலை ரசிகரின் மனதில் அவற்றுக்கு ஒரு சிறப்பிடம். அவை ரதங்கள் அல்ல, கோயில்கள். ஐந்து கோயில்கள் என்று யாரும் அழைத்ததில்லை. இருபதாம் நூற்றாண்டிற்கு முன் தமிழ் இலக்கியத்தில் அவை இடம் பெறவேயில்லை. தமிழ் சினிமா பாடல்களில் கோயில்களும் சிற்பங்களும் ஓடி விளையாடி நடனமாடும் நடிகருக்கு பின்புல களமே தவிற, திரைப்படங்களின் கதைக்கும் சிற்பக்கலைக்கும் தொடர்பிருக்காது. கல்கியின் சிவகாமியின் சபதம் உட்பட, மாமல்லபுரத்து ஐந்து ரதமும், அஜந்தா சித்தன்னவாசல் ஓவியங்களும் கதாநாயகருக்கு பின்புலமேயன்றி, கதையின் இணைந்த கலைகளல்ல. இவற்றை, இலக்கியமும் இசையும் திரைப்படத்துறையும் சிற்பக்கலைக்கு செய்த அவமரியாதை என்று கொள்வதா, அறியாமை என்று கொள்வதா, அவதூறு என்றே கொள்வதா?

என் அஜந்தா பயணம்
அஜந்தா ஓவியங்களை முதன்முதல் தை மாதம் 2006ல் நேரில் சென்று பார்த்தேன். இனம்புரியா கோவமும் சோகமும் என்னை ஆட்கொண்டன. ஒரு ஓவியத்திலுள்ள ஒரு பாத்திரமோ, அவர்களது கதையோ ஒன்றையும் அடையாளம் காணமுடியவில்லை. அவை யாவும் புத்தரின் வாழ்க்கை சம்பவங்களும், அதிசயங்களும், புத்தரின் முற்பிறவியான பற்பல போதிசத்துவர்களின் கதைகள் என்பதே முக்கிய காரணம். அதற்குமுன் நான் அமர் சித்திர கதை காமிக்ஸ் புத்தகங்களிலும், அம்புலிமாமா பத்திரிகை கதைகளிலும் பார்த்து ரசித்த ஓவியங்களுக்கும் அஜந்தா ஓவிய பாணிக்கும் சம்பந்தமேயில்லை. மளிகை கடைகள் இலவசமாய் தரும் நாள்காட்டியிலோ, ராஜா ரவி வர்மனின் ஓவியத்திலோ, அங்கும் இங்கும் சில கோவில்களில் கண்ட ஓவியங்களிலோ காணும் கலை வடிவங்கள், உருவங்கள், அங்க இலக்கணங்கள், ஆடைகள், நிறங்கள்... இவை ஒன்றுக்கொன்று வேறுபட்டாலும், அஜந்தா ஓவியங்களோடு ஒப்பிடும் போது வேறு யுகத்து வேறு நாட்டு வேறு பண்பாட்டு கலையை பார்க்கிறோமோ என்ற ஐயம் ஏற்பட்டது.

அஜந்தா குகை 17
படம் - சித்தார்த் சந்திரசேகர்

அஜந்தா குகை 2 - சேதமான ஓவியம்
படம் - ர கோபு

அஜந்தா ஓவியத்தின் கலையோ, வரலாறோ, ஓவியர்களின் திறமும் நுணுக்கமும் புறிந்துகொள்ளவோ அனுபவிக்கவோ அடிப்படை ஞானம் கூட எனக்கு அன்று இல்லை. திகைக்கவும் திண்டாடவும் மட்டுமே ஞானம் திகழ்ந்தது. அங்கு வழிகாட்டிகள் மற்றவருக்கு சொல்லும் வர்ணனைகள் ஓரிரண்டு நிமிடம் காதில் பட்டாலும், தப்பாகவே தோன்றியது. ஏதோ ராஜா, ராணி, நாட்டிய பெண், பொறாமை, போட்டி, மரண தண்டனை, என்று அவர்கள் சினிமா தொலைகாட்சி கதைகளை அங்கே கோர்த்துவிடுவதாகவே எனக்கு தோன்றியது. அங்கும் இங்கும் சிதைந்து உடைந்து கிடந்த சில ஓவியங்களின் பரிதாப நிலையும், மிஞ்சியிருந்த சில ஓவியங்கள் மேலே சமகாலத்து கயவர்கள் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் தங்கள் பெயர்களை கிறுக்கியிருந்தது வெறுப்பூட்டியது. அவர்கள் மீதும் பாரத சமூகம் மீதும் நம் கல்வி மீதும், ஏன் ஆசிரியர் கல்கி மீதும் கூட கோபம் பொங்கி வழிந்தது. என் தம்பி ஜெயராமன் அருகில் வந்து, குகை பின்சுவரிலிருந்த புத்தர் சிலையை காட்டி, “அவரே இரண்டாயிரம் வருஷமா இதை எல்லாம் பார்த்து அமைதியா இருக்கார், உனக்கு ஏன் இவ்வளவு கோபம்,” என்றான். ஓரிரு நிமிடம் புத்தரை பார்த்தேன்; அவர் முகத்தில் தோன்றும் சாந்தம் ஒரு தொத்துவியாதி; அமைதியானேன்.

தன் கையிலிருந்த திராட்சை பையை திருடிய குரங்கின் மேலுள்ள கோபத்தையும், குகை குகையாய் ஏறி இறங்கிய கோபத்தையும் என் தங்கை தேவசேனா மீது அவள் மகள் சினேஹா செலுத்தினாள்; அவளுக்கு புத்தர் சாந்தம் அளிக்கவில்லை; தேவசேனா மணிமேகலையாக மாறவேண்டியிருந்தது.

சுமார் ஐந்து வருடத்திற்கு பின் ஐப்பசி மாதம் நவம்பர் 2010ல் தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் அஜந்தா எல்லோரா கலை உலாவின் பயிற்சி உரைகள் தொடங்கின. முப்பது ஆண்டுகளாக பற்பல அஜந்தா புத்தகங்களை படித்து, அவற்றின் கலையின் ஆழமும் நுணுக்கமும் வரலாறும் உணர்ந்த பேராசிரியர் சுவாமிநாதன், எங்கள் வழிகாட்டி. வைகாசி மாதம் (ஜூன்) அவரிடம் அவர் எழுதிய அஜந்தா புத்தகத்தை வாங்கி படித்தேன். ஓரிரு மாதம் கழித்து திருப்பி கொடுக்கும் போது, நீதான் இந்த புத்தகத்தை படித்த முதல் ஆள் என்றார். சின்ன ஆனந்தமும் பெரிய ஆதங்கமும் அவர் குரலில் தொனித்தன. நான் திகைத்து நின்றேன். “உனக்கு முன்னாடி எங்க அண்ணா படிச்சார் ஆனால் அது பிழை நடை பார்த்து திருத்தும் பணி.” அவர் அண்ணா கல்கட்டா கிருஷ்ணமூர்த்தி, வங்காள மொழியில் சாதனைகள் படைத்து பெரும் விருதுகள் பெற்ற எழுத்தாளர்.

அஜந்தாவை மட்டுமல்ல, இந்திய ஓவிய மரபை, அதன் மகத்துவத்தை புரிந்துகொள்ள சுவாமிநாதன் புத்தகம் ஈடற்றது. ஆனந்த குமாரசாமி, சிவராமமூர்த்தி, அரவிந்த கோஷ், ஸ்டெல்லா கிராம்ரிச் போன்ற கலைஆய்வு ஜாம்பவான்கள் எழுதிய நூல்கள் மட்டுமல்ல, மதன்ஜீத் சிங், பெனாய் பெஹல், லேடி ஹெர்ரிங்காம், வால்டர் ஸ்பிங்க், டெய்டர் ஷிங்லாஃப், புத்த ஜாதக கதைகள், இந்திய தொல்லியல் துறை, என்று நீண்ட வரிசையாக அஜந்தாவை மட்டும் விவரித்த நூல்களை படித்து ஆய்ந்து ஒரு நூலை படைத்துள்ளார் சுவாமிநாதன். கிட்டத்தட்ட உவேசா சங்க இலக்கியத்துக்கு எழுதிய விளக்கவுரை போல் அஜந்தா ஓவியங்களை ஒரு ஆர்வலன் புரிந்துகொள்ள உதவும் அரும்பத உரை.

அயல்நாட்டு ஓவியங்கள்
லியோனார்டோ டா வின்சியின் மோனா லிசா, கடைசி விருந்து (லாஸ்ட் சப்பர்), மைக்கேல் ஏஞ்செலோவின் சிஸ்டைன் சேப்பல் விதான ஓவியம், பிகாஸோவின் லா குயர்ணிகா, ரெம்பிராண்டின் அல்லிமலர்கள், வேன் கோவின் சுயஓவியம் போன்ற ஐரோப்பிய ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை. இதைப்போல் இந்திய ஓவியங்கள் ஏதேனும் புகழ்பெற்றவையா? பண்டைய சீன பாரசீக எகிப்திய கிரேக்க ஓவியங்கள்? வெகு சிலருக்கு மட்டுமே தெரியும் என்று நினைக்கிறேன்.

வினா பட்டியல்
வாசகரே, இப்பொழுது சில கேள்விகள் கேட்கிறேன். எத்தனை கேள்விகளுக்கு பதில் தெரியும் என்று நீங்களே கணக்கிட்டுக்கொள்ளுங்கள். 

  1. அஜந்தாவில் சராசரியாக எத்தனை ஓவியங்கள் உள்ளன?
  2. அவை எந்த காலத்தவை?
  3. ஓரிரு ஓவியர்களின் பெயர் சொல்லமுடியுமா?
  4. ஐந்து அஜந்தா ஓவியங்களின் பெயர்கள் சொல்லமுடியுமா?
  5. அஜந்தவை போல் பாரத நாட்டில் வேறெங்கு அவ்வளவு சிறப்பான ஓவியங்கள் உள்ளன? மூன்று இடங்கள் சொன்னால் போதும், இவற்றை க,ச,ட என்று வைத்துக்கொள்வோம்
    1. க - ?
    2. ச - ?
    3. ட - ?
  6.   க, ச, ட இடங்களிலுள்ள ஒரு சில ஓவியங்களின் பெயர் என்ன (மோனா லிஸா, கடைசி விருந்து போல).
  7.  அவை எந்த காலத்தவை? நூற்றாண்டு தெரிந்தால் போதும்
  8.  வரைந்த ஓவியர்கள் யார்?
  9. அஜந்தாவை போலவோ, க,ச,ட தலங்களை போலவோ, அதே காட்சியையோ கருத்தையோ காட்டும் ஓவியங்கள், வேறு எங்காவது இந்தியாவிலோ, வெளி நாடுகளிலோ உள்ளனவா?(அருங்காட்சியகத்தில் இருப்பினும் பரவாயில்லை)
  10. ஓவியங்களை பற்றி ஏதேனும் புத்தகத்தை படித்துள்ளீர்களா?


இந்திய ஓவியக்கலை பற்றிய இந்த எளிய வினாத்தாளில் எத்தனை விடைகள் தெரிந்தன? 

பதில் தெரியாத சிலருக்கு, இந்த கேள்விகள் காழ்ப்பையோ சோர்வையோ தூண்டலாம். மன்னிக்கவும்; இந்த வினாக்காளில் ஒரு கேள்விக்கும் 2010க்கு முன் எனக்கு பதில் தெரியாது; அந்த ஆதங்கமும் அறியாமைமும் வருத்தமும் தான் இந்த கட்டுரையை எழுதத்தூண்டின. இந்த கேள்விகள் என்னை இரண்டு மூன்று வருடங்களாக என்னை வாட்டுகின்றன. 

யாம் பெற்ற கடுப்பு இவ்வையகமும் பெற…

இந்திய அறிவியல் மரபிலும் வரலாற்றிலும் இதே ஆதங்கமும் வருத்தமும் தோன்றி சில வருடங்களாகின. அது வேறு கதை.
சரி; அடுத்த துன்புறுத்தல். இதே பத்து கேள்விகளில் ஓவியம் என்ற சொல்லுக்கு பதில் சிற்பம் என்று போட்டுக்கொண்டு, அஜந்தாவுக்கு பதில் மாமல்லபுரம், எல்லோரா, கோனாரக், பாதாமி, என்று ஏதோ பிடித்த அல்லது தெரிந்த இடத்தை போட்டுக்கொண்டு, மீண்டும் விடை எழுதுங்கள். எத்தனை பதில்கள் கிடைத்தன?

அடுத்த கட்டுரையில் எனக்கு தெரிந்த பதில்களை அளிப்பேன். நான் ஐம்பெரும் ஓவியம் என்று கருதுபவை யாவை என ஓரிரு பட்டியலை தருவேன். உங்கள் விடைகளையோ மறுப்புகளையோ பிடித்த பட்டியலையோ கீழே எழுதவேண்டுகிறேன்.

கல்விக்கூடத்தில் கலைகளின் நிலைமை
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சுதேசி, இந்தியன் என்ற பெருமையும் ஆவலும் கொண்ட சமூகமாக இருந்தால் இந்த கேள்விகள் அனைத்திற்கும் நமக்கு விடை தெரிந்திருக்கும். மதச்சார்பின்மை என்பது இந்துமத கலைகளை பெரிதுபடுத்தாதது என்ற வைத்துக்கொள்வோம். அப்பொழுது இந்து மரபில் பெருமை, இந்துத்வா என்ற எண்ணமே இருந்தவர்களுக்காவது சமீபத்திலாவது இந்த கேள்விகளின் விடைகள் தெரிந்திருக்கும். ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு சுதேசி என்ற பெருமையோ ஹிந்து மரபு என்ற பெருமையோ இரண்டுமே இல்லைபோலும்.

அரசு நிர்ணயிக்கும் கல்வி திட்டங்களில் மட்டுமல்ல, சமூகத்தின் எண்ண ஓட்டத்திலேயே இந்த சிந்தனைகள் இல்லை. ஆர்வம் இல்லை. தாகம் இல்லை. அச்சு பத்திரிகைகளிலோ, தொலைகாட்சியிலோ, சினிமாவிலோ ஏதும் இல்லை. பாரம்பரிய ஓவிய சிற்ப கலையை ரசிக்கும் இந்தியர்கள் மிக மிக சிறிய சமூகமாகவே உள்ளனர். நாங்கள் தேசத்தின் மனசாட்சி என்று தங்களுக்கே பட்டம் வழங்கிக்கொண்ட எழுத்தாளர்களும் அறிவுஜீவிகளும் மரபோடு உறவில்லா செயற்கை தீவுகளாக வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது. நம்மை விட, இருநூறு ஆண்டுகளாய் இந்திய சிற்பங்களையும் ஓவியங்களையும் ஆராய்ந்து, பல நூல்கள் எழுதி, கற்று கற்பித்து களிக்கும் ஐரோப்பியர்களே அதிகம். கிழக்காசியாவில் ஒரு சிலர் தேரலாம். நம் கல்லூரிகளும் பள்ளிகளும் ஐரோப்பிய கலை ஆர்வலரை தான் வளர்க்கின்றனவோ?

காலனிய ஆதிக்க நாடுகளாகிய இங்கிலாந்து பிரான்சு நெதர்லேண்டு பெல்ஜியம் இவையோடு காலனி ஏதுமற்ற  இத்தாலி ஜெர்மனியில் உதித்த தொழில் புரட்சி, இந்தியாவிலும் தோன்றாத குறையை தீர்க்க, இந்திய அரசும் மக்களும் அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் காட்டி, நம் கல்வி திட்டத்தில் கலைகளை மிக பின்தள்ளிவிட்டோம். ஆரம்பப் பள்ளிகளிலேயே இந்த ஓரவஞ்சனை தொடங்கிவிடுகிறது. பொறியியல் மருத்துவம் சட்டம் நிர்வாகம் ஆகிய தொழில்களுக்குள்ள சமூக மரியாதையும் அந்தஸ்தும் மற்ற தொழில்களுக்கு பொதுவாக இல்லை. சமீபத்தில் சில மருத்துவர்களின் ஊழலினாலும், சில வக்கீல்களின் ரௌடித்தனத்தினாலும், சில பொறியாளர்களின் திறமையின்மையாலும் சம்பளச்சரிவினாலும் இது பிரம்மாண்டமாக மாறுகிறது. ஒருவேளை இதனால் நம் கல்வி அமைப்பும் மாறலாம். கலைக்கு பள்ளிக்கூடங்களில் கொஞ்சம் இடம் கிட்டலாம்.
ராமு அரக்கட்டாளை பேராசிரியர் பாலுசாமிக்கு வேதவல்லி விருது அளித்த நிகழ்விலும், சென்னை அருங்காட்சியகத்திலுள்ள அமராவதி சிற்பங்களை பற்றி தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையில் நான் ஆற்றிய உரையிலும் இந்த கேள்விகளை கேட்டேன். தூண்டிய சலனம் அன்றே அடங்கிவிட்டது.

தொடரும்.


Tuesday, 31 May 2016

சிற்பத்தில் இந்திரன்


கோயில்களில் நாம் காணும் சிறபங்களிலும் ஓவியங்களிலும் புராணங்களில் சொல்லப்படும் சமபவங்களையே காணலாம். பிரம்மர், விஷ்ணு, சிவன், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி, முருகர், விநாயகர் மட்டுமே வெவ்வேறு தெய்வ வடிவங்களில் அதிகமாக காணமுடியும். இவற்களை தவிர சில இடங்களில் சூரியனுக்கு கோயில்கள் உள்ளதால் சூரியனின் சிலைகளை காணலாம்.

வெகு சில கோவில்களிலேயே இந்திராதி தேவர்களையோ, வசுக்களையோ காணலாம். மிகவும் அபூர்வம் என்றே கருதவேண்டும். இந்திரன் வருணன் அக்னி வாயு போன்ற தேவர்களுக்கு வேத காலத்தில் முக்கியத்துவம் இருந்ததாகவும் பின்னர் சைவ வைணவ நம்பிக்கைகள் ஓங்க, அவர்களின் முக்கியத்துவம் குறைந்ததால் வழிபாடும் குறைந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் யூகிக்கின்றனர். வேள்வி செய்தே இந்த தேவர்கள் வழிப்பட்டதாகவும், புத்தரின் மறைவிற்கு பின்தான் கோவில்கள் கட்டும் வழக்கம் பாரதத்தில் தோன்றியதென்றும் ஒரு கருத்து உண்டு. சூரியனை தவிற முப்பத்துமூவரி எந்த தேவருக்கும் கோயில் இல்லாததும் இக்கருத்துக்கு வலுவூட்டுகிறது.

புதிதாக எதை கண்டாலும் லயிக்கும் எனக்கு, அஜந்தாவிலும் காஞ்சியிலும் சில அதிர்ச்சிகள் காத்திருந்தன. 2006இல் முதன்முதல் அஜந்தா சென்ற போது அது சம்பந்தமாக கல்கியின் “சிவகாமியின் சபத”த்தை எதையும் படித்திருக்கவில்லை. அங்கிருக்கும் எல்லா ஓவியங்களும் புரியா புதிராகவே விளங்கின. தொல்லியல் துறையின் சிறந்த மலிவான் அஜந்தா புத்தகம் வாங்கவேண்டுமென்றோ, மற்ற ஏதேனும் சிறந்த புத்தகங்கள் இருக்கும் என்றோ எனக்கு ஏனோ எண்ணமே உதிக்கவில்லை! இப்பொழுதும் நினைத்தால் வெட்கம் பொங்கும். பின்னர் 2010இல் பேராசிரியர் சுவாமிநாதன் எழுதிய நூலை படித்தபின்னரும் மதன்ஜீத் சிங், டீட்டர் ஷ்லிங்க்லாஃப், ஸ்டெல்லா கிராம்ரிச், போன்ற மேற்கத்திய கலை ஆர்வாளர்கள் எழுதிய நூல்களையும் படித்தபின்னும் அஜந்தாவின் ஓவியங்கள் பற்றி கொஞ்சம் ஞானோதயம் பிறந்தது. 2010இல் கலை உலா சென்ற போது அஜந்தா ஓவியங்களை ரசிக்கமுடிந்தது.
புத்த மத கதைகளிலும் இந்திரன் பிரம்மா லட்சுமி சரஸ்வதி ஆகிய தெய்வங்கள் உண்டு. புத்த ஜாதக கதைகளில் வரும் பாத்திரங்களின் பல பெயர்கள் புராணங்களிலும் மகாபாரதத்திலும் வருபவை.


சுவர்க்கலோகத்தில் வீற்றிருந்த புத்தரை பூமியில் பிறக்குமாறு தேவர்கள் வேண்டிக்கொள்ள, அவரும் அதற்கிணங்கினார். லும்பினியில் புத்தர் மாயாதேவிக்கு பிறந்த பொழுது அவரை காண இந்திரனும் பிரம்மாவும் இறங்கி வந்தனர். இச்சம்பவங்களை ஓவியமாக அஜந்தாவின் இரண்டாம் குகையில் காணலாம். கையில் குழந்தை சித்தார்த்தனை இந்திரன் ஏந்த, பேருவகையுடன் அருகே நின்று பிரம்மர் பார்க்கிறார். அவருக்கு சாமரம் வீசும் பணிப்பெண் முகத்தில் ஆச்சரியம் மிளிர்கிறது.

அஜந்தா- குழந்தை சித்தார்த்தனை ஏந்தும் இந்திரன் அருகே பிரம்மா, எதிரே மாயாதேவி
முதல் குகையிலும் பதினேழாம் குகையிலும் சிபி சக்கரவர்தியின் ஜாதக கதை ஓவியங்களை காணலாம். ஆனால் தராசில் தன் சதையை வைத்தபின் சிபிக்கு இந்திரனும் யமனும் காட்சியளிக்கும் மிகவும் சேதம் அமைந்துள்ளதால் தெளிவாக தெரிவதில்லை.

பதினேழாம் குகையின் வெளிச்சுவரில் இந்திரன் சுவர்க்கத்திலிருந்து கீழே இறங்கி வரும் காட்சியை காணலாம். இந்த ஓவியம் இன்றும் பிரகாசமாக இருக்கிறது. பின்புலத்தில் மேகங்கள் பஞ்சுபஞ்சாக அணிவகுக்க, இந்திரனின் இடது புறம் இரு தேவகன்னிகையர் ஜால்ராவில் தாளத்தை வாசித்து இறங்கி வர, மற்றும் ஒருத்தி நீண்ட புல்லாங்குழலூதுகிறாள். இந்திரனுக்கு வலது பக்கம் நீண்ட ஒரு கருவியையும், இந்திரனின் இடுப்புயரத்தில் வேறொருவன் ஒரு குடம் பொருத்திய கருவியையும் வாசித்தப்படி இந்திரம் பூலோகம் நோக்கி கீழே இறங்குகிறான்.

அஜந்தா : பறந்து இறங்கும் இந்திரன்
இந்திராதி தேவர்களும் முனிவரும் சூழ கைலாயத்தில் சிவனும் பார்வதியும் வீற்றிருக்க, சுந்தரமூர்த்தி நாயனாரும் சேரமான் பெருமாளும் சென்றடையும் ஓவியம் தஞ்சை பெரிய கோவிலிலுள்ளது. இதில் இந்திரனை மட்டும் தனியாக அடையாளம் காண்பது கடினம். டிசம்பர் 2014 தமிழ் பாரம்பரிய அறக்கட்டளையின் பேச்சுக் கச்சேரியில் முனைவர் நாகசாமி, இந்த ஓவியத்தை வர்ணித்து நடத்திய உரையில், ஓவியர் சந்துரு வரைந்த கோட்டோவியத்தை திரையிட்டார். சந்துருவின் கோட்டோவியத்தில் இந்த கைலாச காட்சியின் பிரம்மாண்டத்தை உணரலாம். இந்திரனை தனியாக அடையாளம் காண இயலாததை நீங்களும் உணரலாம். அடையாளம் தெரிந்தால் தயவுசெய்து எனக்கு சொல்லவும்.

தஞ்சை பெரிய கோவில் - கைலாச காட்சி ஓவியம்

தஞ்சை கோவில் கைலாச காட்சி - சந்துருவின் கோட்டோவியம்
காஞ்சி கைலாசநாதர் கோவிலில் ஜலந்தரன் பிறந்த சம்பவத்தின் சிற்பத்தை காணலாம். இந்திரன் சிவனை பார்க்க கைலாசம் செல்ல அவனை நுழையவிடாமல் சிவகணங்கள் தடுக்கின்றன; எள்ளி நகையாடி சேட்டைகள் செய்து, இந்திரனுக்கு கோபமூட்டுகின்றன. இந்த கணங்களில் ஒரு கணத்திற்கு மட்டும் நான்கு கைகள் உள்ளன. வாசலில் ஆரவாரம் கேட்டு சிவனே ஒரு கணமாக தோன்றி கணங்களோடு ஒருவராக இந்திரனை துன்புறுத்துகிறார். ஆத்திரம் அடைந்த இந்திரன், நான்கு கை கொண்ட பூதகணமா என்று கூட யோசிக்காமல் எல்லா கணங்களையும் தாக்க வஜ்ராயுதத்தை எடுக்க, என்ன மடைமை இந்திரா என்னும் பாவனையில் பிரம்மனும் அக்னியும் அவன் கைகளை பிடிக்கின்றனர். பின்னால் நின்று விஷ்ணு வேண்டாம் என்று தர்ஜன முத்திரையால் எச்சரிக்கை விடுக்கிறார். காமவில்லை எடுத்த மன்மதன் சாம்பலானது போதாதா சிவனை எதிர்த்து வஜ்ராயுதமெடுத்தால் நெற்றிகண் திறக்காதா என்று அவர்கள் சொல்லுமுன் நெற்றிக்கண் திறந்துவிடுகிறது. சட்டென்று ஒரு நீர் நிரைந்த குடத்தை எடுத்து அவர்கள் காட்ட நெற்றிக்கண்ணின் பொறி அக்குடத்தில் விழ, சிவனின் அம்சமாக ஜலந்தரன் பிறக்கிறான்.

இந்த சிற்பத்தை காமெராவில் எளிதில் படமெடுக்க முடியாது. முன்னிருக்கும் தூண்கள் மறைக்கும். நேரில் பார்த்தாலே முழு அழகும் சிற்ப அமைப்பு புரியும்; ரசிக்கலாம். இங்கே இரண்டு படங்களாக பார்க்கலாம்.

காஞ்சி கைலாசநாதர் கோவில் -
பிரம்மனும் அக்னியும் தடுக்கும் இந்திரன்

வில்லேந்தும் நாலு கை கணமாக சிவன்!
கீழே கைக்கூப்புவது - ஜலந்தரன்

எல்லோரா கைலாசநாதர் கோவிலில் – பதினாறாம் குகையில் – பிரம்மாண்ட வீற்றிருக்கும் சிவன் சிலை உள்ளது. சிவனை சூழ்ந்த தேவர்களில் ஒருவனாக ஒரு யானை மேல் வீற்றிருக்கும் இந்திரனை காணலாம். இந்திரனுக்கு அருகே எருமை மேல் யமனும், ஆடு மேல் அக்னியும் உள்ளனர்.

எல்லோரா கைலாசநாதர் கோவில்
சிவனுக்கு இடதுபக்கம் - இந்திரன் யமன் அக்னி

புனேவிலிருந்து மும்பை செல்லும் வழியிலுள்ள பாஜா குகை ஒன்றில் சூரியனையும் இந்திரனையும் காணலாம். குதிரை பூட்டிய தேரில் சூரியனும் ஐராவதம் என்ற யானை மேல் பவனிவரும் இந்திரனும். இவை இரண்டுமே அபூர்வ பௌத்த சிற்பங்கள். சாதவாகனர் காலத்தவை, கிபி முதல் நூற்றாண்டு.

பாஜா குடைவரை - சூரியனும் இந்திரனும்
வாதாபியிலுள்ள சாளுக்கியர் கால குடைவரை கோயில்களில், சில விதானங்களில் தெய்வ சிற்பத்தை சூழ்ந்து அஷ்ட திக்பாலர்களை காணலாம். கிழக்கு திசைக்கு திசை தெய்வம், யானை மேல் அமர்ந்துள்ள இந்திரன். வாதாபி மூன்றாம் குகையில் பெருமண்டபத்து விதானத்தில் பிரம்மனை மையமாகவும் சுற்றி அஷ்ட திக்பாலரும் அமைந்த சிற்பங்கள் காணலாம். இதேபோல் விஷ்ணுவை மையமாக வைத்து அஷ்ட திக்பாலரால் சூழ்ந்த நிலையையும் காணலாம். இதில் யானை மேல் அமர்ந்தகிழ்ககு காவலனாக இந்திரன் உள்ளான்.

வாதாபி மூன்றாம் குகை
பிரம்மனை சுற்றி திக்பாலர்

வாதாபி மூன்றாம் குகை
விஷ்ணுவை சுற்றி திக்பாலர்
படங்களுக்கு நன்றி
அஜந்தா - சித்தார்த் சந்திரசேகர்
எல்லோரா - அரவிந்த் வெங்கட்ராமன்
வாதாபி - விகே ஸ்ரீநிவாசன்
தஞ்சை - முனைவர் நாகசாமி, ஓவியர் சந்துரு

தொடர்புள்ள கட்டுரைகள்
2. கோயில்களில் விண்ணியல் சிற்பங்கள் 
5. மாமல்லபுரத்து உழைப்பாளர் சிலை 
6. குந்தவை ஜீனாலய ஓவியங்கள் 
7. Paranjothi Yathirai - Ajantha Ellora Site Seminar

Wednesday, 6 April 2016

ஞானதேவதைகள்

அமெரிக்கா ஒரு அறிவியல் நாடா ஆன்மீக நாடா? கிறுஸ்துவ நாடா மதச்சார்பற்ற நாடா? மரபு போற்றும் நாடா முற்போக்கு நாடா?

கல்லூரி காலத்து கலை ஆர்வம்

நான் 1991இல் படிக்க அமெரிக்கா செல்லும் வரை, அந்நாட்டை அறிவியல் துறையில் தலைத்தோங்கும் நாடென்றே நினைத்துவந்தேன். எடிசனின் நாடு, பெஞ்சமின் ரைட் சகோதரர்களின் நாடு, கம்ப்யூட்டர் உகம் படைத்த நாடு, நோபல் பரிசுகளை அள்ளி குவிக்கும் நாடு, மேற்படிப்புக்கு ஈடு இணையற்ற நாடு, அற்புதமான சினிமாக்களை தயாரிக்கும் நாடு, ராணுவ வல்லரசு, பொருளாதார வல்லரசு, வசதிகளும் பேச்சுரிமையும் பல வித சுதந்திரங்களும் கோலோச்சும் நாடு என்றெல்லாம் நம்பினேன். இவை முக்கால்வாசி அங்கே உண்மையாகவே இருந்தன. 

கலை ஓவியம் சிற்பம் பாரம்பரியம் பற்றி பெரிதாக அப்போது எனக்கு ஆர்வம் இல்லை. அமெரிக்காவில் அவற்றை தேடவேண்டும் என்ற எண்ணமே இல்லை. அப்பொழுது கணினித்துறை படிப்பில்தான் ஆர்வம். சினிமாவில் பலவிதத்தில் பார்த்திருந்தாலும், நேரில் கண்ட செல்வ கொழிப்பு பிரமிக்கவைத்தது. பெரிதாக கவர்ந்தது தொலைகாட்சி பெட்டியே. 1991இல் தூர்தர்ஷண் மட்டுமே பாரத்தில் தொலைகாட்சி. ஸ்ரீவில்லிபுத்தூரில் படிக்கும் போது அங்கே விடுதியில் இலங்கை ரூபவாஹிணியில் தமிழ் மற்றும் அமெரிக்க ஆங்கில தொடர்களை பார்க்க நேர்ந்தாலும், அமெரிக்காவில் கண்ட ஐம்பது தொலைகாட்சி சேனல்களும் மற்ற கலைகளை பற்றிய எண்ணத்தையே உருவாக்கவில்லை.

டாவின்சியும் மைக்கலேஞ்சலோவும் ஏதோ வரலாற்று நபர்கள். அவர்களது ஓவியங்கள் பெரிதும் அழகாக எனக்கு இன்றுவரை தோன்றுவதில்லை. நார்மன் மெய்லர், ஜாக்சன் பால்லாக் போன்றவர்கள் பிரபலமானாலும், அதிலும் ஈடுபாடே இல்லை. இயற்கை எழிலுக்கு அவை போட்டியே இல்லை என்பது அன்றைய மனப்பான்மை. 1999இல் டாவின்சியின் நூல்களை சியாட்டில் அருங்காட்சியகத்தில் வைத்தபோது பார்க்க ஆசையிருந்தாலும் கூட்டத்தை கண்டு மிரண்டு போகவில்லை. அந்நகரத்து ஃப்ரை அருங்காட்சியகத்தில் வேன் கோ, ராஃபாயல், ககேன், மோனே, ரெம்ப்ராண்ட் வேறு சிலரின் ஓவியங்களை கண்டேன்; நுண்கலை உணர்வே எனக்கு இல்லை; ஓவிய ரசனையை வளர்த்துக்கொள்ளவில்லை; அவற்றில் ஒரு ஈர்ப்பு ஏற்படவில்லை. 

உண்மையில் குமுதம் விகடன் கல்கி கதைகளுக்காக வரையப்பட்ட படங்களும், சூப்பர்மேன் பேட்மேன் டிண்டின் ஆஸ்டெரிக்ஸ் கேல்வின் & ஹாப்ஸ் போன்ற காமிக்ஸ் எனப்படும் தூரிகை படங்கள் தந்த மகிழ்ச்சியை அந்து உலக புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகள் தரவில்லை. நவீன கலை நகைச்சுவை பொருளாகவே தெரிந்தது.

அமெரிக்க தேசிய நூலகம்

சென்ற 2015இல் அமெரிக்காவுக்கு சுற்றுலாவாக சென்றேன். அறிவியல் யாத்திரை என்றே மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். ஆனால் அங்கங்கே கலைகளையும் பார்த்து ரசிக்க நேரந்தது. குறிப்பாக  நான்கு நாட்கள் வாஷிங்டன் நகரின் அருங்காட்சியகங்களிலும், அந்நாட்டு பாராளுமன்றத்தின் நூலகத்திலும் சிற்பங்களும் ஓவியங்களும் பல கதைகள் சொல்லின. 

காங்கிரஸ் என்ற பெயர்கொண்ட அமெரிக்க பாராளுமன்றத்திற்கு ஒரு தனி நூலகம் தேவை என்று கருதி, மூன்றாம் ஜனாதிபதி தாமஸ் ஜெஃபெர்ஸன் (நற்றமழில் தாமசு செப்பர்சன்) நினைத்து அதை அமைத்தார். பின்னர் அது மிக முக்கிய நூலகமாக மாறியது. தெய்வ நம்பிக்கையுள்ள மதசார்பற்ற அரசை உருவாக்கவேண்டும் என்பது அமெரிக்க குடியரசின் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கும் அரசியலமைப்பு சட்டத்தை சமைத்தவர்க்கும் தோன்றிய ஒரு முக்கிய கருத்து. அவர்கள் பெரும்பாலும் கிறுத்துவர்களாகவே இருந்தனர்; ஆனால் கிறுத்துவத்தின் பல்வேறு பிறிவுகளை சித்தாந்தங்களை சேர்ந்தவராயிருந்தனர். அரசும் சமூகமும் அமைக்க ஜூலியஸ் சீஸருக்கு முந்தைய ரோமாபுரி குடியரசும் ஏதென்ஸ் சைரக்கியூஸ் போன்ற கிரேக்க நகரங்களும் அவர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தன.

முதலில் அமைத்த நூலகத்தை 1812இல் நடந்த போரில் பிரித்தானிய படை எரித்துவிட்டது. அந்தப்போரிலும் அமெரிக்காவே வென்றது. எரிந்த நூலகத்தை மீட்டமைக்க தாமசு செப்பர்சன் தன் சொந்த நூல்களை தானம் செய்தார். அதை வைத்து பல ஆண்டுகள் நடத்தினர். பெரும் நூலகம் ஒன்றைகட்ட நிதி ஒதுக்கி பின்னர் 1897 அதை கட்டி முடித்தனர். அதுவே நாம் இன்று காணும் நூலகம்.


காங்கிரஸ் நூலகம் முகப்பில் ஜெயராமன்

கலைகளுக்கும் சித்தாந்தங்களுக்கும் இத்தாலியில் தொடங்கிய மறுமலர்ச்சி காலம் அவர்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருந்தது. அறிவியலில் ஃப்ரான்சிஸ் பேக்கன், கெலீலியோ, ரெனே தேகார்த், ஐசக் நியூட்டன், ஜான் ஹூக், ராபர்ட் பாயில், வோல்டேர் ஆகியோர் வளர்த்த தத்துவங்கள் ஒரு ஊக்கத்தை தந்தது. அக்காலத்து மாபெரும் அறிவியல் மேதாவி பெஞ்சமின் ஃபிராங்க்ளின் ஒரு முக்கிய சுதந்திர போராளி. இந்திய விடுதலை போராளிகளுக்கு ரவீந்திரநாத் தாகூரை போல், அவர் ஒரு வழிகாட்டி. ஜனநாயகம் செழிக்க அதன் பிரதிநிதிகளுக்கு கல்வியும் தகவலும் முக்கியம் என்பதால் இதை பிரதிபலிக்கும் விதத்தில் காங்கிரசின் நூலகத்தை அமைத்துள்ளனர்.

மகாமண்டபத்தில் ஓவியங்கள்

ஓவியப் பாவைகள்

அழகும் பிரம்மாண்டமும் செல்வமும் மிளிரும் வகையில் நூலகத்தின் கட்டட கலையும் அலங்காரமும் அமைந்துள்ளன. கண்ணாடி ஜன்னல்களின் அமைப்பும் கூறை ஜன்னல்களின் அமைப்பும், தூண்களின் கம்பீரமும், பார்ப்பவரின் கண்ணை பறிக்கும்.

இதில் கிறுஸ்துவ சின்னங்கள் ஏதும் மையமாக இல்லை. தேசிய சின்னங்கள் என்றுகூட எதையும் சொல்லமுடியாது. சுதந்திர போராட்டத்தை சித்தரிக்கும் ஓவியங்களோ, தலைவர்களின் ஓவியங்களோ, நாட்டின் இயற்கை எழிலோ ஏதும் இல்லை.

மாறாக, நூலக மகாமண்டபத்தின் சுவர்களில் ஞானதேவதைகளின் ஓவியங்களை தீட்டியுள்ளனர். பல்வேறு செல்வங்களை நாம் அஷ்டலக்ஷ்மியாக ஐதீக மரபில் கொள்வது போல் தொன்மையான கிரேக்க மக்களும் ரோமாபுரியினரும் பல தெய்வங்களையும் தேவதைகளையும் வழிப்பட்டனர். அந்த தெய்வங்களை தழுவாமல், ஆனால் அந்த மரபை தழுவி, கணிதம் விண்ணியல் புவியியல் தாவரவியல் விலங்கியல் ரசாயனம் என்று தலா ஒரு பெண் வடிவம் அமைத்து சுவற்றின் மேல் ஓவியங்கள் தீட்டிப்பட்டுள்ளன. கலைகளுக்கும் பல்வேறு ஓவியங்கள் உள்ளன. இந்திய மரபில் பருவங்கள் ஆறு; ஐரோப்பாவில் நான்கு – வசந்தம், கோடை, இலையுதிர், பனிக்காலம். இவை நான்கும் சிற்பமாகவும் ஓவியமாகவும் உள்ளன.
உடற்பயிற்சியும் விளையாட்டும் கிரேக்க காலத்திலிருந்து முக்கியமாக கருதப்பட்டு, ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் நினைவாகவும் இரண்டு ஓவியங்கள் உள்ளன.

பழமொழிகளும் பொன்மொழிகளும் மரபின் அடையாளங்கள். ஷோக்ஸ்பியர் ஜெஃபெர்சன் போன்றவரின் பொன்மொழிகளை கல்வெட்டாய் செதுக்கி, அவற்றிற்கும் ஓவியப்பாவை வடிவம் அமைத்துள்ளனர்.

பார்க்கும் இடமெல்லாம் சிற்பங்கள் ஓவியங்கள். பளிச்சிடும் பளிங்கு தூண்களும், வெளிச்சத்தை பரப்பும் கண்ணாடி ஜன்னல்களும், சுவரிலும் கூறையிலும் போதிகைகளிலும் வண்ண

ஒளிமயமான அஜந்தா என்றே சொல்லலாம்.


தொல்லியல் தேவதை விண்ணியல் தேவதை
ரசாயன தேவதை புவியியல் தேவதை
கணித தேவதை இயற்பியல் தேவதை
இருபுறமும் அறிவியல் தேவதை ஓவியங்கள்


ஞான தேவதைகள்

அறியாமை ஒரு சாபம், வானுலகம் எய்த ஞானமே சிறகு

ஒத்துழைப்பு வீரம்
முயற்சி தேசபக்தி

வழிகாட்டும் சான்றோர்

இவற்றையெல்லாம் விளக்க, ஆர்வமும் வரலாறும் பேச்சுத்தெளிவும் அயரா பண்பும் கொண்ட பல வழிகாட்டிகள் சுற்றுலா வந்தோரை, பத்து நிமிடத்து ஒரு சுற்றுலா குழு வீதம், வழிநடத்தினர். பல்வேறு நகரங்களில் கண்ட பெரும் சிறப்பு இது. அமெரிக்காவின் வழிகாட்டிகளை நம்மை வியக்கவைக்கின்றினர். பாரதத்தில் பெரும்பாலும் இப்படி இல்லையே என்ற ஏக்கத்தில் நம்மை மூழ்கடிப்பார்கள். தம் நாட்டு வரலாற்றிலும் சாதனைகளிலும் பெருமை கொண்டவர்களாயினும், அவர்களின் நடுநிலைமை புகழதக்கது. என்னாட்டவர்க்கும் எக்கலைஞர்க்கும் சான்றாக திகழ்கிறார்கள்.

நூலகத்தில் வெவ்வேறு கண்காட்சிகள் உள்ளன. தாளில் முதல் அச்சிடப்பட்ட விவிலிய நூல் ஒன்றுள்ளது. செவ்விந்தியரின் மரபையும், முதலில் அமெரிக்கா வந்திறங்கிய இசுபானிய தேசத்தோரின் பண்டங்களும், மற்றும் பல பிறிவுகளும் உள்ளன. அதை வேறுமுறை அலசலாம்.

கலைவாணி மினெர்வா

வெளிமண்டபத்தை தாண்டி உள்ளே சென்றால் அற்புதமான ஒரு படிக்கும் அறை உள்ளது. இதற்கு போகும் வழியில் சுவர் உயர மினெர்வாவின் ஓவியம் நம்மை வரவேற்கிறது. 

மினெர்வா கலைகளின் தேவதை, சரஸ்வதிக்கும் சமம்.

கலைவாணி மினெர்வா
படிக்கும் அறையின் இரண்டாம் மாடிக்கு சென்று சுற்றுலா பார்க்க மட்டும் ஒரு பலகணி அமைத்துள்ளனர். சுற்றுலா வருவோருக்கு வட்டமான படிக்கும் அறைக்கு தரை தளத்தில் செல்ல அனுமதி இல்லை; அது ஆய்வாளர்களுக்கு மட்டுமே. அந்த வட்ட அரையின் விமானம் மசூதிகளை போல் வானியல் மையங்களைபோல் அரைகோளம். அங்கே பல சிற்பங்களும், கூரையில் ஒரு அசாத்திய ஓவியமும் உள்ளன. பின்னர் ஒரு நாள் அவற்றை பற்றி எழுதுகிறேன்.

ஒளிமயமான மகாமண்டபம்

சுட்டிகள்